தமிழக முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைவியுமான ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா அபாரதமும், சிறைத்தண்டனையை தொடர்ந்து 6 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட தடை என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோன் மைக்கேல் டி குன்ஹா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதன் மூலம் முதலமைச்சராக பதவியில் இருக்கும்போதே தண்டனை பெரும் முதல் முதலமைச்சர் என்ற சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா.
மேலும் இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு அடுத்த குற்றவாளியான அவரின் இணைபிரியா தோழி சசிகலா, இளவரசி, அவரின் வளர்ப்பு(?) மகன் சுதாகரன் ஆகியோரும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒவ்வொருவருக்கும் 10 கோடி அபாரதமும் விதிக்கபட்டுள்ளது.
குற்றவாளியாக அறிவிக்கபட்டவுடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தமது பொறுப்பில் எடுத்து கொண்டனர். அவரின் வாகனத்தில் இருந்த தேசியக்கொடியும் அகற்றப்பட்டது. நீதிமன்றுக்கு வெளியே 144 தடையுத்தரவையும் மீறி திரண்ட அதிமுக ஆதாரவாளர்கள் மீது தடியடி நடத்தி 150 பேர் கைது செய்யப்பட்டனர். பிற்பகலில் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதா மருத்துவ பரிசோதனையின் பின் ஜெயிலில் அடைக்கபட்டார்.
தீர்ப்பு வெளியானவுடன் தமிழகத்தில் பஸ் எரிப்பு, கல் வீச்சு, கருணாநிதி, சுப்ரமணிய சுவாமி உருவ பொம்மை எரிப்பு என்று பதற்ற நிலையாக காணப்பட்டது. அதிமுகவினர் வீதிகளில் மறியலில் ஈடுபட்டனர் இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதேவேளை இவ்வழக்கினை பற்றி நோக்குவோமானால் ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக இருந்த காலப்பகுதியான 1.7.1991 முதல் 30.4.1996 வரையான காலப்பகுதியில் வருமானத்துக்கு அதிகமாக 66கோடி பெறுமதியான சொத்துகளை சேர்த்ததாக இந்திய அரசியலின் ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் சுப்ரமணியசுவாமி 14.6.1996 வழக்கு தாக்கல் செய்தார்.
அப்போது சுப்ரமணியசுவாமி பற்ற வைத்த திரி 18 ஆண்டுகளாக எரிந்து 6 நீதிமன்றம் 90 நீதிபதிகளை கடந்து இறுதியாக நீதிபதி ஜோன் மைக்கேல் டி குன்ஹாவினாவிலேயே டெட்டனேட் செய்து நேற்று வெடித்திருக்கின்றது. இடையில் ஜெயலலிதா 2001ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது திமுக செயலாளர் அன்பழகனினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வழக்கினாலேயே விசாரணை பெங்களூருக்கு மாற்றப்பட்டிருந்தது.
அதிகார மையங்கள் சம்பந்தபட்ட வழக்கு என்பதால் எத்தனையோ இடைஞ்சல்களை எதிர்கொண்ட வழக்கு நீதிபதி ஜோன் மைக்கேல் டி குன்ஹா கடந்த 11 மாதங்களுக்கு முன் பொறுப்பாக வந்ததும் வேகமாக ஓட்டமெடுக்க தொடங்கி நேற்று முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்து ஜெயலலிதா இல்லை என்றால் அடுத்த முதல்வர் யார்? அதிமுகவில் அடுத்து யார்? என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் எவரிடமுமே இல்லை. வேணுமென்றால் தற்காலிகமா ஒரு டம்மி முதலமைச்சர் உடனடியாக நியமிக்கபடலாம். அதிகமாக அது ஓ பன்னீர் செல்வமாகவும் இருக்கலாம். ஏனெனில் 2001ம் இது மாதிரியான சந்தர்ப்பத்தில் அவரே உடனே தற்காலிக முதலமைச்சராக பதவியேற்றிருந்தார்.
ஆனால் நீண்டகால தீர்வு எவரிடமும் இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா என்ற தனியொரு மனித அதிகார மையத்தை சுற்றி பணியாளராகவே மற்றவர்கள் இயங்கியிருந்தனர். இந்நிலை மிகவும் அபாயகரமானதாகும். குறிப்பிட்ட அமைப்பில் அடுத்ததாக ஒரு தலைமைத்துவம் வளர்த்தெடுக்காபாடாவிடில் அவ்வமைப்பின் எதிர்காலம் முற்றிலுமாக ஒரு சூனியத்துக்குள் சென்றுவிடும்.
வழமையாக இப்பிடியானதொரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அதன் போட்டியாளருக்கு சாதகமான அம்சத்தை வழங்கும். ஆனால் போட்டியாளரான திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலமையோ இன்னும் மோசம் ஆக இது தேசிய கட்சியான பாரதிய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் ஆழமாக காலூன்றுவதற்கு அரியதொரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றது.
இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யலாம். அடுத்து ஜாமீனில் ஒரு வாரம் கழித்து வெளியே வரலாம். ஆகவே உடனடியாக அம்மா மீண்டு வரமுடியாவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு கால இடைவெளிக்கு பின் உச்ச நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று விடுதலையாகி மீண்டும் ஜெயலலிதா என்ற அதிகார மையத்தையும் நிறுவுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.