வடக்கு கிழக்கு இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இன்று கோலாகல ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2018 (புதன்கிழமை)
இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இன்று கோலாகல ஆரம்பம்..
ரியூப்தமிழ் ஊடக அனுசரணையுடன் ஆட்டம் ஆரம்பம்..
உலக நாடுகளில் இன்று அதி கூடிய வருமானம் தரும் ஆட்டங்களில் ஒன்றாக உதைபந்தாட��டம் இருக்கிறது. பிறிமியல் லீக் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆட்டங்களே இன்றைய சமுதாயத்தின் கவனத்தை குத்தி இழுக்கும் குதூகல ஆட்டங்களாகும்.
அந்தவகையில் இலங்கையில் தமிழ் மக்களிடையே ஒரு பிறிமியர் லீக் ஆட்டத்தை கொண்டுவர முடியுமா என்பது நீண்ட காலமாகவே ஒரு கேள்விக்குறியாக இருந்தது.
இன்று அந்தக் கனவு மெய்ப்பட்டுள்ளது. இன்று மாலை கொட்டுகிறது முரசு..! தட்டுகிறது வானம்..! சிட்டுக் குருவி போல விட்டு விடுதலை பெற்று நிற்கிறது ஈழம்..! அதோ யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் முதலாவது பிறிமியர் லீக் ஆட்டம் கோலாகலமாக ஆரம்பமாகிறது.
யாழ்ப்பாணத்திற்கு புகையிரதம் வந்த முதல் நாள்..!
யாழ்ப்பாணத்திற்கு அச்சியந்திரம் வந்த முதல் நாள்..!
போல..
யாழ்ப்பாணத்திற்கு பிறிமியர் லீக் வந்த முதல் நாள் என்று வரலாறு இன்றைய நாளை பதியம் போடுகிறது.
இதுவரை காலமும் தேடிச் சோறு நிதம் தின்று.. பல சின்னஞ்சிறு கதைகள் பேசி.. மனம் வாடி துன்பமிக உழன்று வேடிக்கை மனிதராக வாழ்ந்த வாழ்வு இன்றோடு தொலைகிறது.
விளையாட்டு சோறு போடுமா என்றும்..
கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்க்க வேண்டும் என்றும்..
பிலாக்கண ஓசை எழுப்பி வந்த இலங்கை தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கை வரட்சி எண்ணங்களை உடைத்து புதிதாக மலர்கிறது பிறிமியர் லீக் உதைபந்தாட்டம்.
உதைபந்தாட்டம் சோறு போடுகிறது.. என்று உதைத்திடுவாய் பந்தை..! பந்தின் மீது விழும் ஒவ்வொரு உதையும் நமது நம்பிக்கை வரட்சிக் குரலுடையோர் குரல் வளைகளில் விழும் உதைகளன்றோ..?
இந்தப் போட்டிகளின் சிறப்பம்சம் விளையாடும் ஆட்டக்காரர் அனைவரும் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டும் வீரர்களாகவும் மாறியுள்ளமையே..
வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய சுமார் எட்டு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க ஓர் அணி செலுத்த வேண்டிய கட்டுப்பணம் மட்டும் ஆறு இலட்சம் ரூபா ஆகும்.
ஆட்டத்திற்கு பரிசாக ஒரு கோடி இலங்கை ரூபாய்கள் வழங்கப்படுகின்றன. முதல் பரிசு 50 இலட்சம் 2ம் பரிசு 30 இலட்சம் 3ம் பரிசு 15 இலட்சம் நான்காம் பரிசு 5 இலட்சமாகும்.
பங்குபற்றும் அணிகள் :
01. கிளிய10ர் கிங்ஸ் 02. கிங்ஸ் இலவண் மன்னார் 03. மன்னார் எப்.சி 04. மட்டுநகர் சூப்பர் கிங்ஸ் 05. முல்லை பீனிக்ஸ் 06. நொதர்ண் அலைட் 07. தமிழ் யுனைட்டட் 08. டில்கோ கொன்கரர் 09. ட்ரின்கோ டைட்டன்ஸ் 10. வல்வை எப்.சி 11. வவுனியா வொரியர்ஸ் 12. அம்பாறை
ஆகிய 12 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியிலும் கண்டிப்பாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்களும் வடக்கு கிழக்கை சேர்ந்த ஐவரும், பிறமாவட்டங்களை சேர்ந்த இருவரும் இடம் பெறலாம். மற்றையவர்கள் புலம் பெயர் நாடுகள் உட்பட இலங்கையின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
இந்த ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன.. ஒவ்வொரு அணிகளும் பெரும் பொருட் செலவில் தம்மை தயார்படுத்தி வெற்றிக்கிண்ணத்தை பெற போராட்டத்தை ஆரம்பித்துவிட்டன.
பறக்குது பார் யாழ். ஸ்ரேடியத்தில் எம் புகழ் கொடி..
கிழக்கினிலும் வடக்கினிலும் பறக்கும் புகழ் கொடி..
இந்த ஆட்ட ஆரம்பத்தின் வரலாறு என்ன..
