தமிழகத் திருக்கோயில் வரிசை சிக்கல் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2016 (வெள்ளிக்கிழமை)
“ சிக்கல் ” பெயர் வந்த கதை :
விண்ணுலகில் வாழும் காமதேனு எனும் தெய்வப்பசு, விண்ணும் மண்ணும் கடுமையான பஞ்சத்தைச் சந்திக்க நேர்ந்தபோது, பசி தாங்கமுடியாமல் ஒருமுறை மாமிசம் புசிக்க நேர்ந்தது. இதனால், இறைவன் காமதேனுவைப் புலியாகும்படி சாபமிட்டார். பயந்து நடுநடுங்கிய காமதேனு சாபவிமோசனம் கேட்டு இரந்து நின்றது.
மல்லிகாரண்யமாக விளங்கும் (மல்லிகைக் காடாக) சிக்கல் வனத்திலே போய் தவமிருக்குமாறு இறைவன் பணித்தான். சிக்கல் வனத்திலே நீங்கா இறைபக்தியுடன் மூழ்கித் தோய்ந்து நின்ற காரணத்தால் அதன் புலி உருவம் மாறிப் பழையபடி காமதேனுவாக சிக்கல் வனத்தில் சுற்றித் திரிந்தது. நாளடைவில் அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கக் கண்டு, லிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து அபிஷேகித்து வந்தது.
லிங்கத்தின் மீது சொரியப்பட்ட பால் வழிந்தோடி ஒரு குளமாகத் தேங்கி, நாளடைவில் அக்குளம் பசுவெண்ணெய்க் குளமாகக் காட்சி தந்தது. காமதேனுவைத் தேடி வந்த வசிட்டர் காமதேனுவையும் கண்டதுடன், வெண்ணெய்க் குளத்து வெண்ணெய்யைத் திரட்டி லிங்கமாக்கி சிவபூசையையும் முடித்துக் கொண்டார். பூசை முடிந்ததும் ஏனைய பூசைப் பொருட்களுடன் லிங்கத்தையும் இடம் மாற்ற எண்ணிய வசிட்டரின் கைகளில் வெண்ணெய் லிங்கம் அகப்படாமல் அப்படியே பூமியில் சிக்கிக் கொண்டதால். இந்த இடம் “ சிக்கல் ” என்றாயிற்று. இந்த விபரக் குறிப்பு மிகத் தெளிவாக பெரியதொரு விளம்பரப் பலகையில் எழுதப்பட்டுள்ளது.
வெண்ணெய்ப்பிரான்:
சிக்கல்பிரான் மூலவர் “ நவநீதேஸ்வரா் ”மூலவரின் மறுபெயர் “வெண்ணெய்ப்பிரான் ” திருஞானசம்பந்தர் சிக்கல் மீது பாடிய பதினொரு பாடல்கள் கொண்ட பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் “ வெண்ணெய் பிரான் ” என்று குறிப்பிட்டதுடன், மூன்றாவது பாடலில் இறைவி பெயரையும் சேர்த்திருப்பதிலிருந்து வெண்ணெய்பிரானின் பெருமையும் சிக்கல் கோவிலின் முக்கியத்துவமும் புரிகிறது.
நீல நெய்தல் நில விம்மலருஞ்சுனை நீடிய
சேலுமா லுங்கழனிவ்வளம் மல்கிய சிக்கலுள்
வேல வெண் கண்ணியினாளை யொர்பாகன் வெண்ணெய்ப்பிரான்
பால வண்ணன் கழ லேத்த நம் பாவம் மறையுமே.
-சம்பந்தர்-
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானாகிய சிங்காரவேலவர் மீது இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார். ஒரு திருப்புகழின் ஈற்றடியை இங்கே தந்திருக்கிறேன்.
