வல்வையின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் பொன்னுத்துரை ரவீன்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வையின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் பொன்னுத்துரை ரவீன்குமார்
பிறப்பு: 1 -07 -1958 மறைவு: 15 -02 -2017
திரு.ரவீன்குமார், திரு.பொன்னுத்துரை, லெட்சுமிஅம்மா ஆகியோரின் மூன்றாவது புதல்வர். இவருடைய தந்தையார் பொன்னுத்துரை வல்வை அம்மன் கோயில் பஜனைக் குழுவில் இருந்து பணியாற்றியவர்.
தம்பி ரவீன்குமார் ஊர்ப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்டவர். வல்வை நலன்புரிச் சங்கத்திலும் வல்வை ஆவணக்காப்பகம், ரொராண்டோ புளுஸ் ஆற்றும் பணிகளிலும் பங்கெடுப்பவர். இன்றும் ஒழுங்காகப் பத்திரிகைகள் படித்து தமிழ் அரசியலிலும் அக்கறை உள்ளவர்.
2004ல் நடந்த வல்வை சிவன் கோயில் புனருத்தான பணிக்கு முன்நின்று நிதி சேகரித்து அனுப்பியவர்களில் இவரும் ஒருவர். அத்தோடு திருவாதிரை, ஆனிஉத்தரம் ஆகிய நாட்களில் நடராஜர் திருநடனமாடும் செப்புத் தகட்டினாலான புதிய இரத்தினபீடத்தை பெரும் பொருட்செல வில் அமைத்துக் கொடுத்த சிவன் தொண்டன். எமது ஊரில் பழமைவாய்ந்த முருகையன் கோயிலில் திருவிழா நடத்தியும், அதன் பணிகளிலும் உதவியவர்.
படம் - செப்புத்தகட்டினாலான இரத்தினபீடம்
படம் - வல்வையில் ஆவணக்காப்பக ஒன்றுகூடலில் கலந்துகொண்டபோது.
மண்ணில் நடமாடி வாழும் மனிதர்களின் உடலில் இருந்து ஆன்மா பிரிந்தபின்பு இறைவனிடம் கலந்து விடுவதே சைவசமயத்தின் முடிவாகும். அந்தியேட்டிவரை செய்கின்ற கிரியைகளை உடலைத் தொடர்புபடுத்தி செய்யப்படுபவை.
திரு.ரவீன்குமார் தனது தந்தையின் வழியில் கனடா ரொராண்டோவில் ஆலயம்களில் தேவாரம் பாடியும், அமரக்கிரியைகளின்போது தனது கணீர் என்ற குரலில் தேவாரம், புராணம், பட்டினத்தார் பாடல்கள் பாடி அந்த ஆத்மா இறையடி சென்றடைய வழியனுப்பி வைக்கும் பண்பாளர்.
சென்ற தடவை அம்மன் திருவிழாவிற்கு வந்தபோது எமது ஆவணக்காப்பகத்தின் ஒன்றுகூடல் நிகழ்விலும் கலந்துகொண்டவர். இந்தவருடமும் சிவன் அம்மன் திருவிழாவிற்கு செல்ல ஆயத்தமாக இருந்தவேளையில் எம்மை விட்டு நீங்கிவிட்டார்.
அவரின் ஆத்மா சாந்தி அடைய வல்வை வைத்தீஸ்வரன், முத்துமாரி நெடியகாடு பிள்ளையார் துணை வேண்டுவதோடு அவரின் குடும்பத்தினர் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.