ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என்கிற பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை.
திருப்பதியில். படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள்.
முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம்’ படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது `அடிமைப் பெண்’ படப் பாடலான `ஆயிரம் நிலவே வா’!
பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி’, `காதலன்’ இரண்டு, இன்றும் நினைவில் நிற்பவை!
எஸ்.பி.பி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள். `சங்கராபரணம்’,` ரூத்ர வீணா’, `ஏக் துஜே கேலியே’, `மின்சாரக் கனவு’ என இவர் பாடியதெல்லாம் ஒலி பரப்பாகாத நாளே இல்லை!
``ஏக் துஜே கேலியே’’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இதுதான் எல்லாப் பாடகர்களையும்விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு!
இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள் இருவரும் `வாடா, போடா’ எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்!
சுத்தமான சைவ உணவுப் பழக்கம், இவ்வளவு பெரிய ஆகிருதிகொண்ட இவர் சாப்பிட எடுத்துக்கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள். தயிர் சாதம்... இஷ்ட உணவு!
இதுவரை 42,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்!
எத்தனை மொழிகளில் பாடினாலும் பெருமைக்காக பாடாமல், அந்த அந்த மொழிகளின் தெளிவான சரியான உச்சரிப்பை அழகாகக் கையாண்டவர் SPB. அதனாலேயே எந்த மாநிலம் ஆனாலும் "இவரு நம்மாளு" என்கிற அன்பினை அம்மாநில மக்களிடம் பெற்றார்.
எஸ்.பி.பி. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்!
யாரையும் வெறுக்காமல், யாராலும் வெறுக்கப்படாமல் இன்று இந்திய திரை உலகில் ஒருவர் இருந்தார் எனில் அது SPB மட்டுமே.
மூச்சுவிடாமல், `கேளடி கண்மனி’யில் `மண்ணில் இந்தக் காதல்’ `அமர்க்களம்’ பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பிக் கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்!
எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி ஜேசுதாஸ், முகமது ரஃபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார். டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்தப் பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்!
எம்.ஜி.ஆரே விரும்பிக் கொடுத்த பாடல் `ஆயிரம் நிலவே வா’ அந்தப் பாடலுக்கு எஸ்.பி.பி.அழைக்கப்பட்டபோது, குளிர் காய்ச்சலில் இருந்தார். `ரெஸ்ட் எடு, நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர் பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய் மூணு நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு!’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்!
கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பி-யின் தணியாத தாகம்.
பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். பிற இசையமைப்பாளர்களின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா... ராஜாதான்’ என்கிற கட்சி!
’மழை’ படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்துவைத்து. பாடி வெளியேறியது எல்லாம் 12 நிமிடகளில் முடிந்துவிட்டது!
கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார்!
`துடிக்கும் கரங்கள்’ படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்!
பிறந்த தினம் ஜீன் 4, 1946. பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை!
`முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்!
ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை.
`எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு’ என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்!
சினிமாவில் இருந்தாலும் சினிமாக்காரகள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லை.
ஏனோ, இப்போதும் தனிமைதான் இவருக்கு விருப்பம். சினிமாவையும் வீட்டையும் தள்ளித் தள்ளியே வைத்திருக்க விரும்புவார்!
பொது மேடைகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், பத்திரிக்கை பேட்டிகளில், பொது இடங்களில் - யாரையும் குறைசொல்லியோ கோபப்பட்டோ பழக்கம் இல்லாதவர் SPB.
எஸ்.பி.பி பிரமாதமாக வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறை வழி கசியும்.
எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு!
தெலுங்குப் படங்களில் நிறைய `ராப்’ பாடல்கள் எழுதியவர். `கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு’ என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!
சிறுவர் ஆனாலும், பெரியவர் ஆனாலும், சாதாரண மக்கள் முதல் புகழின் உச்சியில் உள்ளவர் வரை - ஒரே மாதிரியான மரியாதையைத் தந்தவர் SPB.
கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்!
100% LOVERS
0% HATTERS
இந்த வார்த்தைக்கு மிகப் பொருத்தமாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் SPB.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.