மனப்பட மனிதர்கள் : பரிசிற்காக மரதன் ஓடாத வீரர் பற்குணி . பாகம் 12
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)
(இதுவரை கட்டுரை ஆசிரியரினால் எழுதப்பட்ட மனப்பட மனிதர்களுக்கு மாறாக, குறித்த இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளவர் - இன்றும் வல்வையில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்துவரும் ஒருவர், 50 வயதைத் தாண்டிய நிலையிலும் மரதன் ஓடி முடித்தைமைக்காக 1990 ஆம் ஆண்டளவில் கெளரவிக்கப்பட்டவர்)
கடந்த நூற்றாண்டு காலமாக நூற்றுக்கணக்கான வல்வை மக்களைப்பற்றி எழுதிவிட்டேன்.. ஆனால் மற்றவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு " இவரையும் எழுதுங்கள்" என்று என்னிடம் கேட்கப்பட்ட ஒரேயொரு நபர் பற்குணிதான்.
ஏன்.. ஆழமாக யோசித்தேன்.. இவரைப்பற்றி ஐம்பது வருடங்களாக யோசித்து வருகிறேன்.. இவரின் பரிமாணங்களை எப்படி எடுத்துரைப்பதென்பது மனப்போராட்டமாகவே இருந்தது.
"அவரை விளங்கும் வயது வல்வைக்கு வரவேண்டுமே " என்பதுதான் தயக்கத்தின் காரணம்.. இவரைப் போன்ற ஒருவர் ஐரோப்பாவில் இருந்தால் அவர் வாழும் நகரம் அவருக்கு ஓடியோடி ஏவல் செய்திருக்கும்.
உலகளாவிய ரீதியில் இத்தகைய மக்களை பெருமைப்படுத்துவதில் நகரசபைகளே முக்கிய பங்காற்றுகின்றன.. இது நகரசபைகளின் கடமை.. வல்வை நகரசபை இனியாவது செய்ய வேண்டும்.
1985 புலம் பெயர்ந்து டென்மார்க் வந்தபின் 2005ம் ஆண்டு யூலை மாதம் மறுபடியும் வல்வை வரும் சந்தர்ப்பம் கிடைத்தது..
கொழும்பில் இருந்து குடும்பத்தினருடன் வந்த என்னுடைய வாடகை வான் நெடியகாட்டில் நின்றது..
" யாரைத்தேடுகிறீர்கள்.." ஒருவர் கேட்டார்..
"பற்குணி, காட்டுவளவு பூட்டோ.. சிவகெங்கை மாமா இவர்களை சந்திக்க முடியுமா..?"
" இந்த ஊரில் முதலாவது மரியாதை கொடுத்து சந்திக்க வேண்டியவர்கள் இவர்களா.. ? "ஆச்சரியத்துடன் பார்த்தார் நண்பர். காலஞ்சென்ற நவரத்தினம்.
வந்த களைப்பு மாறாமல் காட்டுவளவால் இறங்கி, கடற்கரை ஓரமாக நடந்து சுற்றி வந்து கடைசி "சீனா கூனா" வீட்டில் பூட்டோவை முதலில் பிடித்தேன்.. அவனுடைய சுகத்தை விசாரித்து, பணத்தைக் கொடுத்தேன்.
சிரித்தான்.. பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது மரணத்திற்கு பயப்படாது நின்ற அந்த வீரனின் பெயரை இவனுக்கு சூட்டியிருந்தார் அவர் தந்தை அப்பாச்சாமி.
அவனும் அந்தப் போருக்குள் வாழ்ந்தான்.. எல்லோருமே கைவிட்டு ஓடிய பின்னர்.. எனது தந்தையை குளிப்பாட்டி, உணவு கொடுத்து காப்பாற்றியது பூட்டோதான் என்று கேள்விப்பட்டேன்.. " நீதான் நான் கண்ட மனிதன்.." விடைபெற்றேன்.. பூட்டோவுக்கு என் மன உணர்வு தெரிந்தது..
அடுத்து நெடியகாடு கணபதி படிப்பகத்தின் முன்னால் பற்குணியை பிடித்தேன்..
இரண்டு கைகளில் தண்ணீர் வாளி இரைக்க இரைக்க வந்து கொண்டிருந்தார், தண்ணீர் அள்ளிக் கொடுத்து சீவியம் ஓடுகிறது..
