கும்பா விஷேகத்திற்கான பொருள் உதவி போன்றவற்றை வல்வையைச் சாராத பிற ஊர்களைச் சேர்ந்த அடியார்கள் செய்ததுபோல மகோற்சவங்களையும் வல்வையின் அயற்கிராமங்களான வல்வெட்டி, கம்பர்மலை, உடுப்பிட்டி,
தொண்டைமானாறு மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அடியார்கள் ஏற்று நடாத்திவருவது ஒரு சிறப்பான அம்சமாகும்.
கும்பாவிஷேக தினத்தன்று மயிலிட்டியைச் சேர்ந்த அடியார் ஒருவர் அதில் கலந்துகொள்ளும் நோக்கோடு வல்வை வந்து கோயில் வாசலில் உள்ள கிணற்றில் கால் அலம்பிவிட்டு உள்ளே செல்லமுற்பட்ட சமயம், கோயிலில் வாசலைச் சுத்தம்
செய்து கொண்டிருந்த ஒருவர், இந்த அடியாரை நோக்கி உமது காலின் பிற்பக்கம் அலம்பப்படவில்லை என்று கூறியிருக்கின்றார்.
அந்த சமயம் வாசலைத் துப்பரவு செய்து கொண்டிருந்தவர் இடுப்பில் ஒரு சிறிய துண்டை மட்டும் மட்டும் கட்டிக்கொண்டிருந்தமையால் வந்தவர் அவருக்கு அலட்சியமான வார்த்தைகளைக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
கும்பாவிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகி எசமானுக்கு சங்கற்பம் செய்யும் போதுதான் தான் அலட்சியமான வார்த்தைகளைக் கூறியவர் தான் இக்கோயிலின் எசமான் என்பதை அறிந்துகொண்டதோடு கிரியைகள் யாவும் நிறைவுற்றதன் பின்
எசமானரான வெங்கடாசலம்பிள்ளை அவர்களிடம் வந்து மன்னிப்புக்கோரியதோடு இதற்குண்டான தண்டனை எதுவோ அதை தான் ஏற்றுக்கொள்வதாயும் கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் எசமான் அந்த அன்பரிடம் சிவனின் கொடியேற்ற திருவிழாவை ஏற்று நடாத்தும்படி கேட்க, அந்த அன்பரும் அதனை ஏற்று நடாத்துவதற்கு சம்மதத்தைத் தெரிவித்தார்.
இச் சம்பவமே மயிலிட்டி அன்பர்கள் கொடியேற்ற விழாவினை ஏற்றுநடாத்துவதாக எமது முன்னோர்கள் மூலம் அறிந்துகொண்டதாகும்.
இக் கோயிலின் நித்திய நைமித்திய பூசை செலவுக்காக வல்வையிலுள்ள வியாபாரிகள் முதலானோர் பல வகையான ஏற்பாடுகளைச் செய்து மகமைப் பொருட்களை வழங்கிவந்துள்ளார்கள்.
வே.வைரமுத்துப்பிள்ளை என்னும் பிரபல வர்த்தகர் ஒருவர், தான் கொடுக்கும் மகமைப் பொருட்களை செவ்வனே கொடுத்து வந்ததோடு, மட்டக்களப்பில் நெல்லுக்கிள்ளுதலாகிய ஒரு ஏற்பாட்டை தாமே உண்டுபண்ணி, அதில் கிடைக்கும்
வருவாயை கோயிலுக்கு வழங்கிவந்துள்ளார். இந்த பிடி நெல்லுக் கிள்ளும் ஏற்பாட்டைத் தவிர, இவ்வூரவர்கள் பிடி அரிசி கிள்ளுதல், உண்டிகைப்பெட்டி மகமை, வியாபார மகமை, கூலி மகமை, சம்பள மகமை ஆகியவற்றையும் ஏற்பாடு
செய்துவந்துள்ளார்கள்.
பா.மீனாட்சிசுந்தரம்
திரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்கள் 24.10.1892 இல் சிவபதமடைய இவரின் சகோதரர்களில் ஒருவரான திருமேனியார் குழந்தைவேற்பிள்ளை எசமான் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இவரில் காலத்தில் வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியைச் சேர்ந்த, யாழ் குடாநாட்டில் உள்ள பிரபுக்களில் ஒருவரான காசிநாதர் வயித்திலிங்கம் என்பவர் 1901 ஆம் வருடம் வசந்த மண்டபத்தினை கருங்கல்லினால் கட்டிக்கொடுத்துள்ளார். இவர் யாழ் குடா நாட்டிலுள்ள அநேக கோயில்கள், பாடசாலைகள் என்பவற்றுக்கு பல தர்மகாரியங்கள் செய்துள்ளார்.
திரு.குழந்தைவேற்பிள்ளை அவர்கள் 1905 ஆண் ஆண்டு வரை கோயில் எசமானாக இருந்த சிறப்புற நடாத்திவந்துள்ளார்.
இவருக்குப் பின் திரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களின் இளைய சகோதரர் இராமசாமி அவர்கள் எசமான் பொறுப்பை ஏற்று 1912 ஆம் வருடம்வரை பனியாற்றினார் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.