தமிழக திருக்கோயில்கள் வரிசை - ஸ்ரீ காளஹஸ்தி - அருள்மிகு காளத்தீஸ்வரா் திருக்கோவில் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2016 (சனிக்கிழமை)
தமிழக திருக்கோயில்கள் வரிசை
ஸ்ரீ காளஹஸ்தி - அருள்மிகு காளத்தீஸ்வரா் திருக்கோவில்
-வல்வையூர் அப்பாண்ணா-
முன்னுரை:
தேவாதி தேவனான ஈஸ்வரன் ஜோதிர்லிங்க வடிவில் பன்னிரண்டு திருத்தலங்களிலும், ஜம்பூத வடிவில் ஐந்து திருத்தலங்களிலும் விசேடமாக எழுந்தருளியுள்ளான். இறைவன் பஞ்சலிங்கமாகத் தோன்றிய ஐந்து திருத்தலங்களுள் ஒன்றே “ காளஹஸ்தி ” ஆகும். இது தென்கயிலாயம் எனப்படுகிறது.“ கயிலாயத்து உச்சியுள்ளான் காளத்தியான் ” எனத் தேவாரம் பாடியருளிய திருநாவுக்கரசு சுவாமிகளாலும், “ கயிலை பாதி காளத்தி பாதி ” அந்தாதி பாடிய நக்கீர தேவரினாலும் நாம் காளத்தியின் பெருமையினை அறிகிறோம். அறிவற்ற உயிர்களாகிய சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்று உயிர்களும் தங்கள் உயர் பக்தியினால் முத்திபெற்ற ஸ்தலம் இது.இந்த வில்வ வனத்தில் குடிகொண்டுள்ள காளத்திநாதன், பிறவிக் கடலில் கரைகாணமல் துன்புற்று – அஞ்ஞான இருளில் அகப்பட்டு வருந்தும் நம்மைக் கரையேற்றும் அருளாளன் ஆவான்.
அமைவிடம்:
காளஹஸ்தி தொண்டை மண்டல ஸ்தலம். தமிழ்நாடு எல்லைக்கு வெளியே ஆந்திர எல்லையின் உள்ளே திருப்பதியிலிருந்து 40 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து 110 கி.மீ தூரத்திலும் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், வேலூா் போன்ற பெரு நகரங்களிலிருந்தும், ஏனைய நகரங்களிலிருந்தும் அடிக்கடி திருக்காளஹஸ்தி நோக்கி பேருந்துகள் புறப்படுகின்றன.“ சுவர்ணமுகி ” எனப்படும் “ பொன்முகலி ” ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இத் திருக்கோயில். கோயிலை அண்மிக்கும் பேருந்துகள் பொன்முகலி ஆற்றின் மேலாகப் போடப்பட்டிருக்கும் நீண்ட பாலத்தைக் கடந்தே செல்ல வேண்டும்.
பொது:
பஞ்சபூத ஸ்தலங்களுள் இது வாயுஸ்தலம்.இறைவனுக்குக் கண்ணினை அப்பிய திண்ணன் கண்ணப்பனாக முத்திபெற்ற அற்புதத் தலம் இது.வாயிலே பொன்முகலி ஆற்று நீரும், கொண்டையிலே காட்டுப்பூவும், ஒரு கையிலே மென்று ருசிபார்த்த இறைச்சியும், மறுகையில் வில்லும் அம்பும் கொண்டு காளத்தி மலைமீதேறி, குடுமித்தேவரைத் தரிசத்து முத்திபெற்ற வரலாறு அனைவரும் அறிந்தது. அதனால் வரலாற்றினை விடுத்து கோயில் அழகினைப் பார்த்து வருவோம்…. வாருங்கள்.
தேவார மூவராலும் பாடப்பெற்ற ஸ்தலம். முசுகுந்தன், சிவகோசாரியார், பரத்வாஜமகரிஷி போன்றவர்கள் காளத்திநாதரை வழிபட்டு முத்திப்பேறு அடைந்தனா். இது “ கைலாசகிரி ” எனச் சிறப்புப் பெயா் கொண்டு அழைக்கப்படுகிறது. ஸ்ரீ காளஹஸ்தி = ஸ்ரீ + காளம் + அத்தி = சிலந்தி + பாம்பு + யானை மூன்று ஜீவன்களும் காளத்தி நாதனை வழிபட்டு முத்திப்பேறடைந்தன. இத்தலம் ராகு + கேது தோச நிவர்த்தி ஷேத்திரமாகையால் இங்கே நவக்கிரகங்கள் கிடையாது.
