பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்கள் பதினாறு. அத்தனை பெயர்களும் ஒன்றுசேர நான்கு வரிப் பாடலாக கொடுங்குன்றம் கோவிலின் முகப்பு மண்டபத்தில் எழுதப்பட்டுள்ளது.
கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூர்
ஏடகம் நெல்வேலி இராமேசம் ஆடானை
தென்பரங்குன் றம்சுழியன் தென்திருப்புத்தூர்
காளை வன் கொடுங்குன் றம்பூவனம்
1) கூடல் – ஆலவாய், மதுரை
2) புனவாயில் – திருப்புனவாயில்
3) குற்றாலம் – திருக்குற்றாலம்
4) ஆப்பனூர் – திருஆப்புடையார் கோவில்
5) ஏடகம் – திருஏடகம்
6) நெல்வேலி – திருநெல்வேலி
7) இராமேசம் – இராமேஸ்வரம்
8) ஆடனை – திருஆடானை
9) பரங்குன்றம் – திருப்பரங்குன்றம்
10) சுழியன் - திருச்சுழியல்
11) திருப்புத்தூர்
12) காளை - திருக்கானப்பேர் (காளையர் கோவில்)
13) கொடுங்குன்றம்
14) பூவனம் - திருப்பூவனம்
இந்தப் பதினான்கு கோவில்களில் ஒன்றான “ கொடுங்குன்றம் ” நோக்கிய எமது பயணத்தின் போது கிடைத்த மகிழ்ச்சி, ஏமாற்றம், மறக்கமுடியாத அனுபவம் அத்தனையையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள வருகிறேன்.
(1) மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து “ பொன்னமராவதி ”செல்லும் பேருந்துகள் “ பிரான் மலை ” வழியாகச் செல்கின்றன. (2)மதுரையிலிருந்து “ சிங்கம்புணரி ” சென்றால் அங்கிருந்து “ பிரான் மலை ” க்குப் பேருந்துகள் செல்கின்றன. இது மதுரையிலிருந்து “ கொடுங்குன்றம் ” போகும் பாதை. நாம் மதுரையிலிருந்து, திருச்சி நெடுஞ்சாலையில் “ மேலூர் ” வரை வந்து வலது புறம் திரும்பி, “ சிங்கம்புணரி ” சந்தியில் இடதுபுறம் திரும்பி, ஒரு “ ப ” வடிவில் நீண்ட தூரம் பயணித்து ஒருவாறு “ கொடுங்குன்றம் ” வந்து சேர்ந்தோம். “ கொடுங்குன்றம் ” ஒரு பிரபல முருகன் ஆலயம் என முற்று முழுதாக நம்பி வந்த எமக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது உண்மையே. “ கொடுங்குன்றம் முருகனைத் தரிசித்து வாருங்கள் ” என்ற வாரியாரின் கூற்றுப் பொய்யாகுமா?
திருச்சியிலிருந்து “ கொடுங்குன்றம் ” நோக்கி பயணிக்கும் மிக இலகுவான பாதை இது. திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் சரியாக 87 கி.மீ தூரத்தில் இடதுபுறமாக “ பள்ளப்பட்டி ” எனும் கிராமத்து வீதி பிரிகிறது. இருபுறமும் தென்னஞ்சோலையும் - தும்புத் தொழிலகங்களும் – பசுமையான சூழலும் கொண்ட வீதியில் சரியாக 7 கி.மீ தூரத்தில் “ பிரான் மலை ” கிராமமும் கிராமத்தின் நடுவே ” கொடுங்குன்றம் ” கோவிலும் வந்துவிடும். இத்தனை இலகுவான பிரயாணம் இருக்க, இது புரியமல் நாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டோமே!
