பவள விழா காணும் வல்வை சனசமூக சேவா நிலையம் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2019 (வெள்ளிக்கிழமை)
1943ல், தற்போதைய நவீன சந்தை கட்டிட்டத்தின் வடக்கு புறமாக – தற்பொழுது இடிந்த நிலையில் உள்ள கிட்டங்கியலும், பின்னர் தனியார் கடைப்பகுதிகளிலும், “வல்வை இலவச வாசிக்க சாலை’ என்னும் பெயரில் இயங்கி வந்தது இந்நிலையம். மறைந்த க. ஆனந்தமயில் (பாகவதர்) அவர்களினதும், அவரோடு இணைந்திருந்த இந்நாளைய இளைஞர்களின் அயரா முயற்சியின் பலனாகவும், அந்நாளில் பட்டினசபைத் தலைவராகவிருந்த மறைந்த ஜ.திருப்பதி அவர்களின் பூரண ஒத்துழைப்புடனும், 1950ல் புதிய கட்டிடத்திற்கு (இன்றைய கட்டிடமல்ல) மாற்றம் பெற்றது.
ஊரின் மையத்தில் – சந்தியில் வல்வை சனசமூக சேவா நிலையம் அமைந்திருந்தமையால் (இடவேறுபாடற்ற) கிழக்கிலிருந்து மேற்காகவும் - வடக்கே ரேவடி முதல் தெற்கே தெணியம்பை வரையிலான துடிப்புள்ள சமூக ஈடுபாடு கொண்ட இளைஞர்களால் காலத்திற்கு காலம் நம் மக்களின் வாழ்வியலின் பல்வேறு அம்சங்களுடன் தன்னை ஈடுபடுத்தி சேவையாற்றி வந்திருக்கிறது.
நிலையத்தின் சாதனைகளைக் சுருங்கக் கூறின் இவ்வாறு அமையும். வாரமொருமுறை புத்தகங்களை இரவல் கொடுத்து வாங்கும் புதிய நடைமுறையை ஏற்படுத்தியமை, வருடம் தவறாத நவராத்திரி விழா பூசை வழிபாடு, 1970 ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போதுள்ள ஊர்திகள் பவனிக்காக – நமது பராம்பரிய அடையாளச் சின்னமாகிய “அன்னபூரணி”கப்பலின் மாதிரி உருவமைப்பை ஆக்கி யாழ் நகர வீதி எங்கும் பவனி வந்தமை, இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்தியலிங்கம் பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்தை ஊர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்து நிலையத்தில் திறந்து வைத்தமை, சித்திரைப் புத்தாண்டு தினத்தில் சந்தியில் கயிறுழுத்தல் – போர் தேங்காய் அடித்தல் – கிளித்தட்டு முதலான விளையாட்டுக்களை நடாத்தியமை, 1972ல் முதன்முதலாக “அலைஒளி” கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டமை, (திறன்மிகு பல்துறை விற்பன்னர்களையும், நாடக நடிகர்களையும், எழுத்தாளர்களையும், ஓவியர்களையும் உருவாக்கிய பெருமை “அலைஒளி"க்கு உண்டு.) பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த நம்மவர்களான மறைந்த நவரத்தினசாமி – ஆனந்தன் முதலானோரின் நீச்சல் சாதனை வேளையில் முக்கிய அனுசரணையாளராக நிலையம் ஆற்றிய பங்களிப்பு, 1978ல் மட்டக்களப்பு கண்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்த வேளையில், ஊரில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து பாதிக்கப்பட மக்களுக்கு நேரில் சென்று வழங்கியமை, 1968ல் நிலையத்தின் வெள்ளி விழா நிகழ்வின் போதும், 1994ல் நிலையத்தின் பொன் விழா நிகழ்வின் போதும், மரதன் ஓட்டம் முதலான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தமையும் போன்ற நிலையத்தின் சாதனைப் பட்டியல் மிக நீண்டவை. ஒவ்வொரு தலையங்கம் பற்றியும் விரிவாக எடுத்துரைப்பின் இவ்வாக்கம் மிக நீண்டதாகி விடும். அதனால் இடப் பெறுமதி கருதியும் – இன்றைய தலைப்பின் முக்கியத்துவம் கருதியும் மேற்கண்ட பந்தியை சுருக்கியுள்ளேன்.
