திருவையாற்றையும் திருவயைாற்றைச் சுற்றியுள்ள ஏழூர்களையும் உள்ளடக்கிய திருவிழாவே“ ஏழூர்ப்பெருவிழா ” எனப்படுகிறது.
ஏழூர்ப் பெருவிழாவின் கதை ஒரு கல்யாணக்கதை என்பதை (பங்குனிமாத ஞானச்சுடரில்) திருவையாறு ஸ்தல விபரத்தில் பார்த்தோம்.
சூரிய புஷ்பகரணி குளத்தின் மகிமைபற்றிக் குறிப்பிடவேண்டிய இடத்தில் அந்த இடத்திற்கு ஏற்றபடியாக ஜப்பேசன் கதை சுருக்கமாகத்தரப்பட்டது. ஏழூர்ப்பெருவிழாவின் நிறைவுப்பகுதியான இப்பகுதியில் மிகுதி விபரத்தையும் சொல்லவேண்டியுள்ளது.
திருவையாற்றுக்கு அருகே அந்தணக்குறிச்சி என்றொரு சிறியகிராமம் உண்டு. தமக்குப் பிள்ளைப்பேறுவேண்டி திருவையாறு ஜப்பேச மண்டபத்தில் தவமிருந்த சிலாத முனிவருக்கு“ புத்திரகாமேஷ்டியாகத்தின்பயனாகமகன்பிறப்பான் ” என ஜயாறப்பர்வரமருளினார். அதன்படி அந்தணக்குறிச்சியில் சிலாத முனிவா் புத்திரகாமேஷ்டியாகத்தை நடாத்துவிக்க, யாக பூமியில் ஒரு பெட்டி கிடைத்தது. அதில் நான்கு தோள்களும், மூன்று கண்களும், பிறைச்சந்திரன் தாங்கிய சிரசும் கொண்ட விக்கிரகம் ஒன்றிருந்தது.
இறைவன் அசரீரிப்படி சிலாதர் பெட்டியை மீண்டும் மூடித்திறக்க, உள்ளே சின்னஞ்சிறு பாலகன் சிரித்தான். அவனே “ஜப்பேசன்” ஆனான். அந்தணக்குறிச்சியில் ஜப்பேசன் அவதரித்த நாள் பங்குனித் திருவாதிரை நன்னாள்.
பதினாறு வயதுமட்டுமே ஜப்பேசனுக்கு வாழ்வு விதிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் ஜப்பேசன் திருவையாறு சூரியபுஷ்பகரணியில் ஒற்றைக் காலில் நின்று தவஞ் செய்தான். கங்கைஜலம், பிரம்பகமண்டலநீர், அம்பிகையின்பால், மேகநீர், ரிஷபவாய் நுரை ஆகியவற்றைக் கலந்து ஜப்பேசனுக்கு இறைவனே அபிசஷகஞ் செய்வித்து அவனை சிவகணங்களுக்குத் தலைவன் ஆக்கினார். ஜப்பேசன், அதிகாரநந்தியுமானார்.
மகன்போல அருள் வழங்கிய பக்தனுக்குத் திருமணஞ் செய்துவைக்கப் பெண் தேடினார் இறைவன். இறைவனின் இன்னொரு பக்தரானவியாகரபாதருக்கு( புலிக்கால்முனிவா் ) ஓர் அழகான மகள் இருந்தாள். அவள் பெயர் சுயம்பிரகாசை. இருவருக்கும் “பொருத்தம்” மிக நன்றாக அமைந்தபடியால், திருமழபாடியில் பங்குனி புனர் பூசத்திருநாளில் திருமணம் இனிதே நிறைவெய்தியது.