“ ………………………………………………………………
செம்மனத்தா் மிகுந்த மாதவர்
நன்மை பெற்ற உளத்திலே மலர்
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே”
கோச்செங்கட் சோழன் :
சிலந்தி + யானை = சிவலிங்க பூசை கதை அனைவரும் அறிந்ததே. திருச்சி திருவானைக்கா கோவிலின் பிரதான கோபுர வாசலின் உள்ளே சுதைச் சிற்பமாக இந்தக் கதை தெளிவாக்கப்பட்டுள்ளது. சிலந்தியானது மறுபிறவியில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தபோதிலும் பூர்வ ஜென்மத்தில் யானையோடு இருந்த பகையுணர்ச்சி குறையாமல் மறு ஜென்மத்திலும் தொடர்ந்ததால், யானை எளிதில் கோவிலினுள் நுழையாதாவாறு தான் கட்டுவித்த எழுபது கோவில்களையும் அமைத்தான். இந்த வகையில் அந்தக் கோவில்கள் படியேறும் மாடக் கோவில்களாகவோ (உ.ம்: திருநல்லூர்) , அல்லது இறங்கு படிகளுடன் கருவறையின் வாசல் சிறியதாக - பக்கவாட்டாக அமைந்ததாகவோ (உ.ம் : திருவானைக்கா) இருப்பதைக் காணலாம். சிக்கல் திருக்கோவிலும் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவிலேயாகும்.
சிக்கலின் பெருமையும் தொன்மையும்:
மேற்குறித்த தரவுகளுடன் இதனை அவதானியுங்கள்.
1.கோச்செங்கட் சோழன் நான்காம் நூற்றாண்டினன் என்று கருதப்படுகின்றது.
2.திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது.
3.அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது.
ஆகவே, கோச்செங்கட் சோழன் எழுப்பிய சிக்கல் மாடக்கோவில், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகிய இருவராலும் (பல நூற்றாண்டு இடைப்பட்ட) வெவ்வேறு காலங்களில் பாடப்பெற்ற ஸ்தலமாகவும் இருத்தலினால் இக்கோயிலின் தொன்மையும் பெருமையும் இன்றும் அப்படியே புதுப்பொலிவுடன் விளங்குவதைக் கண்டு இன்புறலாம்.
அமைவிடம்:
திருவாரூர் நாகபட்டினம் சாலையில், வேளாங்கண்ணிக்கு பிரிகின்ற சந்திப்புக்கு 5 கி.மீ முன்பாக நமது வலது கைப்புறமாக வீதி ஓரத்திலேயே வரும் “சிக்கல் சிங்கார வேலன் சந்நிதி” என்று எழுதப்பட்ட வளைவினூடாக உள்ளே போகிறோம். அழகிய ஏழு நிலைக் கோபுர வாசலுடன் தொடர்பான வடக்கு + கிழக்கு + தெற்கு மூன்று பக்க வீதிகளும் நீண்ட மண்டபங்களாகக் காணப்படுவதனால் கோபுரத்தின் கொள்ளை அழகு கண்ணுக்குத் தெரியவில்லை. கோபுர வாசலில் வலதும் இடதுமாக அமர்ந்திருக்கும் கணபதியையும் பழனி ஆண்டவரையும் வணங்கி அனுமதிபெற்று உள்ளே நுழைகிறோம்.
உட்பிரகாரம்:
சிக்கல் கோவில் இரண்டு பிரகாரங்களைக் கொண்டது. ஒன்று மாடக்கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றையது: வழமையான பரிவார மூர்த்தங்களை தரிசித்துவரும் பிரகாரம். எமது வசதிக்காக முதலாவதை மேற்பிரகாரம் என்றும், மற்றையதை உட்பிரகாரம் என்றழைப்போம். கோபுரவாசல் தாண்டி உள்ளே வந்ததும் நேராக மைய மண்டபத்தினுள் காலை வைக்கிறோம். இடது கைப்புறமாக சூரியனும் வலது கைப்புறமாக சந்திரனும் சிறிய சந்நிதிகளில் உள்ளனர். உட்பிரகாரத் தென்சுற்றில் அறுபத்துமூவரும் ஒரே வரிசையில் உள்ளனர். இம் மூர்த்தங்கள் அறுபத்து மூன்றினதும் குருபூசை தினங்களுடன் அவரவர்கள் வாழ்ந்த நூற்றாண்டுகளும் குறிக்கப்பட்டிருந்தமை ஒரு சிறப்பான அம்சமாகத் தெரிந்தது.
இந்தத் தென்பிரகாரத்தின் மேல்விதானத்தினை நிமிர்ந்து பார்த்தால் முருகன் திருவிளையாடல்கள் அனைத்தையும் அழகிய ஓவியமாக வரைந்துள்ளார்கள். நிமிர்ந்தபடியே முழுவதையும் பார்த்து முடிக்க கழுத்து வலிக்கிறது.