காலி கோபுரம் :
ஏற்கனவே நான் குறிப்பிட்ட பொன்முகலி ஆற்றுப் பாலத்தினை அண்மிக்க முன்னரே நீண்டு நெடிதுயர்ந்து நிற்கும் “ காலி கோபுரம் ” வெள்ளை நிறத்தில் தூரத்திலேயே கண்ணுக்குத் தெரிகிறது. பாலம் தாண்டி கோபுரத்தை நெருங்க நெருங்க கோபுரத்தின் பிரமாண்டம் நமக்குப் புரிகிறது.கி.பி 1516 இல் கிருஸ்ணராஜ தேவராஜரினால் கட்டப்பட்ட ஏழு நிலைகள் கொண்ட இக்கோபுரம், கோயில் வளாகத்திற்கு உள்ளமையாது சற்று தள்ளி வெளியேயே உள்ளது. காலி கோபுரம் தாண்டி உள்ளே போனால்…..
பிஷசாலா கோபுரம் :
கோயில் வளாகத்தின் வடகிழக்கு மூலையை நெருக்கியபடி (சரியாகக் கிழக்கில் இல்லை ) ஐந்து நிலைகளுடன் கூடிய, ஆனால் 11 கலசம் கொண்ட பிஷசாலா கோபுரம் வருகிறது. இதுவே கோயிலின் பிரதான வாசலாகும்.இந்த பிஷசாலா கோபுரமும் ஏனைய சிறு கோபுரங்களும் கி.பி 11ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக் கோபுரத்தின் இரு மருங்கும் துவார கணபதி, தண்டபாணி சந்நிதிகள் இடம்மாறிக் காணப்படுகின்றன.
இந்தக் கோபுரத்தினூடாக நாம் உள்ளே சென்றால், மக்கள் அனைவரும் வழமைபோல (வலமாக) இல்லாமல் இடஞ்சுழியாகக் கோயிலை வலம் வருவதைப் பார்த்து நாமும் அவர்கள் பின்னே அப்பிரதட்சணமாக பிரகார வலத்தினை ஆரம்பிக்கிறோம். உண்மையில் நாம் இப்போது நிற்பது வெளிப்பிரகாரத்தின் வடக்குச் சுற்று. அப்பிரதட்சண வலம் ஏன் என்பதற்கு சரியான காரணம் புரியவில்லையாயினும் வடக்கு மற்றும் மேற்கு வெளிப்பிரகாரம் முழுவதும் சந்நிதிகளும், மண்டபங்களும், லிங்க மூர்த்தங்களுமாக நாம் தரிசிக் வேண்டியவை நிறையவே இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம்.
பாலஞானாம்பிகை கோபுரம்:
காசி விஸ்வநாதர் சந்நிதி தரிசனத்தை முடித்து பால ஞானம்பிகை கோபுரம் வரை நடக்கிறோம்.பாலஞானம்பிகை கோபுரம் மூன்று நிலைகளுடன் அளவான உயரத்துடன் காணப்படுகிறது. கோபுரத்தின் வலப்பக்கமாக வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணியா் வேல் தாங்கிய திருக்கோலத்தில் உள்ளார். இடது பக்கம் மேற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்தில் பாலஞாம்பிகையும், அருகே ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது.அடுத்துள்ள பஞ்சமுக விநாயகர் சந்நிதியுடன் ஆங்காங்கே இன்னும் பல சிவலிங்கங்களும் உள்ளன.
பாதாள விநாயகா்:
“ சிவய்ய கோபுரம் “ என அழைக்கப்படுகின்ற வடக்குக் கோபுர வாசலில் நிற்கிறோம். இந்த வழியாகத்தான் வழமையாக சுவாமி புறப்பாடு நிகழ்வதாகக் கூறினார்கள். இன்னும் சற்று முன்னே நகர்ந்ததும் “ பாதாள விநாயகா் ” சந்நிதி வருகிறது. பாதாள விநாயகா் இந்த ஸ்தலத்தின் முக்கிய மூர்த்தம். காளஹஷ்திக்கு வருபவா்கள் பாதாள விநாயகரைக் கண்டுகொள்ளாமற் போவதேயில்லை. நிலமட்டதிலிருந்து 35 அடி ஆழத்தில், குறுகலான 20 படிகள் வழியாகக் கீழிறங்கிச் சென்று பாதாள விநாயரைத் தரிசனம் செய்கிறோம்.பொன்முகலி ஆற்றின் மட்டமும், பாதாள விநாயகர் அமர்ந்துள்ள பீடத்தின் மட்டமும் சமமாக உள்ளதாக விபரம் தெரிந்தவர்கள் கூறக் கேட்டோம்.
