தமிழகத் திருக்கோயில் வரிசை - திருப்பைஞ்ஞீலி - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2016 (வெள்ளிக்கிழமை)
திருச்சியிலிருந்து மணிச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தை அடையலாம். இவ்வழியே செல்லும் எல்லாப் பேருந்துகளும் திருப்பைஞ்ஞீலி கோவில்வரை சென்று திரும்பும் பசியால் வாடிய அப்பர் பெருமானுக்கு இறைவன் கட்டுச்சோறு கொடுத்துப் பெருமை பெற்ற திருக்கோவில் இது. ஞீலிவனம், கதலிவனம், வியாக்ரபுரி, மேலைச் சிதம்பரம் என்பன போன்ற வேறு பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.
“ஞீலி” என்பது ஒரு வகை வாழை. கோவில் பிரகாரத்தின் வடபுறத்தில் ”ஞீலி வாழைகள்” நெருக்கமாக உள்ளன. இதனைக் “கல்வாழை” என்றும் அழைக்கிறார்கள். இதன் காய் – கனி அனைத்தையும் இறைவனுக்கு நிவேதித்த பின்னர் தண்ணீரில் விட்டு விடுகிறார்கள். மனிதர்கள் யாரும் அதனைப் பயன்படுத்துவதில்லை.
இறைவன்: ஞீலிவனேஸ்வரா், ஞீலிவனநாதர்
இறைவி: விசாலாட்சி
தலமரம்: வாழை
தீர்த்தம்: அப்பர் தீர்த்தம்
அப்பர் திருப்பைஞ்ஞீலியைத் தரிசிக்க விரும்பி கோவிலை அண்மித்தவேளை மிகவும் களைப்படைந்து வருத்தமுற்று, தண்ணீர் தாகத்துடன் பசியும் வந்து வாட்ட, சற்றும் கலக்கமின்றி முன்னேறிச் செல்கிறார். சிவபெருமான் தம் தொண்டரின் வருத்தத்தை நீக்குபவராய், ஒரு சோலை – ஒரு குளம் என்பவற்றை உண்டாக்கி, திருநீறணிந்த அந்தணராகி கட்டுச் சோற்றினையும் எடுத்துக்கொண்டு நாவரசர் வரும் வழி எதிரில் தங்கியிருந்தார். நாவரசர் அவ்விடம் வந்து சேர, “வழி நடந்து வந்த வருத்தத்தால் மிகவும் இளைப்படைந்தீர். என்னிடத்தில் கட்டுச்சோறுண்டு குளத்து நீரைப் பருகி இளைப்பைப் போக்கிக் கொள்வீர்” எனக் கூறி வேதியரான இறைவன் கட்டுச் சோற்றைக் கொடுத்ததும் அதனை உண்டு நீரையும் அருந்தி அப்பர் தமது தளர்வினை நீக்கிக்கொண்டார் என்பதுவும் வரலாறு. அதனால் சோறு கொடுத்த எம்பெருமான் “சோற்றுடையீசுவரா்” எனவும் அழைக்கப்படுகிறார்.
1570 - 1576 வரையிலான பெரியபுராணப் பாடல்களில் திருப்பைஞ்ஞீலியில் அப்பருக்கு இறைவன் கட்டுச்சோறு கொடுத்த வரலாறு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பெரியபுராணத்தின் ஒரு பாடலை மட்டும் இங்கு தந்துள்ளேன்.
அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென்பால் பொதிசோறுண்டு
இதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிக் போவீர் எனப்புகன்றார்.
கிழக்கு நோக்கிய கோவிலின் பெரிய முகப்பு வாசல் நம்மை வரவேற்கிறது. முகப்பு வாசலின் மேலே நடுவே சிவனும் வலதுபுறம் பிள்ளையாரும் இடதுபுறம் முருகனும் சுதைச் சிற்பங்களாக அமர்ந்துள்ளனா். முகப்பு வாசல் தாண்டி ஒரு பரந்த பகுதியினூடாக உள்ளே நுழைந்தால், நமது வலது கைப்புறமாக தெற்குநோக்கிய வசந்த மண்டபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நமது இடது கைப்புறமாக சற்று தூரத்தில் தூர்ந்துபோன நிலையில் குளம் ஒன்று காணப்படுகிறது. இதனை “ அப்பர் தீர்த்தம் ” என்கிறார்கள். இந்த இடத்திலிருந்து சோலை வனத்திலேயே அப்பருக்கு இறைவன் கட்டுச்சோறு கொடுத்ததாகக் கூறிக்கொள்கிறார்கள்.