ஓரளவு கட்டையான தேகம்.. கட்டமைவான உடல், பற்கள் போன வாய், பனங்கொட்டை சூப்பியது போன்ற கேசம், அழுக்கு வேஷ்டி, வெறும் மேல்.. சிரித்த முகம் அன்று பார்த்த அதே தோற்றம்.
"இப்போது மரதன் ஓடுவதில்லையா..?"
"நான் ரெடி.. போட்டிகள்தான் நடப்பதில்லை.." என்றார், ஆமாம் பற்குணியிடம் இப்போது போட்டிகளே தோற்றுப்போயிருந்தன..
எனது பிள்ளைகளுக்கு அவரை அறிமுகம் செய்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன்..
பற்குணி எனது உறவினரா.. இல்லை.. அவருடைய உண்மைப் பெயர் என்ன.. அது கூட எனக்குத் தெரியாது.. ஆனால் அந்த மனிதர் கடந்த அரை நூற்றாண்டுகளாக என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
காரணம் என்ன.. எங்கு மரதன் ஓட்டப்போட்டி நடந்தாலும் போட்டி முடிந்து வெகு நேரத்திற்குப் பின்னர் நாக்கு வெளியில் தள்ள கடைசியாக அரைக்காற்சட்டையுடன் ஒருவர் ஓடி வந்து கொண்டிருப்பார் அவர்தான் பற்குணி.
எல்லோரும் அவரைப் பார்த்துச் சிரிப்பார்கள்.. சிலர் பெருமையாக சொல்வார்கள்.. " நாம் நடு வழியில் நின்றுவிட்டோம் ஆனால் அந்த ஆள் எப்பவுமே கடைசி என்றாலும் ஓடி முடிக்குது பாருங்கோ.." அதுதான் வெற்றி..
தன்னோடு போட்டி போடும் அனைவரும் இளைஞர்கள், அவர்களோடு போட்டியிட்டால் கண்டிப்பாக தனக்கு தோல்வியே மிஞ்சும் என்பது அவருக்குத் தெரியும்.. ஆனால் அங்கும் வெற்றிக்கான ஓர் ஓட்டை இருக்கிறது என்பது பற்குணிக்கு மட்டுமே தெரியும் அது இளைஞர்களுக்கு தெரியாது.
போட்டியில் ஈடுபடும் எல்லோருமே தங்கப்பதக்கம் பெற முடியாது, ஒலிம்பிக் மரதனில் பல இலட்சம் பேர் சம்மந்தப்பட்டு கடைசியில் ஒருவருக்கு மட்டுமே தங்கப்பதக்கம் கிடைக்கிறது, மற்றவர்கள் அனைவரும் தோல்வியடைகிறார்கள்.. ஆனால் இன்றுவரை ஒலிம்பிக் நடக்கிறதே ஏன்..?
வெற்றி தோல்வியல்ல போட்டியின் இலக்கு, போட்டிக்கான விதிகளை மதித்து, அதை முழுமையாக நிறைவேற்றுவதே விளையாட்டு.
விளையாட்டுக்கு இரண்டு பரிசுகள் உண்டு ஒன்று வெற்றிக்கான பரிசு இன்னொன்று தோல்விக்கான பரிசு..
வெற்றி பெற்றவனுக்கு அடுத்து காத்திருப்பது தோல்வி என்ற பரிசு ஆனால் தோற்றவனுக்கோ என்றும் முன்னால் இருப்பது வெற்றிதான்.. கைக்கு கிடைத்ததும் கனியின் சுவை போய்விடும் கிடைக்காதவரை அதன் சுவை ஆயிரம் மடங்கு, அதனால்தான் வெற்றியை கனி என்கிறார்கள்.
வெற்றிக்கனியை கற்பனையில் சுவைத்தபடி இருப்பதால் இன்றும் அவர் ஓடுகிறார், அவரால் ஓட முடிகிறது.
ஓடி வெல்வது போட்டியாளனுக்கு வெற்றி..!
ஓடி முடிப்பதோ போட்டிக்கே வெற்றி..!!
இதில் யார் பெரியவன்.. ஓடி முடிப்பவன்தான்.. !!
கடைசியாக வர ஒருவன் இல்லாவிட்டால் போட்டியாளருக்கு வெற்றி இல்லை..!!
