வடக்கு மாகாணத்தின் நீர்வளம் மற்றும் நீர்வள அபிவிருத்தி தொடர்பான ஆய்வரங்கில் உரையாற்றுகையிலேயே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண விவசாய அமைச்சு மற்றும் தேசிய நீர் முகாமைத்துவ வடிகாலமைப்புச் சபையும் இணைந்து இதனை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தன.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறள்ள குறித்த ஆய்வரங்கின் ஆரம்ப நிகழ்வு நேற்று இ டம்பெற்றது. நீர் வள முகாமைத்துவம், நிலத்தடி நீர் வளத்தினை பாதுகாத்தல், நீர் வள அபிவிருத்தி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபை யின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞனம்,கௌரவ விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம்,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன்,நீர் வள முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் லலித் டி அல்விஸ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
நாங்கள் கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது மாகாணம் பல விதங்களிலும் மற்றைய மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. இங்கு நதிகள் இல்லை. ஆனால் நற்குளங்களையும் கிணறுகளையும் கொண்டதொரு பிரதேசம். எனவே தனித்துவமான ஒரு நீரியல் கொள்கை எமக்கு அவசியம்.
விரிவான கலந்துரையாடலை தொடர்ந்து ஏதேனும் ஒரு துறை குறித்து அரசியல் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களே கொள்கைக்கு அடிப்படையாகின்றது.
நாட்டின் ஒவ்வொரு துறை சம்பந்தமாகவும் கொள்கையை வகுக்கலாம். அதே போன்று மாகாண ரீதியாகவும் வகுக்கலாம். எவ்வாறு ஒரு துறை சம்பந்தமாக அபிவிருத்தி நடைபெறவேண்டும், சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற அனைத்தினதும் வடிவமைப்பு கொள்கையினுள் அடங்க வேண்டும்.
மத்திய அல்லது மாகாண அரசாங்கம் கொள்கையை வகுத்த பின் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு அந்தந்த அரச, மாகாண திணைக்களங்களுக்குண்டு. ஒரு நாட்டின் அல்லது மாகாணத்தின் அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நோக்குகளின் பிரதிபலிப்பாகவே கொள்கை அமைய வேண்டும் என்று தெரிவித்தார்
வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உரையாற்றுகையில்:
வடமாகாணத்தின் நீர்வளத்தை மீட்டெடுக்க மாகாணம் சார்ந்த கொள்கை திட்டமிடல் ஒன்றை வகுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது
விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தங்கிவாழும் நிலையிலிருந்து விடுபடவும் வடமாகாணத்தில் நீர்வளத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நீர்வளத்தை மீட்டெடுக்க மாகாணம் சார்ந்த கொள்கை திட்டமிடல் ஒன்றை வகுத்தல் அவசியம். இது தொடர்பான திட்டமிடல்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆலோசனைகள், முன்மொழிவுகள் என்பவும் முன்வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும்
அந்த ஆலோசனைகள், முன்மொழிவுகள், ஆய்வுகள் என்பவற்றை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றுகையில்:
தண்ணீர் இனிமேல் சமூகங்களுக்கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் பகைமையை மூட்டிவிடும் எரிஎண்ணையாக இருக்கப்போகிறது. அடுத்த உலகப் போருக்கான காரணியாக அமையப்போகிறது என்ற அச்சம் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு உலகில் நீருக்கான நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சனத்தொகை அதிகரிப்பால் நீருக்கான தேவை அதிகரித்து வருவதோடு, கிடைக்கின்ற நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்து வருகிறது
வடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பை கொண்டுள்ளது.அதுமாத்திரமின்றி வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட
நீர்முலங்களையும் கொண்டது. வடக்கில் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இதனால் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கை அவசியம். அதற்கமைவாகவே, எனது அமைச்சு இநத ஆய்வரங்கை ஏற்பாடு செய்துள்ளது. என்று தெரிவித்தார்.
நீர் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,நீர் வளத் துறை பொறியியளாளர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். (News.lk)