கனவு கலைந்தது - தமிழ் மிரருக்காக சண்முகன் முருகவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2015 (வெள்ளிக்கிழமை)
இளைஞர்களே கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்றுரைத்த அக்கினிச்சிறகு இன்று பூவுலகத்தை விட்டு மேலுலகத்துக்கு கனவு காணச்சென்று விட்டது.
ஆம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், அணுவிஞ்ஞானியும், இந்தியாவின் ஏவுகணை மனிதன் என அழைக்கப்படுபவருமான டொக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், திங்கட்கிழமை மேகலாயாவின் ஷில்லோங்க் இந்திய மேலாண்மை நிறுவகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது நிலைகுலைந்து வீழ்ந்த அவர், உடனடியாக பெத்தனி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோதும், அதற்கு முன்பே அவரது உயிர் மாரடைப்பால் பிரிந்து விட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உள்ள சாதாரண ஏழை தமிழ் மீனவக்குடும்பத்தில் 1931ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், ஆஷியம்மா அவர்களுக்கும் புத்திரனாக அவதரித்த அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் தனது ஆரம்பக் கல்வியை இராமநாதபுரம் ஷ்வார்ட்ஸ் மெட்ரிகியுலேஷன் பாடசாலையில் பெற்றிருந்தார்.
தனது பாடசாலைக் காலத்தில் சராசரியான பெறுபேறுகளையே கலாம் பெற்று வந்தாலும், படிக்க ஆர்வமுள்ள மாணவனாகவும், அதற்காக நீண்ட நேரத்தை செலவிடுபவராகவும், முக்கியமாக கணித பாடத்துக்குக்காக நிறைய நேரத்தை செலவிடுபவராகவும் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கல்வியை முடித்திருந்த காலத்தில் தனது குடும்ப வறுமைநிலை காரணமாக பத்திரிகை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. தனது பாடசாலைக் கல்வியை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இணைந்தார். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் 1954ஆம் ஆண்டு பௌதிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். எனினும் இந்த பட்டப்படிப்பின் இறுதியில் பௌதிகவியலில் ஆர்வமில்லாது போனதால் நான்கு வருடங்கள் இந்த கற்கைநெறியில் நேரம் செலவிட்டதையடுத்து வருத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விண்வெளி பொறியியற் கற்கைநெறியை பூர்த்தி செய்யும் பொருட்டு 1955 ஆம் ஆண்டு சென்னைக்கு சென்றார். அங்கு சென்னை தொழில்நுட்ப நிறுவகத்தில் தனது முதுகலைமாணி பட்டத்தை 1958ஆம் ஆண்டு பூர்த்தி செய்திருந்தார்.
இங்கு கல்வி பயலும் காலத்தில் ஒருமுறை கலாம் தனது பெரிய திட்டமொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அதன் முன்னேற்றம் குறித்து திருப்தியடையாத கல்லூரி முதல்வர், இத்திட்டம் மூன்று தினங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும், இல்லையெனில் உமது உதவித்தொகை நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தார். எனினும் குறிப்பிட்ட காலக்கெடுவில் கலாம் நிறைவு செய்த பின்னர், கல்லூரி முதல்வர் கடினமான காலக்கெடுவை வழங்கி உன்னை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்ததாக கூறியிருந்தார்.
அடுத்து இந்திய விமானப்படையின் தகுதிகாண்பரீட்சையில் 9வது இடம் பெற்றதால் தனது கனவான தாக்குதல் விமானியாகும் இலட்சியத்தை மயிரிழையில் தவறவிட்டார். இதில் வெற்றிடமாக உள்ள 8 இடங்களுக்கே ஆட்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி மேம்பாட்டு பிரிவில் விஞ்ஞானியாக இணைந்தார். தொடர்ந்து ஹோவர்கிராஃப்ட் விமானத்தை வடிவைமைக்கும் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்தார்.
1963ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு திட்டத்துக்கு மாற்றப்பட்ட இவர் 1980 வரை அங்கேயே கடமையாற்றினார். இக்காலப்பகுதியிலேயே இந்தியா உலக விண்வெளி விஞ்ஞானத்தில் பாரிய மைற்கற்களை அடைந்திருந்தது.
