மலாயாவில் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர்) மொழிசார் வேர்களை ஆராயும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் இரு விடயங்கள்; (1) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை; (2) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம். மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவும் அதன் நூலகமும் உருவாவதில் பலரும் பலவகைகளில் செயல்பட்டிருந்தாலும்கூட அக்காலப்பகுதியில் முதன்மை ஊடகமாக இருந்த தமிழ் முரசு அச்சு இதழ்வழி கோ. சாரங்கபாணி மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்நாட்டில் மிகப் பெரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்தது குறிப்பிடத் தக்கது. அதன் நீட்சியாக உலகெங்கிலுமிருந்து பலரும் இந்திய ஆய்வியல் துறையும் அதன் நூலகமும் உருவாக ஆற்றிய பங்களிப்புத் தமிழ் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். ஆயினும், பெருமளவு வாய்மொழி வரலாறாக மட்டுமே சுருங்கி நிற்கும் மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பிரிவு, அதன் நூலகம் தொடர்பான ஒட்டுமொத்த வரலாற்றுப் பார்வை மீள்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
மலாயாப் பல்கலைக்கழகத்தினுடைய வரலாற்று ஏடுகளில் சிறுபகுதியாக மட்டுமே அறிக்கை வடிவில் பதிவாகியிருக்கும் தமிழ்ப் பிரிவின் தோற்றத்திற்குப் பின்னால் பதிவு செய்யப்படாத பல தனிமனிதர்களின், அமைப்புகளின், அச்சு ஊடகங்களின் பங்களிப்பு இருக்கவே செய்கிறது. இந்திய ஆய்வியல் துறை என நேரடி தளத்தில் இத்துறை தொடர்பான வரலாற்றினை ஆராய்ந்தவர் உமா விஸ்வநாதன் (2005/2006ஆம் ஆண்டில் மேற்கொண்ட இளங்கலை ஆய்வு). மிகச் சொற்பமான தகவல்களை முன்வைக்கும் இவ்வாய்வுக்குப்பின் வெளிவந்த பல ஆய்வுகள் ‘மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை’ என்பதாகப் பேசுமிடங்களில் உமா விஸ்வநாதன் ஆய்வைப் பிரதியெடுப்பதாகவே இருக்கின்றன. எம். இலியாஸ் (1997), தமிழவேள் சாரங்கபாணி எனும் நூலில் ‘பல்கலைக் கழகத்தில்’, ‘தமிழுக்கு நிதி’ எனும் தலைப்புகளில் இத்துறை தொடர்பான தமிழகம் சார்ந்த கண்ணோட்டங்களை முன்வைத்திருந்தார். அடுத்து, பாலபாஸ்கரன் 2016ஆம் ஆண்டு பதிப்பித்த நூலில் கூடுதல் வரலாற்றுத் தகவல்கள் இருப்பது சற்றே ஆறுதலானது.
அவ்வகையில் (1) மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; (2) மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம் எனும் இவ்விரு உயர்க்கல்வி அமைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரலாற்று ஆய்வுகளும் இதர வகை ஆய்வுகளும் தொட்டுப்பார்க்காத அல்லது மிக மேலோட்டமாகக் கோடிட்டுக்காட்டிச் சென்ற ஒரு பகுதியை ஆழ, அகலத்துடன் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இதனை, குறிப்பாகத் தமிழ் முரசு நாளிதழில் தொடர்ச்சியாக வெளிவந்த செய்திகளினூடாக இக்கட்டுரை கவனப்படுத்த முயன்றுள்ளது. 1953ஆம் ஆண்டு தொடங்கி 1959ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 132 நாட்கள் இந்திய ஆய்வியல் துறை தொடர்பான செய்திகள் தமிழ் முரசில் வெளிவந்துள்ளன. இந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 203 பிரசுரங்கள் கட்டுரை, செய்தி, அறிவிப்பு வடிவில் இந்நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்திய ஆய்வியல் துறை என அதிகாரப்பூர்வமாகப் பெயர்பெறும் முன்னர் ‘இந்திய இலாகா’, ‘தமிழ்ப் பிரிவு, ‘தமிழ்த் துறை’, ‘இந்தியத் துறை’ எனப் பல பெயர்களில் நாளிதழ்களிலும் பலதரப்பட்ட உரையாடல்களிலும் இவ்வுயர்க் கல்வி பிரிவு அழைக்கப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.
