உலகக்கோப்பை கிரிக்கெட் : நியூசீலாந்து அணி இங்கிலாந்து அணியை உருட்டி எடுத்தது!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2015 (வெள்ளிக்கிழமை)
இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் 226 பந்துகள் இருக்கத்தக்கதாக 8 விக்கெட்களால் இங்கிலாந்தை வீழ்த்தி தான் விளையாடிய 3 குழு நிலை போட்டிகளிலும் வெற்றிபெற்று குழு Aயில் முதன்மை அணியாக திகழ்கிறது.
உலகக்கிண்ண போட்டித்தொடரின் 9வது போட்டியான இன்று குழு A அணிகளான நியூசிலாந்தும், இங்கிலாந்தும் மோதின. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான சௌத்தியின் அவுட்ஸ்வீங்குக்கு முகம் கொடுக்கமுடியாமல் 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது ரூட் 40 ஓட்டங்களை பெற்றார். சௌத்தி 33 ரன்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தினார். இதுவே நியூசிலாந்து அணி சார்பாக உலகக்கோப்பையில் சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும். மற்றைய நாடுகளை பொறுத்தவரை மெக்ராத்,அன்டி பிச்செல் 2003 உலகக்கிண்ணத்தில் 7 விக்கெட்களைத்தான் வீழ்த்தியிருந்தாலும் முறையே 20,18 ஓட்டங்களையே விட்டுக்கொடுத்திருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் கோரத்தாண்டவம் ஆடிய மக்குலம் 25 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களை பெற்றார். இவர் இன்று 18 பந்துகளில் அரைசதத்தை கடந்து உலகக்கிண்ண போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைச்சதம் என்ற தனது சாதனையை முறியடித்தார்.போட்டியின் ஆட்டநாயகனாக சௌத்தி தெரிவானார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.