இந்த பகுதியில் எஸ்.எல்.வி ரொக்கெட் வடிவமைப்பு திட்டத்துக்கு பொறுப்பேற்ற கலாம், அதனை வெற்றிகரமாக பூர்த்தி செய்து 1980ஆம் ஆண்டு ரோஹினி செயற்கைகோளை, முதலாவது இந்திய உள்நாட்டு தயாரிப்பான எஸ்.எல்.வி ரொக்கெட் மூலம் ஏவி வெற்றிகரமாக புவிச்சுற்றில் நிலைநிறுத்தி சாதனை புரிந்தார்.
பிற்பட்ட காலப்பகுதியில் மேற்படி காலத்திலேயே தன்னைத்தானே கண்டு பிடித்ததாக அப்துல் கலாம் கூறியிருக்கின்றார். இங்கு பணிபுரிந்த காலத்தில் 1963-1964 காலப்பகுதியில் வேர்ஜினியா ஹம்டன் பகுதியில் உள்ள நாசாவின் லாங்க்லி ஆராய்ச்சி நிலையத்துக்கும், மேரிலாண்ட் க்ரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி விமானநிலையத்துக்கும், வலோப்ஸ் விமான வசதி நிலையத்துக்கும் சென்று வந்துள்ளார்.
1970களில் மேற்கொள்ளப்பட இந்தியாவின் புன்னகைக்கும் புத்தன் அணுவாயுத சோதனையின் எந்தவொரு வேலையிலும் கலாம் பங்கேற்காத போதும் ராஜ ராமண்ணாவால் பார்வையாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
மேலும் 1970இல் எஸ்எல்வி ரொக்கெட் வெற்றியை தொடர்ந்து பலிஸ்டிக் ஏவூகணையை வடிவமைக்கும் திட்டம் பிசாசு, திட்டம் வீரம் என்பவற்றிலும் கலாம் பணியாற்றியிருந்தார்.
இனி அடுத்து வரும் 1980 காலப்பகுதியே கலாமுக்கு இந்தியாவின் ஏவூகணை மனிதன் எனும் பெயரை வழங்கியது. கலாமின் திறனை அறிந்த பிரதமர் இந்திராகாந்தி, ஒருங்கிணைந்த வழிநடத்தப்படும் ஏவுகணை திட்டத்துக்கு, அமைச்சரைவையின் எதிர்ப்பையும் மீறி இரகசிய நிதி வழங்கி கலாமைஇயக்குனராக நியமித்தார்.
இந்த திட்டத்தின் குறைந்த ஆறு வருட காலப்பகுதியில் குறுகிய தூர தாங்கி எதிர்ப்பு ஏவுகணையான நாக், தரையிலிருந்து வானுக்கு செல்லும் ஏவுகணைகளான திரிசு+ல், ஆகாஷ், 250 கிலோமீற்றர் செல்லக்கூடிய ப்ரித்துவி ஏவுகணை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணையான அக்னி என்பன வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு இருந்தன.
இந்தக்குறுகிய காலத்தில் இவ்வளவு சாதனைகளை நடத்தியபோதும் ஏவுகணை திட்டங்களின்போது அதிக நிதி செலவழிக்கப்பட்டதாகவும், அதிக நேரம் எடுக்கப்பட்டதாகவும் விமர்சகர்கள் கலாம் மீது குற்றச்சாட்டொன்றையும் முன்வைக்கின்றனர்.
தொடர்ந்து 1992ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு டிசம்பர் வரை பிரதமரின் தலைமை விஞ்ஞானவியல் ஆலோசகராகவும் கடமையாற்றிய கலாம், இக்காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் இரண்டாவது அணுவாயுத பரிசோதனை திட்டமான புன்னகைக்கும் புத்தர் 2 இன் பிரதான ஒருங்கிணைப்பாளாராக செயற்பட்டார். இந்த திட்டத்தின் தீவிர அரசியலையும், தொழில்நுட்ப பகுதிகளிலும் இவர் கவனித்திருந்தார்.
கலாமின் சாதனைகளை கருத்திற்கொண்டு 1981ஆம் ஆண்டு பத்மபூஷண் விருதும்இ 1990ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும், 1998ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டிருந்தது. இந்தியாவின் ஜனாதிபதியாக முன் பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது நபர் கலாம் ஆவார். மேலும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் அளித்துள்ளன.
