தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும் _ சிக்கன முகாமைத்துவத்தின் இன்றைய அவசியத்தேவை
உழைப்பிற்கான வருமானம் குறைவடைந்து வாழ்க்கைச்செலவுகள் பலமடங்கு அதிகரிக்கும் ஓர் நெருக்கடிமிக்க காலகட்டத்தினுள் நாம் இன்று தள்ளப்பட்டிருக்கிறோம். நள்ளிரவில் பெறப்பட்ட சுதந்திரம் போன்று (இரவில் பெற்றோம் இன்னும் விடியவில்லை) விலைவாசி அதிகரிப்புக்களை நள்ளிரவுகளில் பெற்றுக்கொண்டிருக்கும் 'சிறந்த' காலகட்டம்.
'வரவு எட்டணா செலவு பத்தணா' என்கிற எமது முன்னோர்களின் கூற்று மீண்டும் மீண்டும் கண்முன்னே நிரூபணமாகிக்கொண்டுள்ளது.
மிகத்தெளிவாக எமக்கு தெரிந்தே பல அத்தியாவசிய நுகர்பொருட்களின் விலைப்பெறுமதிகள் அதிகரிக்கின்றதெனினினும், மறைமுகமாக பல பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்திருக்கும்.
இச்சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது ..? என்பதே எம்முன் எழுந்து நிற்கும் கேள்வியும் சவாலும்.
1. செலவுகளை ஈடுசெய்வதற்கான வருமானத்தை அதிகரிக்கும் உபாயங்களை கண்டறிந்து அவற்றினை முடிந்தவரையில் முயற்சிக்கவேண்டும்.
2. நமது அன்றாட செலவுகளை (தேவையின் முக்கியத்துவம் கருதி) இயன்றவு குறைத்தல் அல்லது தவிர்த்தல் அல்லது மட்டுப்படுத்தல் சாலச்சிறந்தது (மின்சார பாவனையிலிருந்து திட்டமிடல் அவசியம்)
'எது தேவையான செலவு எது தேவையற்ற செலவு' என்பதனை எவ்வாறு பகுத்தறிவது ...?
நீங்கள் வாங்குகின்ற பொருள் உங்கள் வாழ்வின் எப்படிப்பட்ட தேவையை (ஆடம்பரம், மேலதிகம், அத்தியாவசியம்) பூர்த்தி செய்கிறது ..?
எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றன ..? என்பதனை நீங்களே அறிந்துகொள்ளல்.
ஒரு பொருள் நேர்மறையான விளைவையும் ஏற்படுத்தும் அதேவேளை சிலருக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
உங்கள் அன்றாட செலவுகளை பட்டியலிட்டு, அவற்றின் தேவை மற்றும் விளைவுகளை ஒன்றிற்கு இருதடவைகள் அலசி ஆராயுங்கள்.
எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அதேவேளை தேவையற்றதென கருதும் பொருள்களை கொள்வனவு செய்வதனை தவிர்ப்பது அதிகம் நன்மையளிக்கும்.
ஒரே பொருள் ஒரு இடத்தில் ஒரு விலையாகவும் இன்னொரு இடத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். அதற்கான வாய்ப்புகள் இனிவருங்காலங்களில் மிக அதிகம்.
எனவே நியாயமான வணிகங்களை தேடி அறிந்து கொள்வனவு செய்தல் அவசியம்.
உங்களிடமுள்ள மேலதிக பொருட்களை வீணடிக்காது பாதுகாத்து, அவசியமற்றதாயின் சுற்றயலில் வசிப்பவர்களுடன் கலத்துரையாடி பண்டமாற்று செய்ய பழகுவோம்.
நிதி நிறுவனங்களது எந்தவோர் கடன் திட்ங்களிலும் புதிதாக இணைந்துவிடாது தவிர்த்துக்கொள்ளுதல் அதிக நன்மையளிக்கும். இங்கு கடைவிரித்துள்ள 'வங்கிகள் உட்பட எந்தவோர் நிதிநிறுவனங்களும் எமது நலனில் அக்கறைகொண்டு வரவில்லை' என்பதனை நன்றாக தெளிந்துகொள்ளவும்.
'தக்கென பிழைத்தல், எனும் கொள்கையின்படி பலமான எதிர்நீச்சலிட்டே வாழ்க்கையில் மிதக்கவேண்டிய காலகட்டம் (தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும்) ...
தமது தூரநோக்கற்ற மற்றும் மாய வார்த்தைஜாலங்களுக்கு இரையாகி, நிதிநிறுவனங்களில் கடன்பெற்று (நீண்ட மற்றும் குறுங்கால) தம்மிடமிருக்கும் சிறிதளவு செல்வ வளம், நிம்மதியான வாழ்வு மற்றும் வளமான எதிர்காலத்தையும் தொலைத்து நிர்க்கதி நிலையில் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழ்நிலையில் இருந்து தப்பிக்கும் வழிகளை கண்டறிவோம். நமது தேவைக்கு மிதமிஞ்சிய உணவுப்பண்டங்கள், இயற்கை வளங்கள்(மரக்கறிகள், வீட்டுத்தோட்ட விளைபொருட்கள், தானியங்கள், பெருந்தோட்ட வளங்களாயினும் கூட) முதலானவற்றை வணிக ரீதியான சிந்தனைகளை விடுத்து அவை இல்லாதவர்களுக்கு கொடுத்து விருப்புடன் வேறு நமக்குத் தேவையான உணவுப்பண்டங்களை பெற விளைவோம். இது "தற்சார்பு" எனும் நிறைவான பொருளாதாரத்தினை மீளுருவாக்க வழிகோலும்.
நமது பிரதேசங்களில் காணப்படும் பயன்பாடற்ற இயற்கை வளங்களை கண்டறிந்து, உச்ச அளவில் பயன்படுத்த விளைவோம். பல நவீன சௌகரியங்களுக்கு அடிமையாகிப்போயுள்ள நமது சோம்பல்தனத்திற்கு விடைகொடுத்து, நமது தனிப்பட்ட ஆரோக்கியத்தினை கருத்திற்கொண்டாவது செயலாற்ற விளைவோம்.
வழமைபோல் செலவுசெய்ய விளைந்தால் உங்கள் செலவுகள் இரண்டு மடங்காக அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளது.
நாம் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும் ஆரோக்கியமற்ற அவசியமற்ற விடயங்களை கைவிடுவதற்கான இந்நெருக்கடி நிலையினை மாற்றி காலத்திற்கேற்ப திட்டமிடுதல் மிக அவசியம். சிந்திக்க நேரம் கடந்துகொண்டிருக்கின்றது.
நாம் ஒத்திவைத்த நலம்மிக்க பல விடயங்களை மீண்டும் அள்ளிக் கொள்ளவதற்கான ஓர் வாய்ப்பாக மாற்றுவோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.