அக்காலத்தே நண்பர்கள் சிலர் போட்டிக்கு வருவார்கள், எப்படியும் கடைசிக்கு முதலாவதாக வந்துவிடலாம் என்பார்கள்.. காரணம் வயதான பற்குணி கடைசியாக வருவார் அவரையாவது முந்திவிடலாமென்ற நம்பிக்கையில் களமிறங்குவார்கள்.
வெல்வதற்கு ஆயிரம் பேர்..
தோற்பதற்கு யாருமில்லா வெளியில் - ஒருவன்
அவன்தான் நமது பற்குணி... கவிதை எழுதுகிறது மனது..
பற்குணி ஓடுவதாலேயே நம்பிக்கையுடன் மைதானத்தில் இறங்கிய இளைஞர்கள் பலர்..
அக்காலத்தே ஓட்டப்போட்டிகளை பார்க்கும் போது நாமெல்லாம் பற்குணிக்கே ரசிகர்கள், அவர் நாக்கை வெளியே தள்ளியபடி கடைசியாக வருவதைப் பார்த்து ரசிப்பது அக்காலத்து சிறுவர்களுக்கு ஒரு சுவையான பொழுது போக்கு.
வல்வையில் நடைபெற்ற எத்தனையோ மரதன் ஓட்டப் போட்டிகளை, ஒரு மைல் ஓட்டப் போட்டிகளை எல்லாம் பார்த்துள்ளேன், அவற்றில் வெற்றி பெற்ற ஒருவருடைய பெயர் கூட எனக்கு நினைவில் இல்லை, மரதன் ஓட்டமென்றால் இன்றும் மனதில் நிற்பது கடைசியாக வரும் பற்குணி ஒருவர் மட்டும்தான்.
"வெற்றி தோல்வியல்ல ஓடி முடிக்க வேண்டும் அதுதான் வெற்றி.." என்று தேமானந்தம் அப்பா அடிக்கடி சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன்.
மரதன் தரும் கால் வலி தெரியாமல் எனது சிறு வயதில் உதயசூரியன் மரதன் ஓட்டப்போட்டியில் ஓட களம் இறங்கி ஓட ஆரம்பித்தேன், நெடியகாட்டில் ஆரம்பித்தது, தொண்டைமானாற்றில் போதுமடா சாமியென பலர் லாரிகளில் ஏறிவிட்டார்கள் பாவம் அவர்களால் ஓட முடியவில்லை..
என்னையும் லாரியில் ஏறும்படி அழைத்தார்கள், முடியாது என்றுவிட்டேன் தொடர்ந்து ஓடி சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக அதை ஓடி முடித்தேன்..கடைசியாக வந்தேன்.
எனக்கு எந்தப்பரிசும் கிடைக்கவில்லை.. ஆனால் ஒரு பரிசு கிடைத்தது.. எந்தக்காரியத்தில் இறங்கினாலும் அதை நடுவழியில் விட்டுவிட்டு ஓடக்கூடாது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற பழக்கம் என்னுள் ஏற்பட்டது.
இந்தக் கல்வியைத் தந்தவர் நமது பற்குணிதான்..
மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் பணியாற்றும் நகரத்தில் உள்ள டேனிஸ் நகரசபை வெற்றிச் சிந்தனை உள்ள, எடுத்த காரியத்தை நடுவழியில் விட்டுவிட்டு ஓடாத தன்னம்பிக்கையாளர் எட்டுப்பேரை தேர்வு செய்து பரிசளித்தது.
எனக்கு முதலிடம் கிடைத்தது எனக்குப் பின் வந்த ஏழு பேரும் டேனிஸ் மக்கள்.. பரிசுப்பணத்தை வாங்கியபோது பற்குணி ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது, இதுதான் பற்குணியுடைய சிறப்பு, உதயசூரியன் மரதன் ஓட்டப்போட்டியில் ஓடிய போது அன்று எனக்குக் கிடைக்காத பரிசு... ஐம்பது வருடங்கள் கழித்து கிடைத்தது..
அன்றைய தோல்வியை வெற்றியாக்க ஐம்பது ஆண்டுகள் ஓடவேண்டியிருந்தது..