விஞ்ஞானியாக நாட்டுக்கு பணியாற்றி விட்டு 2002 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டு, பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவுடனும் இந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, அவரின் போட்டியாளரான லட்சுமி சாகலை இலகுவாக தோற்கடித்து 11வது இந்தியக் குடியரசு தலைவரானார்.
இவர் ஜூலை 2002 முதல் 2007 ஜூலை 25 வரை குடியரசுத்தலைவராக பணியாற்றினார். தனது வாழ்நாளிலேயே திருமணம் செய்து கொள்ளாத கலாம், ராஷ்ரதிபவனுக்கு குடியேறிய முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகாதவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் ‘மக்களின் ஜனாதிபதி’ என அழைக்கப்பட்ட கலாம், வருமானம் தரும் பதவி மசோதாவில் கைய்யொப்பமிடுவதே தனது பதவிக்காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறியிருக்கின்றார்.
தனது வெற்றி உறுதியானால் இரண்டாவது முறையாக குடியரசுத்தலைவராக போட்டியிட உறுதி தெரிவித்த கலாம், இரண்டு நாட்கள் கழித்து ராஷ்ரதிபவனை எந்த அரசியற் செயற்பாடுகளிலும் சம்பந்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கூறி தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.
மீண்டும் பிரதீபா பாட்டேலை தொடர்ந்து 2012ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என பலமான ஊகங்கள் முன்வைக்கப்பட்டும், கலாம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.
ஜனாதிபதி பதவிக்காலத்தில் வீற்றிருந்தபோதும் கலாம் நோக்கி முடிவெடுக்க முடியாதவர் என்றவாறு விமர்சனங்கள் முக்கியமாக முன்வைக்கப்பட்டன. முக்கியமாக தனது பதவி காலத்தில் வந்த 21 கருணை மனுக்களில் ஒன்றை மட்டுமே தூக்கிலிடுமாறு அனுமதி வழங்கினார் என்றும், அப்சல் குரு உட்பட ஏனைய 20 பேரினதும் விசாரிக்காமல் நிலுவையிலேயே இருந்தன என்பதே அவர் மீது முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டாகும்.
கடந்த இரண்டு நாட்களாக உலகமெங்கும் சமூக வலைத்தளங்களில் அப்துல் கலாமை பற்றிய விடயங்கள் நிறைய பகிரப்படுகின்றன. இவ்வாறு பகிரப்படுவதுக்கான பணியை கலாம் ஜனாதிபதியாக பணியாற்றியதன் பிற்பாடே ஆற்றியிருக்கின்றார்.
சாதாரண ஒரு பொதுமகனுக்கு ஒரு விஞ்ஞானியாக, ஜனாதிபதியாக அறிமுகமானதை காட்டிலும் சிறந்த ஒரு ஊக்குவிப்பாளனாக, வழிகாட்டியாகவே கலாம் அறிமுகமாயிருக்கின்றார். அந்த அறிமுகம் அவரது அக்கினிச் சிறகுகள் சுயசரிதை புத்தகம் மூலம்தான் பெரும்பாலும் நிகழ்ந்துள்ளது என்றால் ஆச்ச்ரியப்படுவதுக்கில்லை.
தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் கலாம் இள வயதினருடனேயே முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்களுடன் அதிகமாக ஊடாட்டத்தை மேற்கொள்ள விரும்பி, அதனை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார்.
அக்கினிச் சிறகுகள் தவிர இந்தியா 2020 உட்பட 20க்கு மேற்பட்ட புத்தகங்களை அப்துல் கலாம் எழுதியுள்ளார். இதில் இந்தியா 2020 இல் இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சிகளோடு எவ்வாறு உலக வல்லரசுகளுடன் போட்டியிடும் நிலமைக்கு ஊழலற்ற இந்தியாவை எவ்வாறு இளைஞர்களோடு கட்டியமைப்பது பற்றி விளித்துள்ளார்.
கனவு காணுங்கள் அதனை நனவாக்குவதற்கான வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்ற கலாமின் பிரபலமான கூற்றை நினைவில் நிறுத்தி கலாமின் வாழ்க்கை பயணத்தினை எடுகோளாக எடுத்து நாமும் எமது வாழ்க்கையை கட்டியமைப்போம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Nandakumar (U.A.E)
Posted Date: July 31, 2015 at 19:01
Dear Shanmugan,
Well constructed article. Keep it up.
Regards
Nandan/ Dubai
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.