இந்த உட்பிரகாரத்தின் தென் சுற்றிலேயே தனித் தனிச் சந்நிதியில் காகவாகனத்தில் சனி பகவானும், அழகிய திருக்கோலத்தில் தெட்சணாமூர்த்தியும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். காமதேனு, வசிட்டர் உள்ளிட்ட சப்தரிசிகள் இறைவனைப் பூசித்து நிற்கும் புடைச் சிற்பம் ஒன்று சனிபகவானுக்கும் அருகே உள்ள ஸ்தல விருட்சமான மல்லிகைக்கும் இடையேஅழகாகக் காட்சி தருகிறது. தென்மேற்கு மூலையில் உள்ள தனிச் சந்நிதியில் உள்ளேயும், வெளியேயுமாக இரு விநாயகர்கள் உள்ளனர். வடமேற்கு மூலையில் மகாலெட்சுமி சந்நிதி உண்டு. வடக்குச் சுற்றில் (கட்டு மலையின் கீழ்ப்பகுதியில் ) துர்க்கை அமர்ந்துள்ளார். அருகிலேயே வழமையான இடத்தில் சண்டிகேஸ்வரா் சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவரும், அதற்கு முன்பாக சற்றுத்தள்ளி நவக்கிரகங்களும் காணப்படுகின்றன. பைரவருக்கு அருகிலேயே வேல்நெடுங்கண்ணி அம்பாள் சந்நிதி காணப்படுகிறது.
வேல்நெடுங்கண்ணி:
இத் தலத்திற்குப் பெருமை சேர்க்கும் தேவியின் சந்நிதி வட உட்பிரகாரத்தில் இருக்கிறது. தேவியின் திருப்பெயர். “சத்தியதாட்சி ” என்பது. அம்பிகையின் கண்கள் வேலை ஒத்த கூர்மை கொண்ட நீண்ட கண்களாக இருத்தலினால் அம்பிகை “வேல்நெடுங்கண்ணி “ எனப் பெயர்பெற்று விளங்குகிறாள். அம்பிகை்கு நான்கு கரங்கள். வலது திருக்கரங்களில் மேற்கரம் ஜெபமாலை கொண்டும் கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும் உள்ளது. இடது திருக்கரங்களில்மேற்கரத்தில் தாமரை மலரும், மற்றையது தொடையில் அமர்ந்தபடியும் உள்ளது. இப்பெருமாட்டியேதான் தன் இளைய குமாரன் சிங்காரவேலனுக்கு ஞானசக்தி வேலினைக் கொடுத்து அசுரர்களை அழிக்க அனுப்பி வைத்தவள். தாயின் அரவணைப்பில் இருக்கும் சேய்போல அருள்மிகு பாலசிங்காரவேலவர் அம்பாள் சந்நிதியில் உட்திருவாயிலின் வலப்புறமாகவும், சுக்கிரவார அம்பாளின் எழுந்தருளும் மூர்த்தம் இடப்புறமாகவும் உள்ளன.
மாடக்கோயில்கள்:
உட்பிரகார வலத்தினை நிறைவு செய்து மீண்டும் “ மைய மண்டபம் ” வந்து, இரண்டு வரிசைகளில் உள்ள நந்தி – பலிபீடம் – தம்பம் ஆகியவற்றைச் சுற்றி மாடக்கோவிலுக்குப் படியேறும் (12 படிகள் ) படிக்கட்டருகே, ஒரு பக்கமாக
“ சுந்தர கணபதி ” என்னும் பெயருக்கு ஏற்றபடி அழகே உருவாகி அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் விநாயகர் முன்பு வந்து நிற்கிறோம். கோவிலில் பல்வேறு விநாயகர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தபோதும் சுந்தர கணபதிக்கு தனி மவுசு உண்டு. படியேறி மேலே வந்ததும், நம்மை வரவேற்கக் காத்திருப்பவா் போல நேர் தரிசனம் தருபவர் “ ஸ்ரீ சோமஸ்கந்தா் ” அம்மையும் அப்பனும் அருகிருக்க இருவரின் இடையே பாலமுருகனாக ஒப்பற்ற திருக்கோலத்தில் “ சோமஸ்கந்தர் ” அமர்ந்துள்ளார். நடுவே உள்ள பாலமுருகன் நடனமிடும் பாணியில் இருப்பது குறிப்பிட வேண்டியது.
