வடமராட்சியில் மழைநீரை சேகரிக்கும் பாரிய குடிநீர் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2019 (சனிக்கிழமை)
இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (30) முற்பகல் வடமராட்சியில் இடம்பெற்றது.
யாழ் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்காக இரண்டு பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டம் நீர்ப்பற்றாக்குறையினால் மிகுந்த சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் மாவட்டமாகும். இந்த பிரதேசத்தில் ஆறு அல்லது சிறிய மற்றும் பெரியளவிலான நீர்த்தேக்கங்கள் எதுவும் காணப்படுவதில்லை. இதனால் 1,012 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இப்பிரதேசத்திற்கு வருடந்தோறும் 1,250 மில்லிலீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றாலும் அந்த நீரை சேகரிப்பதற்கான வசதிகள் எதுவும் இங்கு அமையப்பெறவில்லை. எனவே இம்மக்களின் நீர்த்தேவை நிலத்தடி நீரை அடிப்படையாகக் கொண்டே பூர்த்தி செய்யப்படுகின்றது.
வருடாந்த மழைவீழ்ச்சியின் ஒரு பகுதி மாத்திரம் குடா நாட்டில் அமைந்துள்ள வடமராட்சி, உப்பாறு மற்றும் ஆனையிறவு ஆகிய மூன்று களப்புகளில் தங்கியிருப்பதுடன், அந்த நீரும் எவ்வித தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாது 39 மில்லியன் கனமீற்றர் நீர் பயனின்றி கடலுக்கு செல்கின்றது.
யாழ் குடா நாட்டின் வருடாந்த நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்கு 18.28 கனமீற்றர் தேவையாகவுள்ளது. அந்த நீரை மிக இலகுவாக மேற்குறிப்பிட்ட நீரினூடாக பூர்த்திசெய்வதற்கான ஆற்றல் காணப்படுவதுடன், அதன் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினை இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: September 01, 2019 at 08:33
அதிசிறந்த வேலைத்திட்டம் மிக்கமகிழ்ச்சி .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.