மலாயாப் பல்கலைக்கழக உருவாக்க வரலாறு
மலாயாவின் நிலப்பரப்பு ஒன்பது மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பாகவும், பினாங்கு, மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று பிரிட்டிஷ் குடியேற்ற பகுதிகளின் கூட்டமைப்பாகவும் இருந்த போதே, 1949ஆம் ஆண்டு மலாயாப் பல்கைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மலாயாப் பல்கலைக்கழகம் ஆரம்ப காலக்கட்டத்தில் மருத்துவத்திற்கான உயர்க்கல்விக்கூடமாக மட்டுமே செயல்படத் தொடங்கியது. 1905ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, பின்னர் சில வருடங்கள் கழித்து கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி (King Edward VII College of Medicine) என்பதாக உருமாற்றம் கண்டது. இக்கல்லூரியில் டிப்ளோமா பயிலும் மாணவர்களின் டிப்ளோமா பட்டத்திற்கான மருத்துவ பதிவிற்கு பிரிட்டிஷ் மருத்துவ கழகம் (British Medical Council) அங்கீகாரம் வழங்கியது. மலாயாவில் மருத்துவ தொழிலுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான முக்கியத் தளமாக கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி அக்காலப்பகுதியில் விளங்கியது. இதன் அடிப்படையில் 1915-ஆம் ஆண்டு தொடங்கி இக்கல்லூரி தன் இருப்பைச் சிங்கப்பூரில் வெற்றிகரமாக நிறுவியது.
மறுநிலையில், 1928-ஆம் ஆண்டு சிங்கப்பூரிலேயே ராஃபிள்ஸ் கல்லூரி (Raffles College) எனும் பெயர் கொண்டு மற்றுமொரு உயர்க்கல்விக்கூடமும் திறக்கப்பட்டது. இக்கல்லூரியில் மருத்துவக் கல்வியுடன் சேர்த்துக் கூடுதலாகக் கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த படிப்புகளும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. சில ஆண்டுகளில் இந்தக் கல்லூரியைப் பல்கலைக்கழகமாக உருமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்படத் தொடங்கியது. அதன் அடிப்படையில் 1947ஆம் ஆண்டு சர் அலெக்சாண்டர் கார்-சாண்டர்ஸ் (Sir Alexander Carr-Saunders) தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அப்போதைய மலாயாவின் சூழலை ஆராய்ந்ததோடு மட்டுமில்லாமல் ராஃபிள்ஸ் கல்லூரி மற்றும் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி அதுவரை அடைந்திருந்த அடைவுநிலையும் ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவில் மலாயாப் பல்கலைக்கழகம் என்றதொரு சுயாதீன பல்கலைகழகம் உருவாவதில் எந்தத் தடையும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்துச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 7, 1949இல் மலாயாப் பல்கலைக்கழகம் அதிகாரப் பூர்வமாக சிங்கப்பூரில் செயல்படத் தொடங்கியது.
மலாயாப் பல்கலைக்கழக நிர்வாக முறை இந்நாட்டின் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இந்நாட்டில் இயங்கும் இதர கல்விக்கூடங்களின் நிர்வாக முறைமைகளையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. கல்வி தொடர்பான செயல்திட்டங்கள் இப்பல்கலைக்கழகத்தின் உச்ச நிர்வாக அமைப்பில் இருந்த கல்வியாளர்கள் பொறுப்பிலும், நிதி மற்றும் பொது நிர்வாகக் கட்டுப்பாடு தொடர்பான விடயங்கள் கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கழகத்தின் (Council with both academic and lay representatives) கண்காணிப்பிலும் விடப்பட்டிருந்தது. தொடக்கக் கட்டமாகப் பல்கலைகழகத்தில் கலை, அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய புலங்கள் உருவாக்கப்பட்டு, 450 மாணவர்களைக் கொண்டு பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியது. மருத்துவப் புலத்தில் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டமும் மருந்தகம் கல்வியில் டிப்ளோமாவும், அறிவியல் புலத்தில் விலங்கியல் மற்றும் தாவரவியல் கல்வியும் அதனைத் தொடர்ந்து கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கலை புலத்தில் ஆங்கிலம், வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றுடன் பொருளாதாரம் தொடர்பான கல்வியும் போதிக்கப்பட்டன.
இப்படிச் சிறிது சிறிதாக இப்பல்கலைகழகத்தின் பாடத்திட்டங்களில் மேம்பாடு கொண்டு வரப்பட்ட நிலையில் உள்ளூரில் முதன்மை பயன்பாட்டில் இருக்கும் மூன்று மொழிகளாகிய மலாய், சீன, தமிழ் மொழிகளைக் கற்பிக்கும் துறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. 1949ஆம் ஆண்டு தொடங்கி 1957க்கு இடைப்பட்ட காலத்தில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மேற்குறிப்பிட்டிருந்த மொழிகளுக்கும், தத்துவம், புவியியல், பொறியியல், சட்டம், மேலும் ஒட்டுண்ணியியல், எலும்பியல் அறுவை சிகிச்சை, ‘சோசியல் மெடிசன்’ (social medicine) மற்றும் மருந்தியல் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் மருத்துவ பாடங்களுக்கும் துறைகள் உருவாக்கம் கண்டன. மேலும் கல்வியியல், பொது சுகாதாரம் மற்றும் சமூக நிர்வாகம் ஆகிய துறைகளின்கீழ் டிப்ளோமா கல்வி வசதிகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் தொடரவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால், பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது (Caine, 1958, May).