அருகே இரண்டு மண்டபங்கள். ஒன்று “ சிவராத்திரி மண்டபம் ” மற்றது “ இரண்டு கால் மண்டபம் ” இந்த இரண்டு கால் மண்டபம் அனைவரினதும் பேசு பொருளாக இருந்தது. வெளிப் பார்வைக்கு இரண்டு கால்களில் மண்டபம் நிற்பதுபோல் தெரிந்தாலும் மற்ற இரண்டு கால்களும் உட்புறச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்டிருப்பது கூர்மையாக அவதானித்தாற் புரிகிறது.
சொக்கப்பானை:
இப்போது பிரகாரம் மேற்குச் சுற்றில் திரும்புகிறது. ஏறக்குறைய நடுப்பகுதியில் உள் மதிலை ஒட்டியபடி (நமது வலது கைப்புறமாக ) ஒரு சிறிய மண்டபம். மண்டபத்தினுள்ளே உள்ள சற்றே பெரிய அளவிலான நந்தி உள் மதிலில் உள்ள சதுர வடிவான சாளரத்தினூடாக கருவறையிலுள்ள குடுமித் தேவரைப் பார்த்தபடி உள்ளார். இந்த இடத்தருகே மண் நிரப்பப்பட்ட சதுரமான பகுதி தென்படுகிறது. கார்த்திகைத் தீபத்தன்று இங்குதான் “ சொக்கப்பானை ” கொளுத்தப்படுகிறது. வருடாவருடம் இதே இடத்தில் சொக்கப்பானை கொளுத்தப்படுவதால் அந்த மண் தரைப்பகுதி கருமையடைந்து காணப்படுகிறது.“ சொக்கப்பானை ” எனும் சொல் எங்கள் ஊர்களில் மட்டுமே பேசப்படும் ஒரு சொல் என எண்ணியிருந்த எனக்கு ஒரு அட்சரம் பிசகாமல் “ சொக்கப்பானை ” என அவர்கள் உச்சரித்தமை ஆச்சரியமாகவே இருந்தது.
திருமஞ்சனக் கோபுரம்:
வலது கைப்பக்கமாக மூலவரைப் பார்க்கும் நந்தியைப் பார்த்தோம். இடது கைப்பக்கமாக “ திருமஞ்சனக் கோபுரம் ” எனும் மேற்குக் கோபுரம் அருகே வந்து மேற்கு திசையைப் பார்த்தபடி நிற்கிறோம். சற்றுத் தள்ளி நாம் கடந்து வந்த பொன்முகலி ஆற்றின் பாலம் தெரிகிறது. கோபுர வாசலிருந்து 27 படிகள் கீழிறங்கினால் பொன்முகலி ஆற்றில் காலை வைக்கலாம்.இந்த 27 படிகளும் 27 நட்சத்திரங்களைக் குறிப்பதாக ஜதீகம். இந்தப் படிகள் வழியாகத்தான் குடுமித் தேவருக்கு அபிஷேகநீர் கொண்டு செல்லப்படுகிறது.(கோபுரமோ படிக்கட்டுக்களோ இல்லாமல் ) காடு மண்டிக் கிடந்த அந்தக் காலத்தில் திண்ணனார். இந்த வழியாகத்தான் பொன்முகலி ஆற்றுநீரை வாயில் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்கிறார்கள்.
காசியில் உள்ள புனித கங்கைபோல பொன்முகலி ஆறும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுவதால் “ உத்தரவாகினி ” எனப்பட்டது. நநிகள் உத்தரவாகினியாகப் பாயும் இடங்களில் பிதிர் கடன் செய்வதும், அஸ்தி கரைப்பதும் விசேடமானது. முனிவர்கள் பலரும் ஸ்வர்ணமுகியில் (பொன்முகிலி ஆற்றில் ) கிழக்குப் பார்த்தபடி நீராடி நிற்க, அவர்களுக்குக் காட்சி கொடுப்பதாகவுகாளத்திநாதா் மேற்கு நோக்கி உள்ளதாக ஜதீகம். நாமும் திருமஞ்சனக் கோபுர வாசலில் நின்றபடி கிழக்கே பார்த்தால் நந்தியின் பின்புறம் மட்டுமல்ல பல்வேறு மண்டபங்களும் மண்டபங்களில் வீற்றிருக்கும் லிங்க மூர்த்தங்களும் தெரிகிறது.