பிரான் மலை கிராமத்தின் மத்தியில் உள்ள மலைச்சரிவில் கோயில் உள்ளது. பத்துக்கும் அதிகமான தூண்கள் கொண்ட மண்டபத்தின் ஒரு பக்கத்தில் காணப்படும் நீண்டதொரு விளம்பரப்பலகை நமக்குப் பல தகவல்களைத் தருகிறது. கொடுங்குன்றம் கோவில், மேற்கோவில் - நடுக்கோவில் - கிழ்க்கோவில் என மூன்று பகுதிகளாக உள்ளது. மேற்கோவில் – கைலாசம் – உமாமகேஸ்வரா் தேனாம்பிகை அம்பிகையுடன் அருள்பாலிக்கும் இடம். நடுக்கோவில் – அந்தரம் –
நிர்வாண பைரவர் சந்நிதானம் அமைந்துள்ள பகுதி. கீழ்க்கோவில் - பாதாளம் (பூமி) அமிர்தேஸ்வரி சமேத கடோரகிரீஸ்வரா் அமர்ந்திருக்கும் இடம். இவரே “ கொடுங்குன்றநாதர் ” சம்பந்தரால் பாடப்பெற்ற கோயில் கீழ்க்கோயிலே.
மண்டபம் தாண்டி தெற்கு நோக்கிய படிக்கட்டுக்களினூடாக நடக்கும் போது நமது கைப்புறமாக மலைப் பாறைக்கு நடுவே ஒரு குளம் காணப்படுகிறது. ஒரு காலத்தில் சீரான படிக்கட்டுகளுடன் இருந்து, பிற்பகுதியில் சிதைவுற்றுச் சேதமடைந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் சீரான படிக்கட்டுகளுடன் இருந்து, பிற்பகுதியில் சிதைவுற்றுச் சேதமடைந்து காணப்படுகிறது இத் திருக்குளம். நூற்றுக்கும் அதிகமான படிகளேறி, குரங்குளின் அட்டகாசத்திற்கு ஈடுகொடுத்து கோயிலைச் சென்றடைய வேண்டும். சற்று முன்னதாக வீற்றிருக்கும் வலம்புரி விநாயகரைத் தரிசித்து இடப்பால் திரும்பி, மேலும் சில படிகள் மேலேறி ஏகாந்த விநாயகரை வணங்கிப் பின் தெற்கு நோக்கிய நுழைவு வாசலினூடாக கோயில் உள்ளே நுழைகிறோம். தலைக்கு மேலே விதானத்தில் காணப்படும் இரண்டு பெரிய குளவிக்கூடுகள் நம்மைப் பயமுறுத்துகின்றன. தேனுண்டு மயங்கிய நிலையில் (பூச் சொரிந்து விட்ட மாதிரி) நிலமெல்லாம் விழுந்து கிடக்கின்ற ராசகுளவிகளின் மீது கால்படாமல் ஒருவிதமாக நடந்து முன்னேறினால் நேராக நடராஜர் மண்டபம். அடுத்து பெரிய உருவில் மகாலெட்சுமியும், இருபுறமும்
தூக்கிய துதிக்கைகளுடன் இரு யானைகளும் சுதைச் சிற்பமாகக் காட்சி தருகின்றனா். மண்டபம் முமுவதுமுள்ள சதுர வடிவத் தூண்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபச் சுவர்களில் திருமுறைப் பாடல்களும், திருமந்திரத்திலிருந்து தெரிவு செய்த சில பாடல்களும் எழுதப்பட்டுள்ளன.
கருவறையில் லிங்க வடிவில் அமர்ந்திருக்கும் இறைவனை “ உடையவர் ” என்கிறார்கள். உடையவருக்குச் சரி பின்புறமுள்ள மலையைக் குடைந்தெடுத்து பெரிய புடைச் சிற்பமாக உமாமகேஸ்வரரும் (மங்கை பாகர்) தேனாம்பாள் (தேனாம்பிகை) அம்பிகையும் நித்திய திருமணக்கோலத்தில் நிறைந்த அலங்காரங்களுடன் காணப்படுகின்றனா். அந்த மண்டபத்தில் கூடியிருந்த நான்கைந்து பேர் மறைந்த தம் உறவுகளுக்கான திதி அனுட்டானங்கள் செய்து கொண்டிருந்தததைப் பார்க்க முடிந்தது. அந்தக் கருவறையைச் சுற்றி கோஷ்ட மூர்த்தங்களோ வேறு சந்நிதிகளோ இல்லை. ஆனால், வடமேற்கு மூலையில், கொடுங்குன்றம் கோவிலின் ஸ்தல விருட்சங்கள் இரண்டில் ஒன்றான “ பெயரில்லா மரம் ” பாறை இடுக்குகளில் பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இதுவரையும் எவரும் பெயர் தெரிந்து சொல்லாமையினால் இந்த மரம் “ பெயரில்லா மரம் ” என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இது “ மேற்கோவில் ” கொடுங்குன்றத்தின் “ கைலாசம் ”.