வரலாறுகளை எழுதுவோர் மோசடி செய்து இதை தமது வரலாறாக எழுதக்கூடாதல்லவா..?
2016ம் ஆண்டு ரியூப்தமிழும் அக்னிச்சிறகுகள் அமைப்பும் இணைந்து ரியூப்தமிழ் ஆதரவில் வடக்கு கிழக்கை இணைக்கும் உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்தியதும், அதை வெற்றிகரமாக நடத்த டென்மார்க் வாழ் ரியூப் தமிழ் அதிபர், தாபகர் ரவிசங்கர் சுகதேவன் பணப்பரிசுகளை அள்ளி வழங்கியதும் ஓர் ஆரம்ப நிகழ்வாகும்.
இதுவே பிறிமியர் லீக் உருவாக்க கற்பனை பிறந்த புள்ளி..!!
அதைத் தொடர்ந்து பிறிமியர் லீக் ஆட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று இலங்கையில் ரியூப்தமிழ் நிறுவனத்தை நிறுவிய பின்னர் டென்மார்க்கில் இருந்து ரவிசங்கரால் வழங்கப்பட்ட வழி காட்டல்களே உருவெடுத்து, இன்று ஆல் போல தழைத்து நிற்கிறன்றன.
டென்மார்க்கில் உருவான இந்தக் கற்பனை மெல்ல மெல்ல புது வடிவம் பெற்று, அங்குள்ள உதைபந்தாட்ட ஆர்வலர்களை இணைத்து இன்று என்.ஈ.பீ.எல் என்ற அமைப்பாக புதிய நிர்வாகத்துடன், புதிய பரிமாணத்துடன் எழுந்து நிற்கிறது.
இந்தப் புகழ் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் சொந்தம்.. பாராட்டுகிறோம்..!!
நல்லதொரு தொடக்கம்.. நல்லவைகளை பிறப்பித்துள்ளது..!
இன்று இந்த விளையாட்டு போட்டிகளில் மேலும் பல நிறுவனங்கள் இணைந்து பங்கேற்று இந்த அழகிய எழுச்சி மிக்க புதிய வரலாற்றை எழுதிச் செல்கின்றன.
அனைவரும் தத்தமது சின்னங்களை இணைத்து ஆனந்தக் கூத்தாடுவதையும், வாகனங்களில் கும்மாளமிட்டுப் போவதையும் யாழ். வீதிகளில் காண முடிகிறது.
இந்த அமைப்பில் நிர்வாகத்தில் இன்று ஐந்து பேர் கொண்ட குழுவினர் இருக்கிறார்கள், இது காலத்தின் தேவை கருதி தொடர்ந்து மேன்மை பெற்று வருகிறது.
இதை ஆரம்பித்தபோது பல நோக்கங்கள் வெளி வந்தன..
01. அரசியலால் இணைக்க முடியாத வடக்கையும் கிழக்கையும் உதைபந்தாட்டம் இணைத்து புது வரலாறு எழுதுகிறது.
02. போரினால் பாதிக்கப்பட்ட சமுதாயம் புத்தெழுச்சி பெறவும், இளைஞர்களிடையே தாமும் விளையாட்டு நட்சத்திரங்களாக வரும் கனவுகள் மலரவும் இது துணையாக அமைகிறது.
03. கடந்த பல நூற்றாண்டுகளாக வருமானம் இல்லாமல் கிடந்த இலங்கை விளையாட்டுக்கள் இனி மேலை நாடுகளைப் போல வருமானம் பெறும் காலத்திற்குள் நுழைகின்றன.
04. ஆர்ஜண்டீனா மெர்ஸி, போத்துக்கல் றொனால்டோ, பிறேசில் நெய்மார் போல புகழ்மிக்க வீரர்களாக ஏன் நாம் வரமுடியாது.. முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பது இதன் நோக்கமாகும்.
05. ஒரு காலத்தில் கல்வி, விளையாட்டு, கலைகளில் முன்னணி வகித்த இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் போருக்கு பின்னர் அனைத்திலும் வீழ்ச்சி கண்டன.
ஒரு நாடு போரில் சிக்குப்பட்டால் அதை மீட்க இரண்டாவது உலக யுத்தத்தில் அமெரிக்கா வழங்கியது போன்ற உதவியை இலங்கை தமிழர்களுக்கு ஐ.நா உட்பட உலக நாடுகள் எதுவும் உருப்படியாக வழங்கவில்லை.
இந்த நிலையில் புலம் பெயர் தமிழ் மக்களே இந்த மீட்சிக்காக போராட வேண்டும் என்ற ஒரே நோக்கில் களமிறங்கிய ரியூப்தமிழ் பல சவால்களை சந்தித்தது, இன்றும் தொடர்கிறது.
வல்வை எப்.சி ரியூப்தமிழின் விளையாட்டு அணியாக இருக்கிறது, அந்தவகையில் வல்வைக்கு பெருமையாகும்.
ஆயினும் நம்பிக்கை இழக்கவில்லை இப்போதும்..
இதில் பங்கேற்ற அனைத்து ஊடகங்களும், நிறுவனங்களும், நிர்வாகத்தினரும் பாராட்டுக்குரியவர்களே..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.