ஆண்டியான சிவபெருமான் கல்யாணச் செலவு முழுவதற்கும் எங்கே போவார்? பாவம்…… அயலூர்க்காரா்கள் (பெருமான்கள்) அவரவா் பங்குக்குச் சில செலவுகளை ஏற்றுக்கொண்டார்கள். இதன்படி பழமும், பூவும், சோறும், நெய்யும், அலங்காரத்திற்கான நகைகளும், திருமணத்தை நடாத்திவைக்க வேதியர்களையும் தக்கநேரத்தில் அனுப்பிவைத்து திருமணத்தைச்சிறப்பித்த அயலூா்ப் பெருமான்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவே இந்தஏழூர்ப்பெருவிழா.
புதுமணத்தம்பதிகளானநந்தியும், சுயம்பிரகாசையும் சித்திரைப் பௌர்ணமிக்கு அடுத்தநாள் ஒரு முத்துப்பல்லக்கிலும், ஜயாறப்பரும் – தர்மசம்வர்த்தனியும் ஒரு கண்ணாடிப் பல்லக்கிலும் ஏறிக் கொள்ள பெருவிழா ஊர்வலம் ஆரம்பமாகிறது. திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் என ஊர்வலம் போகிறது.
அந்தந்தஊரில், அந்தந்த ஊர்ப்பெருமான்கள் தம்பிராட்டியோடு எதிர்வந்து அழைத்து விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். அந்தந்த ஊரிலிருந்து புறப்படும்போது, அந்தந்த ஊர்ப்பெருமானும் பிராட்டியும் அவரவா் பல்லக்கில் உடன்புறப்பட்டு விடுவார்கள். இப்படி நகரும்இந்த ஊர்வலத்தில் பெருமான்களும் பெருமாட்டிகளும் மட்டுமல்ல… பக்தர்கள் – இசைவித்துவான்கள் – நடனக்காரா்கள், நயனம் வாசிப்போர் என எல்லோரும் சேர்ந்துதான் போவார்கள்.
திருவையாறுப் பகுதியில் சப்தஸ்தானவிழா (ஏழூா்ப்பெருவிழா ) என்பது அங்குள்ளவர்களின் குடும்பவிழாவாக – எந்த ஊரில் இருந்தாலும் தங்கள் சொந்த பந்தங்களைச் சந்திக்கும் விழாவாக அமைந்துள்ளதால் விசாரிப்புகளும், விருந்து உபசாரங்களும் கேளிக்கை கொண்டாட்டங்களுமாக உற்சாகம் பொங்கி வழியும் முதல் நாள் தொடங்கியவிழா, மறுநாள் மதியம் அளவில், விழா ஆரம்பமான இடமாகிய திருவையாற்றுக்கு ஏழுபெருமான்களும் வந்துசேருவதுடன் நிறைவுக்குவருகிறது.
கோலாகாலமான இந்தப் பெருவிழா தேவார மூவர்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.ஆனால், அருணகிரிநாதர்காலத்தில் இப்பெருவிழா இருந்திருக்கிறது என்பது அவரது திருப்புகழ்பாடல்கள் மூலம் தெரிகிறது. சப்தஸ் தலங்களில் திருநெய்த்தானம், திருப்பூந்துருத்தி இரண்டிலும் ஏறக்குறைய ஒரே அமைப்புடைய முருகன் ஒரு திருமுகம், நான்குகரங்கள், வள்ளிதெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் மயில்வாகன முருகனாக அருள்பாலிக்கிறார்.
திருவையாற்றில் தேவியர் இருவருடனும்வில் தாங்கிய தனி சுசுப்பிரமணியரூபமாக முருகன் வீற்றிருக்கிறார். மேற்குறித்த மூன்று தலங்களுக்கும் தனித்தனித்திருப்புகழ் உண்டெனினும், ஏழூர்களையும் குறிக்கும் தனித் திருப்புகழ் ஒன்றுண்டு.