பெருமானைத் தரிசித்தபின் குளவிக்கூடுகள் இருக்கும் தென்புற வாசல் வழியாக வந்து சிலபடிகள் கீழிறங்கி வர வலப்பக்கமாக பைரவர் சந்நிதி தெரிகிறது. அதற்கு முன்னதாக, நடைபாதையின் ஓரமாக, ஒரு சிறிய மண்டபமும் – மண்டபத்தின் மேல் கல்லால மரநிழலின் கீழமர்ந்து நான்கு முனிவர்களுக்கும் உபதேசம் செய்யும் தென்முகக் கடவுளின் சுதைச் சிற்பமும் “ முல்லைக்குத் தேரீந்த பாரி வள்ளல் ” கதையினைச் சித்தரிக்கும் சுதைச் சிற்பமும் அடுத்தடுத்து காணப்படுகின்றன. மலை மடிப்பின் கரிய நிறத்தில், வெள்ளை வெளேரெனக் காணப்படும் பளிங்குச் சிற்பங்கள் இரண்டும் நம்மை நிறுத்தி நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. சுற்றிவர பாறை உடைவுகளும், பாறை இடுக்குகளில் நிறைய மரங்களும் கொண்ட சூழலில், ஒரு கருவறையும் ஒரு முன் மண்டபமும் மட்டுமே அங்குள்ளது. இரு புறமும் பெரிய துவாரபாலகர்கள் கொண்ட கருவறையில் பெரிய உருவ அமைப்போடு “ நிர்வாண பைரவர் ” மூலவராக வீற்றிருக்கிறார். ஒரு பக்கத்தில் பைரவரின் உற்சவ மூர்த்தம் வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு வெளியே புறம்பாக கிழக்குப் பார்த்தபடியான விசுவநாதர் –
விசாலாட்சி சந்நிதியும், மேற்குப் பார்த்தபடி சூரியன் சந்நிதியும் தனித்தனியே உள்ளன. இதுவே நடுக்கோவில். கொடுங்குன்றத்தின் “அந்தரம் ”
பைரவர் சந்நிதியிலிருந்து (நாம் சென்ற படிக்கட்டு வழியாக இல்லாமல் ) பக்கவாட்டுப் படிகளில் மலைச்சரிவில் கீழிறங்கி கீழ்க்கோவிலை அடைகிறோம். இதுவே கீழ்க்கோவில் “ பாதாளம் ” பூமி கருங்கற் தூண்களில் நிறைந்த சிற்பங்களுடன் கூடிய நேர்த்தியான மண்டபம். மிக்க பழமை வாய்ந்த கோவிலாக இருந்தபோதும் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக வைத்துள்ளார்கள். கொடுங்குன்றநாதர் அமர்ந்துள்ள இந்தப் பெரிய கோவிலில் குருக்களோ பக்தர்களோ யாருமின்றி போதுமான வெளிச்சமுமின்றி வெறிச்சோடி இருக்கிறது. சந்நிதானம் விபரங்களை அறிந்துகொள்ள யாராவது வர மாட்டார்களா என நாம் பல பக்கமும் பார்வையைச் செலுத்தியபோது, உள் மண்டபத்திலே ஒரு சிறுவன் தன்னந்தனியாக விளையாடிக் கொண்டிருப்பது தெரிகிறது. கீழே ஒரு அரை டிராயருடன், மேலே நொய்துபோன ஒரு பழைய சட்டை. கோயிலின்
உட்பிரகாரத்தில் நடமாட நமக்கே ஒருவித அச்ச உணர்வு இருந்த நிலையில் இந்தச் சிறுவன் இங்கே என்ன செய்கிறான்? அச்சிறுவனை நம்மருகே அழைத்துப் பேச்சுக் கொடுக்கிறோம்.. (கட்டுரைக்கு இடையிடையே அந்தப் பையனுடன் நடந்த உரையாடல் அப்படியே தரப்பட்டுள்ளது.