இப்போதும் என்னுடன் பணியாற்றும் டேனிஸ் மக்கள் தளம்பலற்ற உறுதியாளன் என்று என்னை பாராட்டி என்னுடன் பணியாற்ற விரும்புகிறார்கள்.. உலகம் வெற்றியாளனை விரும்புவதை விட தன்னம்பிக்கையாளனையே விரும்பும் என்பதை நாம் கற்றுக்கொள்ள பற்குணி பாடப்புத்தகமானார்.
"வெளிநாடு போனால்தான் சீவிக்கலாம், கப்பலில் போனால்தான் வாழலாம், கோழி மேய்த்தாலும் கோறண மேந்தில் மேய்.." என்று நம்மவர்கள் சொன்னார்கள்..
"தண்ணி அள்ளியும் சீவிக்கலாம் " என்று எவரும் சொல்லவில்லை அதை வாழ்ந்து காட்டினார் பற்குணி.. இது மாபெரும் வாழ்க்கை துறவறமல்லவா..?
ஆசையினால் உலகை அழிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய வாழ்க்கைப் பாடம் பற்குணி..
மேலும் சிறிது விரிவாக சர்வதேச மட்டத்தில் பற்குணியை பொருத்திப் பார்த்தேன்.. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமக்கிரட் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் கிளரி கிளிண்டன் தன்னுடன் போட்டியிட்ட பேர்ணி சாண்ட்ராசை வென்று தனக்குரிய 2383 டெலிகேய்ட்ஸ் வாக்குகளையும் பெற்றுவிட்டார், மேற்கொண்டு போட்டி அவசியமில்லை.. ஆனால் பேர்ணி சாண்ட்ராஸ் போட்டியில் இருந்து விலக மறுத்துவிட்டார்.
காரணம் எல்லா மாநிலங்களிலும் வாக்களிப்பு நடக்க வேண்டும், வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல, போட்டியின் இறுதிவரை நான் பங்கேற்க வேண்டும், போட்டியில் இருந்து விலகி வெற்றியை தாரை வார்த்தார் என்ற அவப்பெயரால் தனது வாழ்வையும் வரலாற்றையும் அசிங்கப்படுத்தக் கூடாது என்றார் சாண்ட்ராஸ்.
தோல்வி என்பதை 100 : 100 வீதம் தெரிந்த பின்னரும் தொடர்ந்து ஓடும் பேர்ணி சாண்டாராசிற்கு 77 வயது ஆனால் தோல்விக்குப் பின் அவர் எடுத்த முடிவில்தான் உலகம் அவரை திரும்பிப் பார்த்தது.
மறுபுறம் றிப்பப்ளிக்கன் கட்சியில் டொனால்ட் ரம்புடன் போட்டியிட்ட அனைவரும் வெற்றி வாய்ப்பு இல்லாத காரணத்தால் விலகிவிட்டார்கள், ரம்ப் தனி நபராக போட்டியிடுகிறார்.
அனைத்து தோல்வியாளரிலும் வென்றவர்.. தொடர்ந்து ஓடும் பேர்ணி சாண்ட்ராஸ் ஒருவர் மட்டும்தான்.
போட்டியில் இருந்து விலகிய அனைவரும் வாழ்வில் தோற்றுவிட்டார்கள், ஆனால் தோற்றாலும் முழுமையாக ஆடி முடிக்க களத்தில் நிற்கும் பேர்ணி சாண்ட்ராஸ் முழுமை மனிதராக, மரியாதைக்குரிய மனிதராக வெற்றி பெற்றிருக்கிறார்.
வெள்ளை வெளேர் என்ற பிடரி மயிர் சிலிர்க்க 77 வயதிலும் தளராமல் நிற்கும் அந்த அமெரிக்க சிங்கத்தைப் பார்க்கும்போது நமது நெடியகாட்டு வீதியில் தண்ணிவாளி சுமந்து செல்லும் பற்குணியே நினைவுக்குள் வருகிறார், வேறு இன்னொருவரை அந்த இடத்தில் வைத்து கற்பனை பண்ண முடியவில்லை..
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி..!
இவரைப்போல அக்காலத்தே சூத்திரக்கிணற்றடிக்கு அருகாமையில் வாழ்ந்த நந்தகுமார் என்பவர் பருத்தித்துறையில் வேலை செய்தார், டீ.டீ.ரி அடிப்பது தொழில் , அவர் வல்வையில் இருந்து மரதன் ஓட்டம் போல பருத்தித்துறைக்கு காலையும் மாலையும் கால் ஓட்டமாக ஓடியே வேலைக்கு சென்று வந்தார்.