நாற்கால் மண்டபம் ஒன்றின் அருககே அஸ்டோத்தர லிங்கம் உள்ளது. ஒரு பெரிய நூற்றுக்கால் மண்டபமும் அருகில் பஞ்சந்தி விநாயகர் சந்நிதியும் காணப்படுகின்றது. இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் வாகனங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. எதிரே ஒரு பதினாறு கால் மண்டபம், தேவார மண்டபம், புஸ்ப மண்டபம் எனப் பல மண்டபங்களைக் பார்க்கிறோம். மேற்குப் பிரகாரம் திரும்பி தென் சுற்றுக்கு வருகிறது. மேலே குறிப்பிட்ட நூற்றுக்கால் மண்டபத்திற்கும் தென் கோபுரத்திற்கும் இடையில் பழைய கட்டிடப் பாணியில் காணப்படும் கட்டிடமே தேவஸ்தான அலவலகமாகும்.அருகே உற்சவ மண்டபம். உற்சவ மண்டபம் அருகே ஸ்தல விருட்சமான கல்லால மரம் (விழுதுகள் இல்லாத ஆலமரம் ) கிளை பரப்பி நிற்கிறது.
தசஹிண காலி கோபுரம்:
கல்லால மரத்தினைப் பார்த்தபடியே நடந்துவர “ தஷிண காலி கோபுரம் ” வருகிறது. இந்தத் தென் கோபுரம் 11 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்கன் ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள் .தஷிண கோபுரத்தினூடாக உள்ளே வருபவா்கள் நேராக நுழைவு வாசலினூடாக உட்பிரகாரத்திற்கு வந்து விடுவார்கள். நுழைவு வாசல் முன்பாக இரண்டு கொடிமரங்கள் காணப்படுகிறது. ஒன்று கவசமிடப்பட்டுள்ளது. மற்றது 60 அடிவரை உயரம் கொண்ட ஒரே கல்லினாலான கொடிமரம். நாமும் நுழைவு வாசலினூடாக முறைப்படி வலஞ்சுழியாக உட்பிரகாரத்துக்கு வருகிறோம். நேராக தட்சணாமூர்த்தி தரிசனம் (விபரம் பின்னர் வரும்).
இடது பக்கமுள்ள சிறு மண்டபத்தில் “ சங்கற்ப கணபதி ” யின் தரிசனம் மீண்டும் பிரகார வலத்தினைத் தொடர ஒரு குறித்த இடத்தில் நின்று பார்த்தால் சுவாமியின் விமான கலசமும், அதன் பின்புறமாக கைலாசமலையும் தெரிகிறது. அடுத்து “ சரஸ்வதி தீர்த்தம் ” என்றழைக்கப்படுகின்ற தீர்த்தக் கிணறு. அடுத்து இடது பக்கமாக செங்கல்வராஜா் (ஆறுமுகா் ) சந்நிதி. வள்ளி – தெய்வானை சகிதம் முருகன் அழகுத் தோற்றம் காண்பிக்கிறார்.
அடுத்து உற்சவ அலங்கார மண்டபம். இங்கே காளத்தீஸ்வரா், ஞானப்பூங்கோதை, கண்ணப்பா், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகா், பரத்வாஜ மகரிஷி, பிட்சாடானா், அத்தறதேவர், விநாயகா், சிலந்தி – யானை – பாம்பு முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. அருகேயுள்ள ஒரு மண்டபத்தில் சுந்தர கணபதி – மோட்ச கணபதி – பாலகணபதி என மூன்று கணபதிகளின் தரிசனம் கிடைக்கிறது.
மூலவா் – காளத்தீஸ்வரா்:
மூலவா் சந்நிதிக்குள் காலடி வைக்கிறோம்.தனி உட்பிரகாரத்தோடு கூடிய சந்நிதி இது.மேற்கே வெளிப்பிரகாரத்தில் சாளரம் வழியாக கருவறையைப் பார்க்கும் நந்தியின் பின்புறத்தைப் பார்த்தோமே…. ஞாபகமிருக்கிறதா? அதே நந்தியின் முற்பக்கத்தை உட்பிரகாரத்தில் – மூலவருக்கு நேராக இப்போது பார்க்கிறோம்.மூலவா் சந்நிதானம் முன்பாக சிறியதொரு இன்னொரு நந்தியும் உள்ளார். அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன்மண்டபத்தினை ரசித்தபடியே நேராக நிமிர்ந்து பார்த்தால்… காளத்தியப்பா் காளத்தீஸ்வரா், வாயுலிங்கேஸ்வரா், குடுமித்தேவா், தென்யிலைநாதா், கணநாதா், ஐங்குடுமித்தேவா் எனவும் இன்னும் பல திருநாமங்களும் கொண்ட இறையனார் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு அடி உயரமான உயர்ந்த லிங்கபாணம் லிங்கபாணத்தின் மேலாக எப்போதும் தங்கக் கவசம் சாத்தப்பட்டிருக்கும்.அந்தத் தங்கக் கவசத்தின் மேல் நுனியில் ஐந்து தலை நாகம் படமெடுத்தபடியுள்ள ஒரு தங்கக் கவசமும் உண்டு.