“ படிக்கிறாயா? ”
ஆம்! ஐந்தாம் வகுப்பு. (எனவே அவனுக்கு வயது பத்து என்பது புரிகிறது ) “ ஏன்
பாடசாலைக்குச் செல்லவில்லை?”
இந்தக் கேள்விக்குச் சரியாகப் பதில் வரவில்லை.
“ இங்கே என்ன செய்கிறாய்?
“ நான்தான் கோவிற் காவலாளி ”
நெற்றிப்பொட்டில் யாரோ ஓங்கி அடித்தமாதிரி, இவன் பதில் எனக்கு
அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. அதனை வெளிக்காட்டாமல், நாம்
தேடி வந்தவர் இங்குள்ளாரா என்பதை உறுதிப்படுத்த எண்ணிய நான் கேட்டேன்,
“ முருகன் சந்நிதானம் எங்கே இருக்கிறது?
“ ஏன் இந்த அவசரம்? வாங்க! முதல்லை கோயிலைச் சுற்றிப் பார்ப்பம்.”
எனது கைப்பையிலிருந்து ரோச் லைற்றை எடுத்து ஒளிரவிட்டபோது, பையன்
கையை நீட்டி அதனை வாங்கிக் கொண்டான்.
“ கடோரகிரீஸ்வரா் ” எனச் சிறப்புப் பெயர் கொண்ட கொடுங்குன்றநாதர் வீற்றிருக்கும் திருச்சந்நிதி வாசலைப் பையன் திறந்துவிட்டு கருவறையின் உள்ளே ரோச்லைற் ஒளியைப் பாய்ச்சுகிறான். கொடுங்குன்றநாதர் அளவான
அலங்காரத்துடன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். மனதை ஒருநிலைப்படுத்தி எம்பெருமானைக் கரம்கூப்பி வணங்குகிறோம். சிற்ப வேலைகள் கொண்ட முன் மண்டபம். மண்டப மையத்தில் நந்தி, பலிபீடம், தம்பம் ஆகியன காணப்படுகிறது. மூலவருக்கு இடதுபுறமாக தெற்கு நோக்கிய அம்பிகை அமிர்தேஸ்வரியின் சந்நிதி. அழகும் பொலிவும் நிறைந்த அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
உள்வீதியின் தென் பிரகாரத்தில் அறுபத்துமூன்று நாயன்மாரும், தென்மேற்கு மூலையில் முக்குறுணி விநாயகரும் வீற்றிருக்கின்றனா். மேற்குச் சுற்றில் அம்மையப்பன், விசாலாட்டி - விஸ்வநாதர், மீனாட்சி – சொக்கநாதர் சந்நிதிகள் உள்ளன. விஸ்வநாதர், சொக்கநாதர் சந்நிதானங்களுக்கு வெளியே தனித்தனியாக நந்திகள் காணப்படுகின்றன. தீர்த்தக் கிணற்றருகே கொடுங்குன்றத்தின் இரண்டாவது ஸ்தல விருட்சமான “ உறங்காப்புளி ” விருட்சம் உள்ளது. புளியமரத்து இலைகளைவிட சற்றுப் பெரியதான இலைகளுடன், புளியமரத்தின் சாயல் அப்படியே உள்ளது. ஒவ்வொரு சந்நிதானத்தையும் திறந்துவிட்டு, விக்கிரங்களின் மேல் ரோச்லைற் ஒளியினைப் பாய்ச்சி எமக்குக் காண்பித்து, மீண்டும் சந்நிதானங்களைச் சாத்தியபடியே வரும் அச்சிறுவன், “ இது பிள்ளையார் ” , “ இது விஸ்வநாதர் ”, “ இது சொக்கநாதர் ” எனக் கூறிவரும் அவனது வாய் மொழிகண்டு எனக்கு உள்ளுர சிரிப்பு வந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் அவன் பாதையிலேயே தொடருகிறோம். நீங்களும் சேர்ந்து
சிரிக்க வேண்டிய இரண்டு பதில்களை ஒரு உதாரணத்திற்காகத் தந்திருக்கிறேன்.
