'சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்' - தமிழ்ப் பெயர்களைத் தேடும் பெற்றோர்களுக்கு இந்த நூல் உதவும்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2019 (வெள்ளிக்கிழமை)
ஒரு கலாசாரத்தின் வரைபடம் 'மொழி. ஒருவர் எங்கிருந்து வருகிறார், எதை நோக்கிப் பயணிக்கிறார் போன்ற தனிநபர் வரலாற்றின் சான்று அவர்களின் மொழியே. அப்படிப்பட்ட அரிய அடையாளத்தை எந்த அளவுக்கு நாம் பாதுகாக்கிறோம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிட்டது.
ஒரு நாளில் நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் நம் 'பெயர்'கூட இன்றைய சூழலில் பிறமொழியைச் சார்ந்துதான் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் சிகாகோவில் நடைபெற்ற பெட்னா மாநாட்டில், தமிழ் இயக்கம் உருவாக்கிய 'சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்' எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், சங்க இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட 46,000 தனித்தமிழ் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-வது தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா ஆகியவை சிகாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழ் இயக்கத்தின் தலைவருமான டாக்டர் கோ.விசுவநாதன் முயற்சியில் உருவாகியுள்ள 'சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்' என்ற நூல் வெளியிடப்பட்டது.
தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்தப் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை வி.ஐ.டி துணைத்தலைவர் கோ.வி.செல்வம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை (பெட்னா) தலைவர் சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தொழிலதிபர் பால் பாண்டியன், மருத்துவர் சு.சம்பந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் மற்றும் வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதில், 23,000 ஆண் பெயர்களும் 23,000 பெண் பெயர்களும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக, வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் புலவர் வே.பதுமனார் பதிப்பாசிரியராகவும் செயல்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வைப் பற்றித் தமிழ் இயக்கத்தின் தலைவர் டாக்டர் கோ.விசுவநாதனிடம் கேட்டபோது, "இன்றைய இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைவிடப் பிறமொழி பெயர்களைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். இது மிகவும் கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. ஒருவருடைய பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த தனித்துவமான அடையாளம். பிறமொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது சொந்த அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்தும். எனவே, இந்த அவலத்தைப் போக்க இந்நூல் பெரிதும் உதவும். 30 நாள்களுக்குள் இந்தப் புத்தகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த தமிழ் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் புலவர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.
இந்தப் புத்தகத்தின் தொகுப்பாளர் ச.பார்த்தசாரதி, "ஓர் இனத்தின் வரலாறு அவர்களின் பெயரிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால், கடந்த 15, 20 ஆண்டுகளில் இளம் தமிழ் பெற்றோர்கள் நாகரிகம் என்று கருதி வாயில் நுழையாத, பொருளற்ற பிறமொழி பெயர்களை வைக்கும் நிலை உருவாகியுள்ளது. நம் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் நல்ல தமிழ்ப் பெயர்களை நம் குழந்தைகளுக்குச் சூட்ட இந்த நூல் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 'திருக்குறள்' நூல் போன்று ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும் தமிழ் நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஓர் அற்புதமான நூல் இது" என்று குறிப்பிட்டார்.
'உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால், உன் குரல்வளை நெறிக்கப்படுகிறது என்பதுபோல் தமிழ்ப் பெயர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக இருக்கிறது இந்நூல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: August 19, 2019 at 08:42
அதிசிறந்த சிந்தனை செயல் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.