பருத்தித்துறை மீன்பிடி துறை அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2019 (சனிக்கிழமை)
பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (30) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'மைத்ரி ஆட்சி – நிலையான நாடு' மற்றும் 'பேண்தகு மீன்பிடி கைத்தொழிற் துறையின் ஊடாக மீன்பிடித் துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாக திகழ்தல்' எனும் எதிர்கால நோக்கிற்கமைய வடக்கு மீன்பிடித் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த மீன்பிடித் துறைமுகம் இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட மிக விசாலமான மீன்பிடித் துறைமுகமாகும்.
இதற்காக 12,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரியளவிலான 300 படகுகளுக்கு தேவையான வசதிகளை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய இந்த துறைமுகத்தின் இறங்குதுறை 7.1 ஹெக்டயார் பரப்பளவையும் துறைமுகப் படுக்கை 18.6 ஹெக்டயார் பரப்பினையும் கொண்டுள்ளதுடன், 880 மீற்றர் நீளத்தையும் 480 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது.
உலகிலுள்ள நவீன ரக மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக பயன்படுத்தல், பிடிக்கப்படும் மீன்களை கரை சேர்த்தல். எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்ளல், படகுகளை பழுதுபார்த்தல், ஐஸ் மற்றும் குளிர்சாதன வசதிகள், படகுகளுக்கான இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ளல், மீன் விற்பனை, வலை தயாரிப்பு, கடைத்தொகுதி, கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வசதிகள், கரையோரப் பாதுகாப்பு சேவைகள், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த மீன்பிடித் துறைமுகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.