மைதானம் தொடர்பாக வல்வையில் மோதல் - பலர் கைது, சிலர் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2018 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் இன்று மைதானம் ஒன்று தொடர்பாக இரு விளையாட்டுக் கழகங்கள் சார்ந்தவர்கள் இடையே இடம்பெற்ற மோதல் ஒன்றையடுத்து, பத்து பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் மே மாதம் 27 ஆம் திகதி திறக்கப்பட்ட மைதானம் தொடர்பாக இன்று காலை இரு சாராருக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து காயமடைந்த சிலர் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையிலும், ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மேலதிய போலீசார் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேரை மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சர்ச்சைக்குரிய மைதானம் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தையொட்டி அமைந்துள்ளதுடன், மைதானத்தின் ஒரு பகுதியினை அண்மையில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினர் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
90 களில் வல்வை விளையாட்டுக் கழகத்தின் கீழ் ஒரே விளையாட்டுக் கழகமாக இணைந்திருந்த நெடியகாடு விளையாட்டுக் கழகம் மற்றும் இளங்கதிர் விளையாட்டுக் கழகம் ஆகியவை, பின்னர் பிரிந்து தற்பொழுது இளங்கதிர் விளையாட்டுக்கழகம் ஆனது வல்வை விளையாட்டுக் கழகத்தின் கீழும், நெடியகாடு விளையாட்டுக் கழகம் தனியாக பருத்தித்துறை லீக்கின் கீழும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: June 10, 2018 at 18:14
மிகவும் கவலை தருகின்ற செய்தி தயவு செய்து என்ன பிரச்சனைஎன்றாலும் பேசி தீர்த்துகொள்ளுங்கள் எமக்குள் நாம் சண்டைபிடிப்பது எமக்கோ எமது எதிர்காலத்துக்கோ நல்லதல்ல ஒற்றுமையாக இருப்பதே அனைவருக்கும் பலம் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.