பிள்ளையார் வீதியில் வேட்டைத் திருவிழா - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2019 (திங்கட்கிழமை)
அம்பாள் மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா வேட்டைத் திருவிழா. கொடியேற்றத்தின் பின்னர் பல்லாயிரக்கனக்கானோர் கூடிப் பார்த்த திருவிழா. புலம்பெயர்ந்திருந்த நம்மவர்கள் 1000 ற்கும் அதிகமானோரின் கண்களுக்கு விருந்தாகிய திருவிழா. 20, 25, 30 வருடங்களின் பின்னர் ஊர் மண்ணைத் தொட்டுப் பார்த்த பலபேரின் ஆவலுக்கும் தீனியிட்ட திருவிழா. இந்திர விழாவிற்கு முன்னோட்டமான திருவிழா. இந்த எட்டாம் திருவிழாவின் மின் அலங்கார சிறப்பு நெடியகாடு கணபதி படிப்பக மின் அமைப்பாளர்களுக்கு கிடைத்த வெற்றி.
மோர் மடத்தை அண்மித்த இத்தி மரம் முதலானவற்றில் பச்சை - நீல - மஞ்சள் வர்ணங்களில் தொங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ரியூப் லைற்றுகளும், வேட்டை நடைபெற்ற சுற்றாடலில் உள்ள மரங்களில் கைக்கு எட்டிய தூரத்தில் சின்னங் சிறிதாக வட்டத்திலும் - இன்னும் வடிவங்களிலும் ஆரேஞ்சு - பச்சை நிறங்களில் ஒளிர்ந்த நிறங்களும், குளத்தில் உயரம் தொட்டு நின்ற நீர் விளையாட்டும் - வாத்துக்களும் கணபதி படிப்பகம் அருகே வீதியின் குறுக்காகவும் மற்றும் வெவ்வேறு இடங்களிலும் காணப்பட்ட சிறு மின் பல்ப்புகளின் அலங்கார வரிசைகளும் ஆகியவை அனைத்துமே பிள்ளையார் வீதிக்கு அழகு சேர்த்தன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக விழாவிற்கு அழகூட்டி அனைவரையும் பிரம்மிக்க வைத்த நான்கு விடயங்கள் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.
1. அனைவரதும் கவனத்தைக் கவர்ந்த இன்னொரு லைற் அலங்காரம் மடத்தின் மூலையில், மோர் மடத்தப் பார்த்தபடி 4'*4' பிளைவூட் அட்டையில் ஒளிர்ந்த மாஜா ஜாலம். ஏறக்குறைய 30 நிற மாற்றங்களை உள்ளடங்கிய ஒளி ஓட்டத்தில் வந்துபோன நிறங்களின் வரிசை ... ஆகா.... அற்புதம்... ஒரு வேண்டுகோள். இது அமைந்திருந்த இடம் அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. குளத்தின் கிழக்குப் பக்க சுவரை ஒட்டியோ, அல்லது வேறொரு பொருத்தமான இடத்திலோ இதனை மாற்றுவது இன்னும் அழகூட்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
2. பிள்ளையார் தெற்கு வீதியில் வரிசையாக இருபுறமும் காணப்பட்ட ஆறு சோடி அன்னப்பறவைகளின் அணிவகுப்பு. முன்புறம் - பின்புறம் - எப்புறம் நின்று பார்த்தாலும் அன்னங்களின் அழகு தெரியக்கூடியதாக - முப்பரிமாண பாணியில் - அமைந்திருந்த அன்னங்களின் நடுவாக, அம்பாள் மோர்மடம் நோக்கி வரும் அற்புதக் காட்சியினை தங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் உள்வாங்க - நெரிசலாக மக்கள் கூட்டம் முண்டியடித்தது.
3. பிள்ளையார் ஈசான மூலையில் மேற்கு நோக்கியபடியிருந்த 6 நட்சத்திரங்களை உள்ளடக்கிய சுழலும் அமைப்பு பல்வேறு நிறம் கொண்ட ரியூப் லைற்றுக்களினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை பிரதான வீதியில் நின்றபடி ரசிக்க பிரமிப்பாகவுள்ளது.
4. மோர் மட உச்சியில் ஒரே ஒரு அச்சில் - மோர் மடம் முழுவதையும் மூடி நிலத்தைத் தொடும் அளவிற்கு மிக நெருக்கமாக ஒளிர்ந்து - சுழன்று கொண்டிருந்த மின் அலங்காரம் கண்டு வியப்படையாதோரே இல்லை எனலாம். சற்றுத் தூர நோக்கில் மோர் மடம் முழுதும் சுற்றிச் சுழலுவது போன்றதொரு தோற்றத்தை இவ்வலங்காரம் ஏற்படுத்துகிறது.
அன்பான கணபதி மின் அமைப்பாளர்களே !
வேட்டைத் திருவிழா தனியே ஊர் மக்களுக்கானது. இந்திர விழா குடாநாட்டு மக்களுக்கான பொதுவிழா. இந்த அற்புதமான மின் அலங்கார அழகினை நூறுவீதமும் நம்மவர்களே பொறுமையாகப் பார்த்து - நிதானமாக ரசித்து - அனுபவித்துப் பேசி மகிழும் சூழல் இந்திரா விழாவன்று கிட்டாது.
வேட்டைத் திருவிழாவிற்கும் - இந்திர விழாவிற்கும் இடையே ஏழு நாட்கள் இடைவெளி இருப்பது இன்னும் பலப்பல மின் ஜாலங்களைக் காட்டிட உங்களுக்கு அவகாசம் இருப்பினும் அதனைப் பார்த்து மகிழ்ந்திட நம்மவர்களுக்கு வாய்ப்பு மிக குறைவு. அதனால், இனிவரும் காலங்களில் வேட்டைத் திருவிழா நாளில் இன்னமும் கூடுதலாக மின் அலங்கார விருந்து படைக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். இந்த வேண்டுகோள் கூட ஒரு வகையில் சுய நலம் தான் ... மறுக்கவில்லை .... இருப்பினும் அவசியமான சுய நலம் ....
பலசிறிய புகைக் கூண்டுகளும், 60 ஆடி உயரமான புகைக் கூண்டும் வானத்தில் பறக்க விடப்பட்டபோது, ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ரசித்த பல்லாயிரக்கணக்கான நம் ஊரவர்களின் மனங்களில் நிறைந்து நிற்பவர்கள் நீங்கள் . உங்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்....
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.