“ இந்தத் தூண் இரண்டிலும் உள்ள சிலைகள் யாருடையவை தெரியுமா? ”
“அவையள் சாமி கும்பிடுகினம் (பொருத்தமற்ற பதில்)
“ கோயில் எப்போது கட்டப்பட்டது தெரியுமா?“
“ நான் பிறக்கிறதுக்கு கொஞ்சநாள் முந்தித்தான் கட்டினது ”.
(பையனுக்கு வயது 10 மட்டுமே)
சம்பந்தர், அருணகிரிநாதர் காலத்திற்கு முற்பட்டது இக்கோவில். அவனது பேச்சு, முகபாவம், சுறுசுறுப்பு, சுட்டித்தனம் ஆகியவை நம் மனதை ஆழமாகத் தொட, ஒரு பண நோட்டினை எடுத்து அந்தப் பையன் கையில் திணிக்கிறேன். வாங்கிக் கொண்டான். உட்பிரகாரத்தின் வட சுவரில் ஒரு கல்யன்னலூடாகப் பார்த்தபடி “ யானை…. பாருங்க … ” எனப் பையன் அழைக்க, நாமும், அவசரமாகக் கல்யன்னல் ஊடாகப்பார்க்க உள்ளே… ஒரு மேடையில் பருத்த யானையொன்று படுத்திருக்கும் பெரிய சிற்பம் தெரிகிறது. திரும்பிப் பார்க்கிறேன். பையன் சிரிக்கிறான். கோஷ்ட மூர்த்தங்களான தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கையை வணங்கிய பின் மீண்டும் நான் பொறுமையிழந்து, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கையை வணங்கிய பின் மீண்டும் நான் பொறுமையிழந்து லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கையை வணங்கிய பின், மீண்டும் நான் பொறுமையிழந்து,
“ முருகன் சந்நிதானத்தைக் காணவில்லையா?
“ பொறுங்க சார்… ஒரே அவசரம் உங்களுக்கு”
மீண்டும் சிரிக்கிறான் பையன். “ கொடுங்குன்றம் போங்கள் ” என்ற வாரியார் சுவாமிகள் கூற்று பொய்யாகிவிடுமா? வடகிழக்கு மூலையை அண்மிக்கிறோம். நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ள நவக்கிரக மண்டபத்திற்கு சற்று முன்பாக நான் முகத்தை சற்றுக் கடுமையாக வைத்துக்கொண்டு,
” முருகன் சந்நிதானம் எங்கே? பையன் சிரித்தபடியே, “ கொஞ்சம் பின்புறம் திரும்பிப் பாருங்க….. நீங்க தேடி வந்தவர் உள்ளேதான் இருக்கிறார்.” சுவரின் நடுவே இருந்த சிறிய இடைவெளியைக் காண்பிக்கிறான். தெற்குப் பார்த்த வாசல் அது. வாசலின் இரு மருங்கும் உள்ள சுவர்களில் ஏதோ ஒரு காலத்தில் எழுதப்பட்டு, இப்போ அழிந்தும் அழியாமலும் தெளிவின்றிக் காணப்படும் இரு திருப்புகழ் பாக்கள் மீது பையன் ரோச் ஒளியினைப் பாய்ச்ச, ஓரளவு வாசிக்க முடிந்தது. (திருப்பகழ் அடிகள் பின்னர் வரும்.)
வாரியார் சுவாமிகள் தமது இளமைக் காலத்தில் (18-19) வயதில் (1925 இல்) பாடியதான் “ அருணகிரிநாத சுாமிகள் புராணம் ” பாயிரம் – 58, அவதாரப் படலம் - 138, பரத்தையர் வலைப்படுபடலம்-85, அநுக்கிரகப் படலம் -119, கர்னதானப் படலம் -121, கம்பத்திளையனார் காட்சிப்படலம்-118, சுக சொரூபப்படலம்-63 என மொத்தம் -702 பாடல்களுடன் 496 பக்கங்கள் கொண்டது இப்புராணம். ஒவ்வொரு பாடலுக்கும் கீழே, அதேபாடல் பதப்பிரிவு செய்து மீண்டும் தரப்பட்டிருப்பது புராணத்தின் தனிச்சிறப்பான அம்சம்.