அடுத்து அருள்மிகு நவநீதேசுவரா் (வெண்ணெய்ப் பெருமான் ) சிவலிங்க வடிவம் தாங்கி இக் கோவிலின் கருவறையில் அழகுற வீற்றிருக்கிறார். கேட்டதைத் தரும் காமதேனுவின் வெண்ணெயில் உருவாகி, வசிட்டரால் ஸ்தாபிக்கப்பெற்ற மூலமூர்த்தி இவர்.காமதேனு, வசிட்டர், முகுகுந்தர், கோச்செங்கட் சோழன், திருஞானசம்பந்தார் ஆகியோர் தரிசித்து அருள்பெற்றுள்ளனா். அடுத்து, குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயின் குமுண் சிரிப்புமாக ஆனந்த தாண்டவமாடும் நடராஜ மூர்த்தியின் வலது பக்கம் மாணிக்க வாசகரும் இடது பக்கம் சிவகாமி அம்மையும் இவரது ஆடல்கண்டு ஆனந்திக்கின்றனர். அருகே இத்தலத்திற்குத் தனிப்பெருமை சேர்க்கும் “சிங்கார வேலவர் சந்நிதி ” உள்ளது. அழகும் இளமையும் பொருந்திய தோற்றப்பொலிவுடன் முருகன் கையில் வேலாயுதம் தாங்கி சேவற்கொடியோனாக வள்ளி – தெய்வானை சகிதம் மாமயில் வண்ணனகாகத் காட்சி தருகிறார். பெருமானின் திருவடியின்கீழ் வெள்ளிமயில் ஒன்று உள்ளது.தந்தை வெண்ணெய்பிரான் மூலமூர்த்தியாக வீற்றிருந்தபோதும் சிக்கலில், தனயன் சிங்கார வேலனுக்கே முக்கியத்துவமும் முதல் மரியாதையும் கிடைக்கிறது.
கீழே மைய மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் நந்தி பலிபீடம் தம்பம் ஆகியவற்றைப் பார்த்தோமல்லவா?அதில் ஒரு வரிசை மூலவா் நவநீதேசுவரா் முன்பாகவும், மற்ற வரிசை சிங்கார வேலவா் சந்நிதி முன்பாகவும் இருப்பதை இப்போ அவதானிக்க முடிகிறது. மாடக் கோவிலின் ஒடுங்கிய மேற்புறத்தை வலம்வர விரும்பின் நான்கு மூர்த்தங்களையும் சேர்த்தே வலம் வர வேண்டும் தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவா் துர்க்கை ஆகியோர் முறையே தெற்கு – மேற்கு - வடக்குப் பக்கங்களில் உள்ள சிறு மாடங்களில் வீற்றிருக்கின்றனா்.
வியர்க்கும் அதியசம்:
“ சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் ” என்னும் முதுமொழி நினைவுக்கு வருகிறது. கந்தசஷ்டி காலத்தில் சிங்கார வேலவனுக்குப் பத்து நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது. ஐந்தாம் நாள் தேர்த்திருவிழா முடிந்தபின் அம்பிகையிடமிருந்து ஞானவேல் வாங்கும் விழா நடைபெறுகிறது. வேல் வாங்கிய பின் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்லும் சிங்கார வேலவனின் கன்னங்களில் வியர்வைத் துளிகள் ஏற்பட்டு வழிந்தோடும் அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது. இதனைக் காண மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்தக் கூட்ட நெரிசலில் நெரிபட்டு மிதிபட்டுக் கண்குளிரக் பார்த்து அனுபவித்த அன்பரொருவர் மயிர்கூச்செறியும் இந்தச் சம்பவத்தினை உறுதி செய்தார்.இதனைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிட்டவில்லை. நவநீதேசுர சுவாமிக்கு சித்திரை மாதத்தில் பத்து நாட்களுக்கான பெருவிழா தனியாக நடைபெறுகிறது.