சிறு பராயத்தில் நானும் எனது பாடசாலைத்தோழன் குச்சம் பாலசிகாமணியும் சிதம்பராவில் இருந்து மத்தியானம் சாப்பாட்டுக்கு ஓடி வந்து, பின் ஓடிச்சென்று, மறுபடியும் பாடசாலை முடிய மாலை வேகமாக ஓடி முதலாவதாக வீடு வந்து சேருவோம்..
யார் முதலாவதாக ஓடிப்போவது.. இதுவே போட்டி.. சிதம்பராவில் இருந்து நெடியகாட்டுக்கு கால் ஓட்டமாக மத்தியான சாப்பாட்டுக்கு ஓடி வந்து, ஒரு மணி நேரத்தில் சைலன்ஸ் பெல் அடிக்க முந்தி ஓடிப்போக இன்று வல்வையில் ஓர் இளைஞன் இருக்கிறானா..?
நெடியகாட்டில் இருந்து சிதம்பராவரை தினசரி மூன்று தடவைகள் ஓட்டம் ஒரு தடவை நடை..
இன்று வரை நான் தாக்குப்பிடிக்க அந்த ஓட்டமே எனக்கு உதவியாக அமைந்தது, நாம் நடக்கும் நடையும், ஓடும் ஓட்டமும் என்றோ ஒரு நாள் எமக்கு ஒரு நாள் உயர்ந்த பரிசைத் தரும்.
பற்குணியோடு ஓடி நடு வழியில் நிறுத்தியவர்கள் எல்லாம் இன்று எங்கே.. அநேகருடைய வாழ்வு நடு வழியில் நின்றுபோன மரதனாகிவிட்டது..
ஆனால் பற்குணி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. இதுவே அவரது ஓட்டம் கொடுத்த மகத்தான பரிசு..
வாழ்க்கை ஒரு மரதனோட்டம் அதை இறுதிவரை ஓடி முடிப்பவனே.. அந்தப் பந்தயத்தின் வெற்றியாளன்.
முடியும் வரை ஓடி முடிக்க வேண்டும் என்ற உணர்வு ஒரு சர்வ வல்லமை படைத்த நோய் நிவாரணி என்கிறார்கள் மேலை நாடுகளில்..
வாழ்க்கைப் பந்தயத்தில் முதலில் ஓடி முடிப்பவன் அல்ல வெற்றியாளன் இறைவன் கொடுத்த உடலின் இயக்கம் முழுமையாக நிற்கும்வரை இறைவன் படைத்த பூமியை வளப்படுத்த ஓடுபவனே படைப்பின் திருச்சபையில் வெற்றியாளன்.
அதுவே உலகின் மிகவும் கடினமான போட்டி..
அந்த வெற்றிக் கேடயத்தை பற்குணிக்கு வழங்கியது எது..?
ஓடி முடிக்க வேண்டும் என்ற அவருடைய கொள்கையே அதை அவருக்கு வழங்கியுள்ளது.
இப்படியொரு ஆக்கத்தை ஐரோப்பாவில் இருந்து அவருக்காக எழுதத் தூண்டியதும் அதுதான்..
நீச்சல் நடு வழியில் முடிந்தால் மரணம்..!
அது கரையை தொட்டாலே உயிர் காக்கும் போட்டியில் வெற்றி..!
வாழ்க்கை ஒரு சமுத்திரம்.. அதில் நாமெல்லாம் நீச்சல்காரர்..!
இது புரிந்தால்.. இறுதிவரை நீந்தி கரையை தொட வேண்டும் என்ற கொள்கை மலரும்.. வாழ்வை அழிக்கும் தீய பழக்கங்கள் மறையும் அதுவே வாழ்வை செம்மைப்படுத்த வழி காட்டும்.
"துணிந்து நில்
தொடர்ந்து செல்
தோல்வி கிடையாது தம்பி
உள்ளதைச் சொல்
நல்லதைச் செய்
இறைவன் இருப்பதை நம்பி..! "
பாடலைக் கேளுங்கள் அதன் வரிகளுக்குள் நம் பற்குணி தெரிவார்..
நண்பர்களே எனக்காக பற்குணி அவர்களுக்கு இதை யாராவது வாசித்துக் காட்டுங்கள்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.