இதற்கிடையில், 1954ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அமைந்திருக்கும் பல்கலைக்கழக வளாகத்தைத் தவிர்த்துக் கோலாலம்பூரிலும் தனித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது. பின்னர் 1962ஆம் ஆண்டு இவ்விரண்டும் தனித்தனி பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டன. சிங்கப்பூரில் அமைந்திருந்த வளாகம் சிங்கப்பூர் பல்கலைக்கழகமாக மாறியது. அதுவே பின்னர் நான்யாங் பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து இன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது. கோலாலம்பூரில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் மலாயாப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது (Wan, 2019, November, 20).
இந்தியப் பகுதி அமைக்க கோரிக்கை
பல்கலைக்கழக செனட் மற்றும் கவுன்சில் கூட்டுக் குழு அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னுரிமை அளிக்கபட வேண்டிய கல்வி முன்னேற்றங்கள் குறித்துப் பரிந்துரைகளை வழங்கியது. பின், சில மாற்றங்களுடன் இந்தப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒரு பரிந்துரையாகத் தனி இந்தியத் துறை (Separate Department) அமைக்கப்பட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது (Annual Report of University of Malaya, 1953-1954, பக். 2).
மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி தொடங்க வேண்டும் என்று கார் சாண்டர்ஸ் ஆணையம் முன்மொழிந்த பிறகு அது தொடர்பான எந்த நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படவில்லை. 1951ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய இலாகா ஆரம்பிப்பது பற்றிய திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று 1953-ஆம் ஆண்டு சட்ட சபை அங்கத்தினரான சி. ஆர். தசரதராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். மலாயா வானொலி தமிழ் பகுதி, பொது உறவு இலாகா, குடிநுழைவுத்துறை, தொழிலாளர் இலாகா ஆகியவைகளுக்கு தமிழ்மொழியில் ஆற்றல் கொண்டவர்கள் தேவை என்பதால் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ், சமஸ்கிருதம், இந்திய சரித்திரம் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுக்கும் இலாகா அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனோடு கலை, புதைபொருள் ஆராய்ச்சி, அரசியல், மத்திய கால ஜோதிட சாஸ்திரம், இலக்கியம், கலைகள், கைத் தொழிகள் போன்ற பாடங்களும் போதிக்கப்பட வேண்டும் என்று சி. ஆர். தசரதராஜ் வலியுறுத்தினார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 05, 1953, பக். 08). 07ஆம் தேதி பிப்ரவரி 1953ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பதில் தாமதமானதற்கான காரணங்களைத் தமிழ்முரசு பத்திரிக்கை வெளியிட்டது. அவை :
‘மலாயாப் பல்கலைக்கழகமே ஆரம்ப நிலையில் இருந்து வருகிறது. மலாயாப் பல்கலைக்கழக நிர்மாணத்திற்குப் போதிய பணமும் இன்னும் சேரவில்லை. ஆதலால், பல்கலைக்கழக அதிகாரிகள் வெகு வேகமாய் ஓட முடியாத நிலை. இதற்கிடையில் மலாயா சீனர்கள் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க விரும்புகிறார்கள். சீனப் பகுதி அமைக்கப்படாமல் இருப்பது சீனர்களுக்கு அதிருப்தி அளித்திருக்கக்கூடும். அரசாங்க கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்திற்கும், மலாய்மொழிக்கும் பிரதானமளிக்கப்பட்டிருப்பது சீனர்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. இந்தியப் பகுதி குறித்து இந்தியர்களிடையே அபிப்பிராயப் பேதங்கள் உண்டு. மலாயாப் பல்கலைகழக நிர்மாணிப்பிற்கு அடிப்படையான கார் சாண்டர்ஸ் அறிக்கையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஒரு விரிவுரையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் மொழி இந்திய மொழிகளில் ஒன்று; அதை மட்டும் பல்கலைக்கழகத்தில் இடம் பெறச்செய்வது அனைவருக்கும் திருப்தி அளிக்க மாட்டாது என்ற அபிப்பிராயம் இந்தியர்களிடையே எழுந்தது. சிலர் ஹிந்தி மொழியையும் மலையாள மொழியையும் சேர்க்க வேண்டும் என்று கோரினர். இறுதியாகத் தமிழ்மொழிக்குப் பிரதானமளிப்பதாக இந்தியர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
(தமிழ் முரசு, பிப்ரவரி, 07, 1953, பக். 04)