தொண்டமானாற்றில் சுகாதார பரிசோதகர்போல் நாடகமாடி பெண் செய்த கொள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2021 (புதன்கிழமை)
தொண்டமனாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சுகாதார பரிசோதகர்போல் நாடகமாடி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற பெண் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் தொண்டமனாறு அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தொண்டமனாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த குறித்த பெண் தன்னை பொது சுகாதார பரிசோதகர் என கூறி தாம் வெள்ள பாதிப்பு குறித்து ஆராய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கறுப்பு நிறத்திலான கோட் அணிந்திருந்த குறித்த பெண் வெள்ளத்தை புகைப்படம் எடுத்ததுடன் ஆடை மாற்றுவதற்கு தனக்கு ஒரு அறை தருமாறு கேட்டதையடுத்து ஆடை மாற்றுவதற்கான அறையை வீட்டிலிருந்த காட்டிய நிலையில், அறையில் இருந்த 5 பவுண் தாலிக்கொடி, சங்கிலி மற்றம் மோதிரங்களை கொள்ளையடித்த பெண் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் சந்தேகமடைந்து அறைக்குள் நுழைந்து பார்த்தபோது அங்கிருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வீட்டிலிருந்தவர்கள் அயலவர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து பொதுமக்கள் இணைந்து கொள்ளையடித்த பெண்ணை தேடியபோது ஆண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பலாலி பகுதியில் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டனர்.
அத்துடன் நகைகள் கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.
இதன்போது பெண்ணின் கைப்பையில் இருந்து பெருமளவு நகைகளும் தொலைநோக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, அந்தப் பெண் வேறும் சில வீடுகளுக்குச் சென்று தன்னை கிராம அலுவலர் எனக் கூறியதாக ஊரவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.