தங்கக் கவசத்தின் மேலாக ஒன்பது அடுக்குகளில் (மூன்று – மூன்றாக ) 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு நீண்ட மாலையும், ஒரு உருத்திராக்க மாலையும் மூலவரை அலங்கரிக்கின்றன. லிங்கபாணத்தைச் சுற்றிவர (சற்றே இடைவெளி விட்டு – சட்டவிளக்கு என்று சொல்கிறோமே – அந்த மாதிரி ) சுடர் விளக்குகள் எரிந்தபடி உள்ளன. அந்த விளக்கு அலங்காரத்தின் உச்சியில் அழகிய சிறிய பொற்குடை வைக்கப்பட்டுள்ளது. மூலவரின் தரிசனத்திற்காக வரிசை வரிசையாகக் காத்திருக்கும் பக்தர் கூட்டத்தினரின் அர்ச்சனை முதலான காரியங்களைக் கவனிக்க பல அர்ச்சகர்களும் காத்து நிற்கின்றனா்.
மூலவரைச் சுற்றியுள்ள சட்டவிளக்கொளி தவிர, இன்னும் பல சுடர் விளக்குகளும் கருவறையின் உள்ளே ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. ஏனைய விளக்குகளின் சுடர்கள் அனைத்தும் ஆடாமல் – அசையாமல் அப்படியே நிலைத்திருக்க, இரண்டு சுடர்கள் மட்டும் ஏதோ கடுங்காற்று வீசுவது போல வேகமாக அசைந்தாடுகின்றன. (கருவறைக்குள் காற்று வழியேயில்லை) மற்றைய சுடர்கள் நிதானமாக இருக்க இந்த இரண்டு சுடர்களுக்கு மட்டும் இந்த வுகம் எப்படி வருகிறது…?
காளஹஸ்தி பஞ்சபூத ஸ்தலங்களுள் வாயுத்தலம். காற்றாகி எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் எழில் தலம் இது.கருவறையில் பரமனார் காற்று வடிவமாகி நிறைந்திருப்பதனால் எழில் தலம் இது. கருவறையில் பரமனார் காற்று வடிவமாகி நிறைந்திருப்பதனால் இரண்டு சுடர்களும் அசைந்தாடிக் கொண்டே இருக்கின்றன. மூலவருக்கான அர்ச்சனை காரியங்களில் மும்முரமாக இருந்த இளம் அர்ச்சகர்கள் பலரையும் விடுத்து, ஒரு ஓரமாக ஒதுங்கியிருந்த வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவரை அணுகி, எற்கனவே நாம் அறிந்திருந்த சில விபரங்கள் பற்றி வினாவினோம். அந்த அர்ச்சகா் கூறிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
தங்கக் கவசத்தினுள்ளே உள்ள சுயம்பு லிங்க மூர்த்தம் அடிப்பகுதி பருத்தும், மேற்பகுதி சற்றே ஒடுங்கியும் காணப்படுகிறது.சிலந்தி – யானை – பாம்பு என மூன்று ஜீவன்களின் உடல்ரூபங்களையும் காளத்திநாதர் தம் திருமேனியில் தாங்கியுள்ளார்.அடியில் சிலந்தி, நடுவில் யானையின் தந்தங்கள், மேலே நாகத்தின் ஐந்து தலைகள் ஆகியன திருமேனியில் பதிந்துள்ளன. இதைவிட மேலே வலதுபுறம் திண்ணன் கண் அப்பிய வடுவையும் காணலாம். கவசத்தை வைக்கும் போதும் எடுக்கும்போதும் நமது (அர்ச்சகர்களின் ) கைகள் திருமேனி தீண்டாமல் மிக அவதானமாக இருப்போம். குடுமித் தேவரின் இத்தகைய அழகிய இயல்பான திருமேனியைத் தரிசிக்கக் கொடுத்து வைக்கவில்லை நமக்கு. நாம் செய்த “பாவத்தின் பயன் ” என நம்மை நாமே நொந்து கொண்டோம்.
சிவன் முக்கண்ணன்.கோபத்திற்கான நெற்றிக்கண்ணை சாந்தமான நிலையில் அவர் திறப்பதில்லை. காளத்திநாதருக்கோ மற்ற இரண்டு கண்கள் கூட அவருக்குச் சொந்தமில்லை. ஏன் தெரியுமா?ஐயனின் இடப்பாகம் அம்பிகைக்குரியது. அதனால் இடக்கண் அம்பிகையின் கண். வலக்கண்ணோ கண்ணப்பன் அப்பிய கண்.ஆகவே இவருக்குக் கண்கள் சொந்தமில்லை. ஆகமொத்தம்… நெற்றிக் கண்ணில் பாதி மட்டுமே இவருக்குரியது. இதையே காளமேகப் புலவா் “ சிவனாருக்கு அரைக்கண் ” என நகைச்சுவை ததும்பப் பாடுகிறார்.
முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவா்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே – மிக்க
உமையாள் கண் ணொன்ரைமற் றூன்வேடன் கண்ணொன்
றமையுமித னாலென் றறி
காளத்திநாதரைக் காணக் கண்கோடி வேண்டும். எவ்வளவு நேரம் தொழுது மகிழ்ந்தாலும் தெவிட்டாத திவ்விய தரிசனம் இது.இந்த அற்புத தரிசனம் தரும் அமைதியும் சாந்தியும் அளவிடமுடியாது. சந்நிதியில் மூலவருக்கப் பக்கத்திலேயே மனோண்மணி சக்தியின் திருமேனியும், அருகில் கைகூப்பித் தொழும் கண்ணப்பரையும் ஒன்றுசேரத் தரிசிக்கிறோம்.
மூலவா் கருவறையைத் தனியாக வலம்வர முடியுமாயினும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக கருவறை வலத்தினைத் தடை செய்துள்ளனா். விநாயா், தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவா், பிரம்மா, துர்க்கை ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்களாக உள்ளனா். இது கிரக நிவர்த்தி ஸ்தலம்.ராகு காளத்தீஸ்வரரிடத்தில் அடைக்கலமாகியிருக்க, கேதுவை அம்பாள் தன் திருமேனியில் ஒட்டியாணமாக அணிந்துள்ளாள்.இதனால் இங்கு நவக்கிரக சந்நிதி இல்லை.சனீஸ்வரனுக்கு மட்டும் தனிச் சந்நிதி உண்டு.
காளத்தீஸ்வரா் சந்நிதியில் திருநீறு பிரசாதம் தரும் வழமை இல்லை. கண்ணப்பரால் அபிஷேகிக்கப்பட்ட திருமூர்த்தம் என்பதால் தீர்த்தம் மட்டுமே உண்டு.பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்த தீர்த்தத்தை சங்கு ஒன்றின் மூலம் எமக்குத் தருகிறார்கள். நமக்கு அருகே நின்றிருந்த ஒரு தம்பதியா் கொடுத்த திருநீற்றுப் பொட்டலத்தினை சுவாமி பாத்தில் வைத்து தீபாரதனையின் பின்னா் அவர்களிடமே கொடுத்ததைப் பார்த்தோம்.
கோயில் பொது அம்சங்கள்:
திருக்காளத்தி தோஷ நிவர்த்தி ஸ்தலமாக உள்ளமையால் இராகு கால பூசைகளும் தரிசனமும் இங்கு விசேடமானவை.பகல் உச்சிக்காலப் பூசை முடிய நடை சாத்தப்படும் வழமை இங்கில்லை. அதிகாலை முதல் இரவுப் பூசைவரை கோயில் திறந்தே இருக்கும். முறைப்படியான நான்கு காலப்பூசைகள் இங்கு நடைபெறுகின்றன. இங்கு இன்னொரு வித்தியாசமான அம்சமும் நோக்கப்பட வேண்டியது. அர்த்த சாமப்பூசை இங்கில்லை. சாயரட்சைப் பூசை முடிந்து இரவு 8 மணிக்கு சுவாமி – அம்பாளை பள்ளியறைக்கு எடுத்துச் சென்று சேர்த்து விடுவார்கள்.
காளத்தீஸ்வரா் கோயில் அமைப்பு விசேடமானது. ஐயன் சந்நிதியும் அம்பிகையின் சந்நிதியும் அடுத்தடுத்து இணையாக உள்ளது. ஐயன் சந்நிதி மேற்கு நோக்க, அம்பிகையின் சந்நிதி கிழக்குப் பார்க்கிறது. இரண்டையும் சேர்த்தே உட்பிரகாரம் உள்ளது. இதைத்தவிர இரண்டிற்கும் தனித்தனியாக உள் சுற்றுக்களும் உண்டு. ஆனாலும் ஐயனின் உள்சுற்றினை சனநெரிசல் காரணமாக தடுத்திருப்பது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டேன். அப்பனுக்கு வலமாக அம்பிகை அமர்ந்திருக்கும் ஒரு சில கோயில்களுள் காளஹஸ்தியும் ஒன்று.
