கொழும்புத் தமிழ்ச் சங்கம் உருவாக்கிய பட்டயக்கல்வியும் உயர்ந்த தமிழ்ப் பணியும்
தமிழ் புலமையாளர்களதும் ஊடகத்துறையைத் சார்ந்தோர்களினதும் வேண்டுகோளுக்கிணங்க கொழும்புத் தமிழ்ச்சங்கம் பட்டயக்கல்வி நெறியை ஆரம்பித்தது. தமிழ் மொழியை தெளிவாக உச்சரித்துப் பேசுகின்றார்கள் இல்லை, தமிழிலே உரியமுறையில் தொடர்பாடல்களை மேற்கொள்கிறார்கள் இல்லை, தமிழிலே வசனங்களை இலக்கணப்பிழையின்றி எழுகின்றார்கள் இல்லை என்ற விமர்சனங்கள் மேடைகளிலே முன்வைக்கப்பட்டன.
விமர்சனங்களை முன்வைத்தவர்கள் அதற்குரிய நடைமுறைத் தீர்வை முன்வைக்கவில்லை. பல்கலைக்கழகங்களும், தமிழை வளர்க்கும் கல்வி நிலையங்களும், இத்துறையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேடைகளிலே சுட்டிக்காட்டின.
தமிழ் வளர்க்கும் நோக்குடன் பாலபண்டிதர் வகுப்பு, பண்டிதர்வகுப்பு ஆகியவை செயற்பட்டு வருகின்ற போதிலும் அவற்றில் தமிழ் மாணவர்களது ஈடுபாடு குறைவாகவே காணப்படுகின்றனது.
இந்தவகையில் பண்டித மரபையும், பல்கலைக்கழக மரபையும் ஒன்றிணைக்கும் வகையிலே கொழும்புத் தமிழ்ச் சங்கம் பட்டய கற்கை நெறியை ஆரம்பித்தது. இதற்குரிய பாடத்திட்டம் பல்கலைக்கழக அறிஞர்களாலும் மரபுவழித் தமிழ் அறிஞர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்காலதமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், மரபுவழித் திறன், ஆய்வுமுறை, நவீன திறனாய்வு முறை, தமிழ் இலக்கணம், மொழியியல் முதலானவற்றை உள்ளடக்கி சிறப்பாக பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. யாப்பும் அணியும், மாணவர்களுக்கு ஒழுங்கு முறையிலே கற்பிக்கப்படுகின்றது. பழந்தமிழ் இலக்கிய ஆற்றலோடு நவீன இலக்கிய ஆற்றலும் உரிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படுகின்றதைப் போன்று தொடர் மதிப்பீடுகளுடன் தொகுத்த மதிப்பீடுகளும் மாணவர்களின் ஆற்றல்களை அறிவதற்கு கையாளப்படுகின்றன. ஒப்படைகளுக்கு புள்ளிகள் கொடுக்கப்பட்டு இறுதிப்புள்ளியில் அவை சேர்க்கப்படுகின்றன.
மாணவர்களின் ஆற்றல்கள் வெளிப்படுத்துவதற்குரிய செயற்திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்றிட்டங்கள் தமிழ்மொழி கல்வியில் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்குமாறும் வேண்டப்படுகின்றனர். அந்த கட்டுரை ஆய்வு நெறிமுறைகளை தழுவி எழுதப்பட்டிருக்க வேண்டும். அதன் பொருட்டு ஆய்வு முறையியல் விதிமுறைகளும் தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களால் வழங்கப்படுகின்றன.
இக்கற்கை நெறியில் இதுவரை மூன்று தொகுதி மாணவர்கள் தமது கல்வியை நிறைவு செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகத்துறையை சார்ந்தவர்கள், தமிழ் ஆர்வமுடைய அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என்ற பல சாராரும் இக்கற்கை நெறியை பயின்றுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தோர் இணையத்தின் வாயிலாக இதனைக் கற்க முடியுமா? என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையையும் எமது கவனத்தை ஈர்த்துள்ளது.
இக்கற்கை நெறி மேலும் வளர்ச்சியடைய தமிழ் ஆர்வலர்களது ஒத்துழைப்பை தமிழ்ச் சங்கம் வேண்டி நிற்கின்றது.இந்த தமிழ்ப் பட்டயக்கற்கை நெறி ஒரு இலவச கற்கை நெறியாகும். கல்வியின் பொருட்டு எதுவித கட்டணமும் மாணவர்களிடமிருந்து அறவிடப்படுவதில்லை. தனித்து பதிவுக் கட்டணம் மாத்திரமே பெறப்படுகின்றது. பெரும்பாலான விரிவுரையாளர்கள் ஒருவித ஊழியமும் பெறாமல் இலவசமாகவே இந்தப் பணியை மேற்கொள்கிறார்கள். தமிழுக்கு செய்யும் தொண்டாக அவர்கள் இதனைக் கருதுகின்றார்கள். இக்காலத்தில் இத்தகைய பணி செய்பவர்கள் மிகக்குறைவாகவே சமூகத்தில் காணப்படுகின்றனர். அவர்களுக்கு தமிழ்ச் சங்கம் தமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.
ஆண்டுதோறும் இக்கற்கை நெறியைப் பயிலும் மாணவர்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பது தமிழ்ச் சங்கத்தின் தலையாய பணியாகும். தமிழ்ச் சங்கம் மேற்கொள்ளும் பணிகளுள் தமிழ்ப் பட்டய கற்கை நெறியே மிகவும் உயர்ந்தது.
தமிழை வாழ வைப்பதற்கு அதுவே சிறந்த மார்க்கமாகவுள்ளது. எமது இளம் தலைமுறையினர் தமிழ் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் வரன்முறையாக அறிந்து கொள்வதற்கு இந்த கற்கை நெறியே நடைமுறை ஏற்பாடாக உள்ளது.
இலங்கையில் வேறு எந்த நிறுவனமும் இவ்வாறான கற்கை நெறியையும் நடாத்தவில்லை என்பதை மார்தட்டிக் காட்ட விரும்புகின்றோம். இந்தவகையில் இக்கற்கை நெறியை இலங்கையின் வேறு மாவட்டங்களுக்கும் விரிவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வேண்டுகோளையும் தமிழ்ச் சங்கம் கவனத்தில் எடுக்கவுள்ளது.
தமிழை வளர்க்க வேண்டுமெனில் இன்று மேடைகளில் முழங்குவதால் மட்டும் பயன்படாது. இது போன்ற நடைமுறை செயற்பாடுகளை முன்னெடுத்தலே தமிழை வளர்ப்பதற்குரிய பொருத்தமான நடைமுறையாகும். இதனை முன்னெடுக்க அனைவரதும் ஆதரவினை தமிழ்ச் சங்கம் வேண்டி நிற்கின்றது.
கல்வி கற்ற மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டமும், சிறப்பாக புள்ளிகள் ஈட்டும் மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கும் திட்டமும் எம்மிடம் உண்டு. அவற்றை செயற்படுத்துவதற்குரிய நிதி உதவிகளை தமிழ் வள்ளல்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.