அடுத்து, முதல் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட முற்றுப்பெறாத ஒரு கோபுர வாசலுக்கு நாம் வருகிறோம். வழமைக்கு மாறாக - எங்கும் இல்லாதபடி - மிக அகன்ற அடிப்பகுதியைக் கொண்டதாக இக்கோபுர அமைப்பு பார்ப்பதற்கு மிக ஆச்சரியமாக உள்ளது. ஆனால் , அடிக்கோபுரமும் ஒற்றைத் தளமும் அதிக காலத்திற்கு முற்பட்டது என்பது மட்டும் புரிகிறது. ஒரு மூலையில் அதன் அத்திபாரத்தைத் தோண்டி கோபுரத்தின் உறுதிப்பாட்டை பரிசீலித்துள்ளார்கள் என்பதுவும் தெரிகிறது. “அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில்” என எழுதப்பட்ட பெயர்ப்பலகை நடுக் கோபுர மேல் விதானத்தில் காணப்படுகிறது.
நாலுகால் மண்டபம் உள்ள நடுப்பகுதியின் வலது கைப்புறமாக கோவில் அலுவலகமும், இடது கைப்புறமாக பாதாள நந்தி, லிங்கம், பிள்ளையார் தவிர சூதமுனிவரின் தனிச் சந்நிதியும் காணப்படுகிறது. உள்ளே முழுமையான மூன்றுநிலைக் கோபுரத்தின் உட்பகுதியில் நிறையக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எட்டுப் படிகள் கீழிறங்கினால் சிறிய தம்பமும் பலிபீடமும் உள்ளன. இது ஒரு பரிகார ஸ்தலமாகையால் நிலத்தில் குழிகளில் நெய் விளக்கேற்றி வணங்குகிறார்கள். மூலவர் ஞீலிவனநாதர் உருவத்தில் சிறியவராக லிங்கவடிவில் அருள் பாலிக்கிறார். நமது வலது கைப்புறமாக தெற்குப் பார்த்தபடியான அம்பிகை விசாலாட்சி சந்நிதியினைப் பார்த்து வணங்குகிறோம்.
மூலவருக்கு முன்பாக அர்த்த மண்டபத்தில் வசிட்ட முனிவருக்கு நடராஜப் பெருமான் நடனமாடிக் காட்சியருளிய இடம் உள்ளது. இதனாலேயே இத்தலம் “மேலைச் சிதம்பரம்” எனப் பெயர் பெற்றது. கோஷ்டத்தில் தெட்சணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரா், மோகினியுடன் பிட்சாடணர், சண்டிகேசர் உள்ளனா். உட்பிரகாரத்தில் தென்பக்கமாக உள்ள பள்ளியறை தவிர வேறு மூர்த்தங்கள் எதுவுமில்லை. வெளிப்பிரகாரத்தில் சிறிய சந்நிதிகளில் பிள்ளையார், மகாலெட்சுமி, நாரயணர் உள்ளனா். வடபுறத்தில் ஸ்தல விருட்சமான ஞீலிவாழை (கல்வாழை) உள்ளது.
இங்கே இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பிரகாரத்தில் உள்ள விசாலாட்சி அம்பாள் சந்நிதி தவிர, வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியபடி இன்னொரு அம்பாள் சந்நிதி காணப்படுகிறது. தனியாகத் தம்பம், பீடம், நந்தி, ஆகியனவும் உண்டு. தம்பம் அருகே பைரவரும் சூரியனும் அமர்ந்துள்ளனா்.
வெளிப்பிரகாரத்தில் தெற்குவீதியில் பல படிகள் கீழிறங்கிச் சென்று எமன் சந்நிதியை வணங்குகின்றோம். இது ஒரு குடைவரைக் கோயிலாகக் காணப்படுகிறது. எமன் சந்நிதி இங்குள்ளதால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை.
“மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்
பத்தர்தாம் தொழுதேத்து பைஞ்சீலியெம்
அத்தனைத் தொழவல்லவர் நல்லரே”
-அப்பர்-
நன்றி : ஞானச்சுடர் ஐப்பசிமலர் 2015
அடுத்த வாரம் : “ திருக்கழுக்குன்றம் ” இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை “ சங்கு ” பிறந்து ஒதுங்கும் அற்புதம் நிகழ்ந்து வரும் திருக்கோவில் இது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.