திருவின்மாமரமார்பழனப்பதி
அயலும்சோறவையாளுதுறைப்பதி
திசையினான்மறைதேடியமுற்குடி விதியாதிச்
சிரமுமாநிலம்வீழ்தருமெய்ப்பதி
பதுமநாயகன்வாழ்பதிநெய்ப்பதி
திருவையாறுடன்ஏழுதிருப்பதி பெருமாளே
இந்தத் திருப்புகழில் திருவின்மாமரமார் பழனப்பதி, அயிறுசோறவையாளு துறைப்பதி, திசையின் நான்மறை தேடிய முற்குடி, விதியாதிச் சிரம்மா நிலம் வீழ் மெய்ப்பதி என முறையே பழனம், சோற்றுத்துறை, வேதிகுடி, கண்டியூர் ஆகியவற்றைக்குறிப்பிட்டதால் இவை நான்கும் திருப்புகழ் வைப்புத்தலங்களாகக் கொள்ளமுடிகிறது.
நந்தியின் திருமணத்திற்குப் பொருள்களைத் தாரளமாகக் கொடுத்த ஏழூர்ப் பெருமான்களும் அடியார்கள் மீது கருணையை வாரிவாரி வழங்கும் வள்ளல்கள். திருப்பழனத்தழகா் (ஞானசித்திரை 2012) பாவத்தைத்தீர்ப்பவா்.
உலக பாவங்களிலிருந்து இந்த ஐீவனைப்புனிதப்படுத்தி மெய்மையான உயிர்தந்து இவரே ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்துவைக்கிறார். அடுத்தவர் சோற்றுத்துறைநாதர்.(ஞானவைகாசி 2012) உடலுக்கு ஊட்டம்போல உயிருக்கு ஊட்டம் கொண்டபின்னா் வேதப்பொருளை நாடுவதே பொருத்தம்.
அதனாற்றான் இறைவன் அருளும் வேதங்களை காது கொடுத்து இங்கே விநாயகர் கேட்கிறார். நமக்கும் நல்வழி காட்டுகிறார். அடுத்து திருக்கண்டியூர் (ஞானஆடி2012 ) ஆன்மீகப் பாதையில் ஆணவம் மிகுந்துவிட்டால் சிரத்தை தொலைக்கவேண்டியதுதான். பிரம்மாபட்ட அவஸ்தைதான் நமக்குத் தெரியுமே. அடுத்து பூந்துருத்தி (ஞானஆவணி 2012) பூக்களை ஒன்று சேர்த்து மாலையாகத் தொடுக்கிறோம்.
ஆன்மீகப் பயணத்திலும் பக்குவம் தேடுகிற ஆன்மாக்கள் பக்குவம் பெற்றபிற ஆன்மாக்களோடு சேர்ந்து புனிதப்படுகிறது. இதையேபற் பல முனிவர்களும் மேற்கூறிய பேருண்மையுடன் பூந்துருத்தியில் வாழ்ந்துகாட்டினார்கள். அடுத்தது நெய்த்தானம் (ஞான ஐப்பசி 2012) பாலிற்குப்படு நெய்யாக உள்ள இறைவனை அனுபவரீதியாக உணர்வதைக் குறிக்கும் தலம்.
மீண்டும் நிறைவாகத் திருவையாறு (ஞானபங்குனி 2012) "கயிலைக் காட்சியினைக்காணக் கயிலை வரவேண்டாம். அது திருவையாற்றிலேயே கிடைக்கும் ”என நாவுக்கரசருக்கு சிவனார் அருள் வழங்கிய தலம்.
அப்பாடா நடையாக நடந்து ஏதோ ஒரு வழியாக ஏழூர்ப்பெரு விழாவினை, விழா ஆரம்பித்த இடமான திருவையாற்றினில் நிறைவுசெய்து கொண்டோம்.
திருவையாற்று நாயகனான பஞ்சநதேஸ்வரரை மீண்டும் ஒருமுறை வணங்கி நமது திருக்கோயில் பயணத்தைத் தொடருகிறோம்.
வல்வையூர் அப்பாண்ணா
நன்றிஞானச்சுடர், 2012 கார்திகை
அடுத்தவெள்ளி “திருக்காளகஸ்தி” இறைவன் ஐம்பூத வடிவில் அமர்ந்திருந்து அருள்புரியும் லிங்கங்களுள் ஒன்று “காளகஸ்தி ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.