யாழ்ப்பாணம் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்டுள்ள சிவபூமி அரும்பொருட் காட்சியகம் தமிழுக்குரிய தனி வீரத்தோடு மிளிருவதோடு தமிழர் பண்பாட்டை மேலும் தலை நிமிரச் செய்துள்ளது .
இந்த சிவபூமி அரும்பொருட் காட்சியகம் நேற்று சனிக்கிழமை( 25.01.2020) அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள்சாதனையாளர் "சிவநெறிச்செம்மல்" "அறப்பணிச் செல்வர்" "இந்துநெறிச்சக்கரவர்த்தி" செஞ்சொற்செல்வர் கலாநிதி கௌரவ ஆறுதிருமுருகன் அவர்களது பெரும் முயற்சியால் இந்த அரும்பொருட் காட்சியகம் சிறப்பாக அமையப்பெற்றுள்ளது.
சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் இருவரின் உருவச் சிலைகளும் முற்றத்தில் யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வண்டிகள் கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உள்பட முன்னோர்கள் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 மோட்டார்க் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
முதலாவது தளத்தில்- தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பித்தளைப் பாத்திரங்கள், பழமைவாய்ந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, அருவிவெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உள்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்கள் என இவை எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாவது தளத்தில் ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், பாடசாலைகளை நிறுவிய நிறுவுனர்கள் மற்றும் இந்து சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், கீரிமலை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், கோணேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
பழைய பத்திரிகைகள்- 1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியில் வரலாற்று அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மூன்றாவது தளத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள் தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
“இந்த அரும்பொருள் காட்சியகத்தை பார்வையிட வருவோருக்கு இன்று தொடக்கம் மூன்று நாள்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் இந்த அரும்பொருள் காட்சியகத்தை செயற்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு 50 ரூபாய் அனுமதிச் சீட்டும் ஏனையோருக்கு 100 ரூபாய் அனுமதிச் சீட்டும் வழங்கப்படும் என்று சிவபூமி அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.