கோலவாமனப்பெருமாள்:
மீண்டும் ஒருமுறை உட்பிரகாரத்தின் வடசுற்றுக்கு வாருங்கள்.வடபிரகாரத்தின் நடுப்பகுதியில் உள்ள சிறிய கதவினூடாக வெளியே வந்தால் நாம் நேராக கிழக்கு நோக்கிய கோலவாமனப் பெருமாள் சந்நிதிக்கு வந்துவிடுகிறோம். ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய நாச்சியார்களை அருகே கொண்டு நின்ற திருக்கோலத்தில் பொருமான் அருள் பாலிக்கின்றார். கோலவாமனருக்கு எதிரே வெளி மண்டபத்தில் கருடாழ்வாரும், அவரை அடுத்து பரமபத நாதனும் உள்ளனா். இந்த இரண்டும் சுதை வடிவங்களாக இருந்த போதிலும் எழில் வண்ணமுடையதாக அமைந்துள்ளது. கோமளவல்லித் தாயார் கோலாவாமனப் பெருமாளின் தேவியாவர். இவரது தனிக்கோயில் பெருமான் கோயிலின் பின்புறத்தே சற்றே பக்கவாட்டில் இருக்கிறது. பெருமாளை வணங்கியவுடன் தாயாரையும் வணங்கி வரவேண்டும் என்பதே முறை. சற்றே தள்ளி “ ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ” வீற்றிருக்கிறார். ஸ்ரீ வைகுண்ட ஏகதாசி விழா இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சந்நிதிகளின் சுற்றுச் சுவர்களில் ஸ்ரீ கிருஸ்ண பரமாத்மாவின் அவதாரங்கள் அத்தனையும் வண்ண ஓவியமாக – மிகப் பெரியதாக அழகுற வரைந்துள்ளார்கள். இந்தச் சந்நிதிகள் அத்தனையையும் உள்ளடக்கிய தரைப்பகுதி வெகு சுத்தமாக வைக்கப்பட்டிருப்பது ஒரு சாதனையே. கோலாவாமனப் பெருமாள் சந்நிதிக்கு நேராக மூன்று நிலைமாடக் கோபுரமும் திருக்கதவும் காணப்படுகிறது. பெருமாள் புறப்பாடு உள்ள வேளைகள் தவிர ஏனைய நேரங்களில் பொதுவாக இக் கதவுகள் பூட்டப்பட்டேயுள்ளன.
சிக்கல்- பொரவச்சேரி ஆறுமுகன்:
சிக்கல் முருகன் கோவிலுக்கு சரி நேராக உள்ள சீரற்ற ஒரு பாதையினூடாக 1 கி.மீ தூரம் பயணித்தால் வருவது பொரவச்சேரி என்னும் சிற்றூர். முத்தரசு சோழன் என்பான், சிலை செய்வதில் வல்லவனான “ சில்ப முனிவன் ” எனும் சிற்பினை அமர்த்தி ஆறுமுகனின் சிலையினை வடிக்கப் பணித்தான். சிற்பியும் தன் திறமை அனைத்தையும் காண்பித்து மயில்மீதமர்ந்துள்ள ஆறுமுகனின் திருமூர்த்தத்தை வடித்துக் கொடுத்தான். அற்புதமான அந்தச் சிலையின் அழகில் மயங்கிய மன்னன், “ இது போன்றதொரு சிலையை சிற்பி இனிமேல் செய்யவே கூடாது ” எனச் சுயநலமாகச் சிந்தித்து சிற்பியின் வலது கைப் பெருவிரலை வெட்டி விட்டான். கட்டை விரலை இழந்த சிற்பி “ எட்டுக்குடி ”சென்று , இதே போன்றதொரு ஆறுமுகன் திருவுருவை ஆக்கிக் கொடுத்தான். இதை அறிந்த முத்தரசு சோழன் கடுங்கோபங்கொண்டு சிற்பியின் கண்களைப் பறித்துக் குருடாக்கி விட்டான். கண்களுமின்றி இருந்தபோதும் உறுதி குலையாமல் அயலூரான “ எண்கண் ” வந்து தனது சிறிய மகளின் உதவியோடு மீண்டும் ஆறுமுகனின் சிலையை உருவாக்கினான். சிலையின் கண்கள் திறக்க வேண்டிய நல்ல நேரம் நெருங்கியது. தனது பிஞ்சுக் கரங்களால் முருகனின் கண்கள் திறக்க வேண்டிய இடத்தைத் தொட்டுக் காண்பிக்கிறாள் மகள் . மகளின் கைவிரல்கள் மீது உளி பட்டு பீறிட்டுப் பாய்ந்த இரத்தம் சிற்பியின் கண்களிலும் பட்டுத் தெறித்தது.ஆறுமுகனின் திருவருட் கடாட்சத்தினால் கண்களையும் கட்டைவிரலையும் மீளப்பெற்றான் சிற்பி. உளிபட்ட மகளின் கைகள் காயமெதுவுமின்றி மீண்டது இந்த, ஆறுமுகனின் மூன்றாவது திருவுருவமே “ எண்கண் ” திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படட்டுள்ளது.