அருணை முனிவர் பட்டுத் தெளிந்து முருகன் அருள்பெற்று திருப்புகழ் பாமாலை சூட்டத் தொடங்கியபின் ஸ்தல யாத்திரை போகிறார். மதுரையில் பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் முதலான படைவீடுகளைத் தரிசித்துத் திருப்புகழ் பாடியபின் கொங்குன்றம் (பிரான் மலை) சென்றடைந்தார். “ அசுரர்களை அழித்து வானவர் சிறை மீட்க விரைந்து வேல் வாங்கிய கருணைக் கடலே! இங்கு இந்த அடியவனுக்கு ஓர் ஆசை. புதுமைமிகு நடனம் புரியவேண்டுவேண்டுமென வேண்டி நிற்கிறார். அருணகிரிநாதர்.
வாரியாரின் அருணை முனிவர் புராணத்தில் “ கொடுங்குன்றம் – நர்த்தன தரிசனம் ” எனும் தலைப்பில் பதப்பிரிவு செய்யப்பட்ட பாடல் இல 50, 51 கீழே தரப்பட்டுள்ளது.
அடியவர் ஆசையை நிறைவேற்றுவதுதானே ஆறுமுகனின் ஆசை, அவ்வாறே ஆடினார். கண்ட கண்கள் காவிரியாயின. நர்த்தன நாயகனைப் புகழ்ந்து இரண்டு திருப்புகழ் பாடி, அங்கிருந்து இராமேஸ்வரம் நோக்கித் தன் ஸ்தல யாத்திரையைத் தொடருகிறார். சுவரில் காணப்பட்ட கொடுங்குன்றத்து முருகன் மீது பாடப்பெற்ற இரண்டு திருப்புகழில் ஒன்று முழுமையாகத் தரப்பட்டுள்ளது. மற்றையது சில வரிகள் மட்டுமே தர முடிந்திருக்கிறது.
(1) அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் கண்களாலே
அடர்ந்தெழும் பொன் குன்றங்கும்பங் கொங்கையாலே
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங்கண்டின் றின்புறாதோ
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் தெந்தனானா
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் தும்பிபாடக்
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் துன்றுசோலை
கொழுங் கொடுந்திண் குன்றந்தங்குந் தம்பிரானே
(2) எதிர் பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது
குத்தித்தி றந்துமலை
…………………………………………………………………….
………………………………………………………………..
(என்று தொடங்கும் 47 வரிகள் கொண்ட திருப்புகழின் இடைவரிகள் இவை)
(இடப் பெறுமதி கருதி இதனை முழுமையாகத் தரமுடியவில்லை)
“ அந்த நடனக் கோலத்தை உயிர்போம் பொழுதும் மறவேன் ” என்கிறார் அருணகிரிநாதர்.
“ உள்ளே வாங்க…. ” பையனின் குரல். சிறியது என்றோ, பெரியது என்றோ சொல்ல முடியதா முருகன் சந்நிதானம் . அதனைச் சுற்றிவரக் கூடியதான ஒரு சிறிய பிரகாரம்.
சந்நிதானத்தின் ஒரு சிறிய வாசற் கதவினைத் திறந்துவிட்ட பையன், ரோச் ஒளியினை இப்போது முருகன் முகத்திற்கு நேராகப் பாய்ச்சுகிறான். சொல்லி வைத்த மாதிரி கோவில் மின்சார லைற்றுக்கள் அத்தனையும் ஒளிர்ந்தன. பையன் திரும்பி எங்களைப் பார்த்து ஒரு விதமாகச் சிரிக்கிறான். மின்னொளியில் முருகன் முகத்தைப் பார்க்கிறேன். முருகனும் சிரித்துக்கொண்டேயிருக்கிறான். அதே சிரிப்பு…… பையனின் முகத்தையும் முருகனின் முகத்தையும் மாறிமாறிப் பார்க்கின்றேன். வள்ளி, தெய்வானை சமேதராக ஆறுமுகப் பெருமான் மயில்மீது அமர்ந்தபடியுள்ள திவ்விய தரிசனம் கண்டு மெய்மறந்து நிற்கிறேன்.