இடைக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக நிலைய கட்டிடம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், (2014) அன்றைய வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு.ம.க.சிவாஜிலிங்கம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டினாலும் – பங்களிப்பினாலும் இன்றைய வல்வை சனசமூக சேவா நிலைய கட்டிடம் மாடிக் கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டு, 2014 தைப்பூசத் திருநாளன்று திரு.ம.க.சிவாஜிலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இன்று (2019) வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பவளவிழாஆண்டு. திரு.சி.சிவநேசன் அவர்களைத் தலைவராகவும், திரு.R.சுரேன் அவர்கள் செயலாளராகவும், திரு.V.P.பாலேந்திரன் பொருளாளராகவும், இன்னும் 9 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுடன், பவளவிழா நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கான முன் ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
அத்துடன் வல்வை சனசமூக சேவா நிலையத்தின் வரலாறு கூறி நிற்கும் பல்வேறு தலைப்புக்களுடன் – நிலைய வெள்ளி விழா மலரில் வெளியான கட்டுரைகளும் – நம்மவர்களால் பல சந்தர்ப்பங்களிலும் எழுதப்பட்ட பெறுமதிமிக்க கட்டுரைகளுமாக ஏறக்குறைய 200 பக்கங்கள் கொண்ட கனதியான ஒரு பவள விழா மலரினை வெளிக்கொணரும் வேலைகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. அநேகமாக 29-03-2019 வெள்ளியன்று ரேவடிக் கடற்கரை மைதானத்தில் இடம்பெறும் நாடக நிகழ்வின் போது – பவள விழா மலர் வெளியீடும் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
சிறுகதை, கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான ஆக்கங்களை பெரும் முடிவுத் திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கிடைக்கப் பெற்ற ஆக்கங்களை தரப்படுத்தும் வேலைகளும் நடந்து வருகின்றன.
பவள விழா நிகழ்வுகள் வருமாறு.
01.கரப்பந்தாட்டம் (SET UP GAME) – (யாழ் மாவட்டம்)
அமரர் கு.மதனசுந்தரம் ஞாபகார்த்தமாக அன்னாரது மகன் ம.ஸ்ரீதரன் (மதனஸ்ரீ) அவர்களின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட போட்டியின் முதல் பரிசாக ரூபா 30,000/-, 2 வது பரிசாக ரூபா 20,000/- , 3வது பரிசாக ரூபா 10,000/- காசுப் பரிசாக வழங்கப்படவுள்ளன. மின்னொளியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
02.20 மைல் சைக்கிள் ஓட்டப்போட்டி- (யாழ் மாவட்டம்)
29-03-2019 காலை 07.௦௦ மணிக்கு வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் வடக்கு வீதியில் ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சிக்கு முதற் பரிசாக ஆண்களுக்கான சைக்கிளும், இரண்டாவது பரிசாக பெடஸ்ரல் மின் விசிறியும், மூன்றாவது பரிசாக மேசை மின் விசிறியும், மற்றும் 7 ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
03.கடற்கரை கரப்பந்தாட்டம் : பெண்கள் பங்கு கொள்ளும் வடமாரட்சி கழகங்களுக்கிடையிலான இந்தக் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
04.முத்தான மூன்று நாடகங்கள்
01.“மாலைக்கு வாதாடிய மாரியின் மைந்தன்”
அண்ணாவியார் சிவாப்பாவின் நெறிப்படுத்தலில் இப்புராண நாடகம் 29-03-2019 வெள்ளியன்று ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெறும்.
02.“அந்தி மாலை பாடல் ஒன்று”
கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.T.தர்மலிங்கம் அவர்களின் இயக்கத்தில் உருவான நவீன நாடகம் 30-03-2019 சனியன்று வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் தெற்கு வீதியில் இடம்பெறும்.
03.“பத்துத் தலை இராவணன்”
எனும் ஆடல் பாடல் நிறைந்த கற்பனை இதிகாச நாடகம் கலாநிதி சபா.இராஜேந்திரன் அவர்களால் நெறிபடுத்தப்பட்டு, சனியன்று வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் தெற்கு வீதியில் 31-03-2019 ஞாயிறன்று மேடையேற்றப்படவுள்ளது.
(மேற்குறித்த மூன்று நாடகங்களும் மாலை 07.௦௦ மணிக்கு ஆரம்பமாகி 10.௦௦ மணிக்கு நிறைவுக்கு வரும்).
05.வினோத உடைப் போட்டி:
21.04.2019 ஞாயிறு காலை 08.00-10.00 மணிவரை
06.காப்பந்தாட்டம் இறுதிப்போட்டி
21.04.2019 ஞாயிறு இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கான தேதி- இடம்- நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
பவளவிழாவின் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் தேதியும், இடமும் இன்னமும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லையாயினும், விசேட நிகழ்வாக “பட்டிமன்றம்”, பரிசளிப்பு, உரைகள் என திட்டமிடப்பட்டிருக்கின்றது. எப்படியும் அம்பாள் தீர்த்தோற்சவத்தை 19.04.2019 அடுத்து வரும் மூன்று – நான்கு நாட்களுக்குள் இறுதி நிகழ்வு இடம்பெறும் என வல்வை சனசமூக சேவா நிலையத்தின் தலைவர் திரு.சி.சிவநேசன் மூலம் அறிய முடிந்தது.
பெரும்பொருட் செலவில் நடைபெறவுள்ள வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பவள விழா நிகழ்ச்சிக்காக புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களும், உள்ளூரில் பலரும் மனமுவந்து நிதி உதவி புரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரதும் ஒன்றிணைந்த ஒத்தாசையுடன் பவள விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வெகு சிறப்பாக நடந்தேற ஊரில் உள்ள நாம் அனைவரும் நிலைய நிர்வாகத்துடன் கரம் கோர்த்து நிற்போம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.