எண்கண் திருக்கோவிலானது திருவாரூர் – நாகபட்டினம் பாதையிலேயே சிக்கலுக்கு இன்னும் 5 கி.மீ முன்பாக நெடுஞ்சாலையிலேயே உள்ளது.
முதலில் வடிக்கப்பட்ட (1) சிக்கல் – பொரவச்சேரி (2) எட்டுக்குடி மூர்த்தங்களைவிட “ எண்கண் ” முருகன் அளவில் சற்றே சிறியது என்பதைத் தவிர வடிவ அமைப்பில் வேறுபாடு எதுவுமில்லை. எண்கண் திருக்கோவிலிலேயே முருகன் திருவுருவை ஆகக் கிட்டிய தூரத்தில் நின்று ஆறுமுகனைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியமையாலும், மயிலின் கால் நகம் முதல் திருவாசியின் உச்சிவரை அர்ச்சகரின் தீபஒளி தெளிவாகப் பட்டதனாலும் ஆறுமுகனின் அழகிய சொரூபத்தை அள்ளிப் பருக முடிந்தது.
அழகன் – முருகன்:
ஆறுமுகன் தனியாக மயில்வாகனத்தில் அமர்ந்திருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவரின் இரு புறத்திலும் வள்ளி தெய்வானை தனியாக உள்ளனா். முன்புறம் மூன்று, பின்புறம் மூன்று என அழகிய ஆறுமுகங்கள். பன்னிரு கரங்கள் தனித்தனியாக இடைவெளியுடன் காணப்படுகின்றன. பத்துக் கரங்களில் வலது பக்கம் சக்திவேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், இடது பக்கம் சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் ஆகிய ஆயுதங்கள் மற்ற இரு கரங்களில் ஒன்று அபயம் அளிக்கும் கரம் மற்றையது அம்பராத் தூளியிலிருந்து இரண்டு விரல்களால் அம்மை உருவுவதுபோல் தத்ரூபமாகவும்; அதற்கு ஏற்றாற்போல எதிர்ப்புறம் வில்லும் இயல்பாய் உள்ளது. கரங்களில் உள்ள விரல்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இடைவெளியுடன் காணப்படுகிறது. மயில் ஒரு காலைத் தூக்கி, ஒரு காலை ஊன்றி ஓடுவதுபோன்று அமைக்கப்பட்டிருக்கிறது. மயில் கால்களின் நகங்கள் பூமியைப் பற்றி இருக்கும் போது ஏற்படும் நகங்களின் அழுத்தத்தைக் கூட சிற்பத்தில் காணலாம் முருகமூர்த்தியின் எடை முழுவதையும் ஊன்றியிருக்கும் மயிலின் ஒற்றைக் கால் தாங்கி இருப்பதே இந்தச் சிற்பத்தின் சிறப்பம்சமாகும்.
ஒரு குறிப்பு:
சிக்கல் முருகன் கோவிலுக்கும் மேலே தந்துள்ள விபரத்திற்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்களா? சிக்கலில் உள்ள ஆறுமுகனே சில்பா சிற்பி முதலாவதாக வடித்த “ ஆறுமுகன் ” என நம்மைப்போன்று மற்றவர்களும் கருதிவிடக்கூடாது என்பதற்காகவே மேலே உள்ள சிற்பியின் கதையைத் தந்திருக்கிறேன். சிக்கல் – பொரவச்சேரியில் உள்ள ஆறுமுகனே சில்பா சிற்பி முதலில் வடித்த “ ஆறுமுகன் ” ஆகும்
அடுத்த வெள்ளி : “ தாராசுரம் ” “ தாராசுரம்” கோவிலின் கலை வடிவ நுணுக்கங்களுக்காகவே, ஐ.நா.தொல்பொருட் பிரிவினரால் பராமரிக்கப்படுகின்றதிருக்கோவில்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.