உட்பிரகாரம் – மேற்குச் சுற்று:
மூலவா் தரிசனத்தை முடித்து பிரகார வலத்தை (மேற்குச் சுற்று) தொடர்ந்தால் பல மண்டபங்களையும் சந்நிதிகளையும் சந்திக்கிறோம். வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணியர் ,காசி விஸ்வநாதர், ராமேஸ்வர லிங்கேஸ்வரா்: வில்லேந்தியபடி பக்தகண்ணப்பா், வல்லப கணபதி – லட்சுமி கணபதி – சக்தி கணபதி என மூன்று கணபதி மூர்த்தங்கள் தவிர இன்னும் பலப்பல லிங்கங்களும் காணப்படுகின்றன. மேற்குச் சுற்றிலிருந்து வடக்குச் சுற்றுக்குத் திரும்பும் மூலையில் கனகதுர்க்கையம்மன் சந்நிதி.வடக்குச் சுற்றுக்கு வந்தவுடன் நடராஜா் சபை. இரண்டு நடராஜா் திருமேனிகளும், இரண்டு சிவகாமி அம்மை திருமேனிகளும் உள்ளன. கூடவே மாணிக்கவாசகரும் உள்ளார்.தொடர்ந்து அறுபத்துமூவர் சந்நிதி.கிழக்குச் சுற்றினுள் நுழைய முன் கால பைரவா். அருகே இருப்பதுதான் “ஞானப்பிரசூனாம்பிகை ” எனும் திருநாமம் கொண்ட அம்பிகையின் திருவாசல்.
அம்பாள் சந்நிதி:
ஞானப்பூங்கோதை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப்பேரொளி, வண்டார் குழலாள் எனப் பலபெயர் கொண்டு அம்பிகையை அழைத்தாலும் “ ஞானப்பிரசூனாம்பிபை எனும் திருநாமமே பிரசித்தமானது. அம்பிகையின் திருவாசலின் உள்ளே நுழையும் இடத்தில் உயரமான அலங்கார விளக்கு.நந்தி இருக்க வேண்டிய இடத்தில் சிம்மம் உள்ளது. ஈசனின் சந்நிதியில் நந்திதேவரை யாரும் தொட்டு வணங்குவதில்லை ஆனால் இங்கு அனைவரும் சிம்மத்தைத் தொட்டு வணங்கியே செல்கின்றனா்.
இரண்டு திருக்கரங்களுடன் அம்பிகை ஞானப்பிரசூனாம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பிகையின் இடுப்பில் ஒட்டியாணமாகக் கட்டப்பட்டிக்கும் கேது. அழகிய சாந்தமான முகப்பொலிவு. அளவான அலங்காரம். இவளை வணங்கினால் கிரக தோஷங்கள் தீரும் என்கிறார்கள். சந்நிதியைத் தனியாக வலம் வரலாம். கோஷ்ட மூர்த்தங்கள் எதுவுமில்லை. வெள்ளிதோறும் அம்பாளுக்குத் தங்கப்பாவடை சாத்தப்பட்டு எதிரில் உள்ள மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. சந்நிதிக்கு வெளியே மேல் விதானத்தில் “ ராசிச்சக்கரம்” எழுதப்பட்டுள்ளது. அவரவா் ராசிக்கு நேராக நின்றபடி அம்பிகையை நினைத்து வணங்கினால் எண்ணியன யாவும் கைகூடும். பிரகார வலத்தினைத் தொடர்ந்தால், நாம் காணும் பல்வேறு லிங்கங்களுள் உயரமாக உள்ள ஒரு லிங்கம் “ பிரசன்ன காளத்தீஸ்வரா் ” என்றும், ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட “ஸ்படிக லிங்கமும் ” குறிப்பிடத்தக்கன. அருகிலேயே அப்பர், சுந்தரா், மாணிக்கவாசகா், கூடவே ஒரு வைரவரும் உள்ளனா். திரும்பும் மூலையில் சிலந்தி- யானை – பாம்பு இவற்றுடன் கண்ணப்பா் உருவங்களும் புடைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன.
தட்சணாமூரத்தி:
நாம் இப்போது உட்பிரகாரச் சுற்றினை முழுமையாக நிறைவு செய்து (தெற்கு வாசல் எதிரே) மீண்டும் தட்சணாமூர்த்தி அமர்ந்துள்ள இடத்துக்கு வந்துவிட்டோம். கண்கொள்ளாத பேரெழிலுடன் காட்சி தரும் தட்சணாமூர்த்தியின் வலது காலடியில் இருக்கும் முயலகன் லேசாகத் தலைநிமிர்ந்திப் பார்க்கிறான். இடது கால் மடித்து வலது கால்மீது வைக்கப்பட்டுள்ளது. சனகர் சனாதரா், சனந்தரா், சனத்குமாரா் ஆகிய நான்கு முனிவர்களுக்கும் கல்லால மரத்தின் கீழ் தட்சணாமூர்த்தி உபதேசிக்கும் காட்சி இது.இதனால் இத் திருத்தலத்தின் தலமரங்களில் ஒன்று கல்லாலம் (விழுதுகள் இல்லாத ஆலமரம்) எனப்படுகிறது. மற்றையது; மகிழ மரம்.கோயிற் பிரகாரத்தின் தெற்குக் கோபுர வாசல் வழியிலே மகிழ மரம் காணப்படுகின்றது. சின்முத்திரை காட்டி உபதேசிக்கும் மௌனகுருவின் புன்னகை ததும்பும் பொலிவான திருமுகத்தினை வணங்கித் துதி செய்து தெற்குக் கோபுரம் (தஷிண காலி கோபுரம் ) வழியாக நாம் வெளியே வருகிறோம்.
