வடமராட்சி நீரேரியை மையப்படுத்தி குடாநாட்டிக்கான மாற்றுக் குடிநீர் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2019 (புதன்கிழமை)
யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிதண்ணீர்ப் பிரச்சினைத் தீர்விற்காக தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் குடிநீர்த் திட்டப் பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இதனை ஆரம்பித்து வைக்கவுள்ளார். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைய வேண்டிய இந்த திட்டம் வனஉயிரிகள் திணைக்களத்தின் முட்டுக் கட்டையால் ஓராண்டு தாமதமாக ஆரம்பிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண குடிதண்ணீர்ப் பிரச்சினை நீண்ட காலமாக பேசப்பட்டு வருகின்றது.அதற்கு பல்வேறு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
இரணமடுவிலிருந்து குடிதண்ணீரைக் கொண்டு வருதல், வடமராட்சி கிழக்கிலிருந்து கடல் நீரை நன்னீர் ஆக்குதல் என்று பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்ட போதும், அதிலுள்ள அரசியல் இழுபறிகள் காரணமாக எந்தவொரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் மாற்று குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் வடமராட்சியில் நீரேரியில் உள்ள நீரை குளத்தில் தேக்கி விநியோக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறைக்கு செல்லும் வீதியில் 6வது மைல் கல்லுக்கும் 9 வது மைல் கல்லுக்கும் இடையிலான பிரதேசத்தில், உப்பாறு நீரேரியில் கப்பூது வெளி அந்தணத் திடல் பகுதியில் மிகப்பெரிய குளம் அமைக்கப்படவுள்ளது. இந்தக் குளம் 6 சதுர கிலோமீற்றர் பரப்புடையதாகவும், 7.5 மீற்றர் உயரம் உடையதாகவும், குளத்தின் அணைக்கட்டு 4 மீற்றர் அகலம் உடையதாகவும் இருக்கும்.
வடமராட்சி நீரேரியில் மழைக் காலத்தில் கடலுக்கு செல்லும் நீர், சாவகச்சேரி - பருத்தித்துறை வீதிக்கும் வல்லை வெளிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வடமராட்சி நீரேரியில் ஆணைகள் அமைக்கப்பட்டு புதிய துருசு நிறுவப்பட்டு அங்கு தடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் அந்தணத் திடல் பகுதியிலுள்ள குளத்துக்கு நீர் இறைக்கப்படும்.
குளத்தில் 4.5 மீற்றர் உயரத்துக்கே இயந்திரம் ஊடாக இறைக்கப்பட்டு நீர் தேக்கப்படும். குளத்துக்கு நேரடியாக கிடைக்கும் மழை நீரும் அதனுள் தேக்கப்படும். குளத்தில் சராசரியாக ஆண்டுக்கு 24 எம்.சி.எம் நீர் சேமித்து வைக்கப்படும்.
வடமராட்சி நீரேரியில் மழை நீர் சேகரிக்கப்பட்டு எதிர்காலத்தில் அந்த நீரேரி நன்னீர் நீரேரியாக மாறும் வகையில் திட்டம் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த்து. இதனால் நாகர்கோவில் பிரதேசத்தில் மங்குரோஸ் தாவரங்கள் அழிவடையும் எனத் தெரிவித்து வன உயரியல் திணைக்களம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்திருந்த்து.
தற்பொழுது நீரேரி ஊடாக கடலுக்கு செல்லும் மேலதிக நீரையே குளத்திற்கு இறைக்கப்படும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் நீரேரியில் உள்ள நீர் வழமை போன்றே இருக்கும்.
இத்திட்டத்திற்கான அலுவலகம் சரசாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி அரச தலைவர் மைத்திரிபலா சிறிசேன ஆரம்பித்து வைக்கவுள்ளார்.(உதயன்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.