முருகா! அறுமுகனே! எதிர்பாராமல் இன்றைய நன்னாளில் (07.04.2013) உன் திருமுகங் காணக் கொடுத்துவைத்ததே! இந்தத் தரிசனத்திற்காக யான் எத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன் தெரியுமா! தலைசாய்த்துக் கரம் கூப்பி வணங்குகிறேன். “ வாரியார் பொய்யுரைத்தாரா? என மனதில் பலமுறையும் தோன்றிய என் அவசர புத்தியை நொந்தபடி, முருகன் சந்நிதியில் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வெளியே வந்து நந்தி, தம்பம், பீடம் இருந்த இடம்நோக்கி நகருகிறோம். வழியில்,
“ தம்பி! நான் தந்த பணத்தைத் திருப்பித் தருகிறாயா?” என நான் கேட்டதும், முகத்தில் ஒருவித ஏமாற்றம் தென்பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் பணத்தை என்னிடம் நீட்டினான். அவன் சற்றும் எதிர்பாராத வகையில், முன்னரைவிடப் பெறுமதி கூடிய ஒரு பண நோட்டினை அவனது மேற்சட்டைப் பையினுள் திணித்தபடியே அவன் முகத்தைப் பார்க்கிறேன். சிரித்தானே ஒரு சிரிப்பு… அற்புதமான சிரிப்பு…. ஒரு சிறுவனின் சிரிப்பில் இத்தனை சவுந்தரியமா! அவனோடு பேசியபடியே கருவறை வாசலின் மைய மண்டபத்திற்கு வருகிறோம்.திடீரென, தூரத்தே ஒரு மணியோசை கேட்கிறது.
“ நேரமாச்சு….. நானும் மணியடிக்கவேணும்… ” என்று கூறியபடியே நமது பதில் எதையும் எதிர்பாரமல் ஒடுங்கிய வெளிவாசல் போகும் சந்து வழியாக ஓடி மறைந்தான். அச்சிறுவன். கோவிலைவிட்டு நாம் வெளியே வந்து எமது வாகனம் புறப்படும்வரை அந்தப் பையன் எங்காவது தென்படுகிறானா என எமது கண்கள் தேடிக்கொண்டேயிருந்தன.
யார் இந்தப் பையன்? ஏன் கோவிலினுள்ளே தன்னந்தனியாக நின்றான்? அவனா கோவிற் காவலாளி? ஒரு பாடசாலை நாளில் அவன் ஏன் இங்கு வந்தான்? “ முருகன் சந்நிதானத்தைக் காணவில்லையே” என நான் வினாவிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொறுமை காக்கச் சொல்லிச் சிரித்தானே! ஏன்? அதுவரை இருள் சூழ்ந்திருந்த கோவில் வளாகம், அச்சிறுவன் முருகன் முகத்திற்கு நேராக ரோச் ஒளியினைக் பாய்ச்சியதும் எப்படி மின்ஒளி படர்ந்தது? இரண்டாவது முறை நான் பண நோட்டை கொடுத்தபோது அவன் சிரித்த கள்ளச் சிரிப்பு யான் வாழ்நாள் முழுவதும் மறக்கச் கூடியதா? யார் இவன்?... யார்
இவன்?.. எனக்குப் புரியவேயில்லை….. உங்களுக்கு ஏதாவது புரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்…..
“ கைம்மா மதகரியின் னினமிடியின் குரலதிரக்
கொய்ம்மா மலர்ச்சோலைபுக மண்டுங் கொடுங்குன்றம்
அம்மானெனவுள்கித் தொழுவார்கட்கருள் செய்யும்
பெம்மானவனிமையோர் தொழமேவும் பெரு நகரே ”
சம்பந்தர்
நன்றி : ஞானச்சுடர் தைமலர் 2014
அடுத்த வெள்ளி : “ திருவெண்ணெய்நல்லூர் ” சுந்தரரின் திருமண வேளையில் பழைய ஓலைச்சுவடி ஒன்றினைக் காட்டி “ நீயும் உன் பரம்பரையும் எனக்கு அடிமை” என இறைவன் வாதிட்ட இடம் இது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.