காலி கோபுரம் இடிந்து வீழ்ந்தது
16ம் நூற்றாண்டில் கிருஸ்ண தேவராஜரால் கட்டப்பட்டது காலிகோபுரம்.யான் காளத்தியப்பனைத் தரிசிக்கச் சென்ற போது வெள்ளை நிறத்தில் இக்கோபுரம் பளிச்சிட்டு நின்றது. ஆனால்….. ஆனால் 26.05.2010 புதன்கிழமை நள்ளிரவு இக் கோபுரம் முற்றாக இடிந்து விழுந்தமை உலகம் முழுவதுமுள்ள சைவப் பெருமக்களினை அதிர்ச்சியடையச் செய்தது. கோபுரத்துக்கு முன்பாக நிறுவப்பட்டிருந்த கிருஸ்ணராஜரின் சிலைக்கோ, அல்லது மிக நெருக்கமாக இரு பக்கமும் நிறுவப்பட்டிருந்த கடை வரிசைகளுக்கோ சேதமெதுவுமின்றி அல்லது எவருக்காவது உயிரிழப்போ இன்றி அப்படியே இடிந்து விழுந்து மண்மேடாகியது காளத்தியப்பன் கருணையே. அதனை மீண்டும் அதே அமைப்பில் கட்டித் தருவதாக ஆந்திர அரசு சைவ உலகிற்கு உறுதியளித்திருக்கிறது.
தஷிண கயிலாய மலை:
சற்றே முன் புறமாக நிமிர்ந்து பார்த்தால் தெரிவதுதான் “ தஷிணகயிலாயமலை ” இந்த மலையின் பெயராலேயே “ கயிலாய நாதர் ” என அழைக்கப்படுகிறார் காளத்தீஸ்வரா். காளத்தி மலையைத் தரிசித்தாலே காளத்தி நாதரைத் தரிசித்த பலன் கிடைக்கும் இதையே நக்கீரதேவர் “ கயிலை பாதி காளத்தி பாதி ” எனப் பாடினார்.
கண்ணப்பா் மலையென்றே அழைக்கப்படுகின்ற கயிலாய மலைமீது ஏறுவதற்கு வசதியாகப் படிகள் உண்டு. மேலே ஏறிச் சென்றால் கண்ணப்பருக்கு ஒரு சந்நிதி. கண்ணப்பா் வழிபட்ட சிவனாருக்கு ஒரு சந்நிதி.வில்லேந்திய கோலத்தில் கண்ணப்பா் காணப்படுகின்றார். கண்ணப்பா் மலையிலிருந்து பார்த்தால் கீழே காளத்தீஸ்வரர் கோயிலும் கோயிலைச் சுற்றியுள்ள ஊர்மனையும் தெளிவாகத் தெரிகின்றன.இந்த அழகுக் காட்சியினைக் காண்பதற்காகவே தினமும் பெருங்கூட்டம் மேலேறிச் செல்கிறது.
சோமஸ்கந்த வடிவமைப்பு:
இம் மலையிலிருந்து வடக்கே பார்த்தால் எதிரே துர்க்காதேவி கோயில் கொண்டிருக்கும் ஒரு மலையும், சற்றே கிழக்காகத் திரும்பினால் முருகன் எழுந்தருளியிருக்கும் குன்று ஒன்றும் தெரிகிறது. வடக்கே துர்க்கையும்- தெற்காக காளத்தீஸ்வரரும்- இடையே முருகனும் இருக்கும் இந்த முன்று மலைகளுமே சோமஸ்கந்த வடிவில் காட்சி தருகின்றன.
நிறைவுரை:
காளத்தியுள் நுழைந்தாலே முத்தி நிட்சயம் என்பது காலங்காலமாக இருக்கும் அசையாத நம்பிக்கை.ஆகவே வாழ்க்கையில் ஒரு முறையாவது காளத்திநாதரைக் கண்குளிரக்கண்டு முத்திக்கு வழிதேடுவோம்.
நன்றி:ஞானச்சுடர், தை 2013
அடுத்த வாரம்: “ திருபட்டூா் ”தமிழ் நாட்டில் பிரம்மாவுக்குரிய தனிக் கோவில் அமைந்துள்ள ஒரே இடம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.