பல மில்லியன் ரூபா செலவில் ரேவடியிலும் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த விளையாட்டுத் திடல் !
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2016 (சனிக்கிழமை)
பாக்கு நீரினையை நீந்திக் கடந்த கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகாரத்மாக, ஆனந்தன் நீச்சல் பயிற்சியினை ஆரம்பத்தில் மேற்கொண்டிருந்த வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியிலும் ஒரு விளையாட்டுத்திடல் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்க இலாகவிற்குச் சொந்தமான இந்த இடத்தில், ஒரு சிறிய நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கு என்பன அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது, ஆனாலும் இது தொடர்பில் இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் வல்வைக்கு வியஜம் செய்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சால் வல்வையின் தீருவில் பகுதியில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்டத்திற்கான ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த சர்வதேச தரத்திலான நீச்சல் தடாக வலயம் அமையவுள்ள பகுதியைப் பார்வையிட்ட பின்னர், ரேவடிப் பகுதியையும் பார்வையிட்டார்.
இதன்போதே ரேவடி பகுதியிலும் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக சில விளையாட்டு சார் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படவேண்டும் என முன்மொழியப்பட்ட கருத்தை ஏற்றுக் கொண்ட வெளிவிவகார அமைச்சர், சுங்க இலாகாவிற்குச் சொந்தமான இந்தக் காணியை வல்வை நகரசபை சுவீகரித்து, விளையாட்டுத் திடல் அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பிலும் நேற்று யாழ் அரச அதிபர் பணிமனையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இந்தக் கட்டுமானத்திற்குரிய செலவினை ஆனந்தனின் குடும்பத்தினர் வழங்குவர் என தெரவிக்கப்படுகின்றது. மேலும் சில பொது அமைப்புக்களும் சில பங்களிப்புக்களைச் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றுக் காலை ரேவடிப் பகுதியின் சுங்க இலாகாவிற்குரிய காணிகள் தொடர்பான எல்லை அளவுகள் போன்றன சில வல்வை நகரசபை உத்தியோகத்தர்களால் திரட்டப்பட்டிருந்தன.
வல்வெட்டித்துறை சந்தி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலிருந்த இராணுவத்தினர், ஊரிக்காட்டுப் பகுதிக்கு மாற்றமாகிவருவதையொட்டி, இப் பகுதிகளின் ஒரு பகுதியான ரேவடி கடற்கரைப் பகுதியில், இலங்கை சுங்க அதிகாரிகள் அண்மையில் அறிவிப்புப் பலகைகளை நாட்டியுள்ளனர்.
'இவ் ஆதனம் இலங்கை சுங்கத்துக்குரியது' எனப் பெயரிடப்பட்டு, சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் சுங்க அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் இரு அறிவிப்புப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. மேலும் குறித்த பகுதிகளைச் சுற்றி தடுப்புக்களும் போடப்பட்டுள்ளன.
இதே போன்ற அறிவிப்புப் பலகைகள் பருத்தித்துறையிலும், முன்னர் சுங்க அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
விளையாட்டுத் திடல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சுங்க இலாகாவிற்குரிய ரேவடி பகுதி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.