வல்வையின் வைரக்கல் கட்டியண்ணா.. என் மனப்பதிவுகள்..! கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2018 (திங்கட்கிழமை)
அக்காலத்தில் மட்டுமல்ல இன்றும் வல்வைக்கு வெளியால் போகும்போது வெளியூர் மக்கள் நினைவுபடுத்தும் வல்வைப் பெயராக பொட்டு கட்டி என்ற பெயர் துலங்குவதை காண்கிறேன்.
எப்போதுமே ஓர் ஊர் அந்த ஊரில் வாழும் சாதனை மனிதர்களால்தான் அடையாளப்படுத்தப்படுகிறது என்பார்கள். அந்தவகையில் வல்வையின் விளையாட்டுத்துறை அடையாளமாக கட்டியண்ணா இன்றும் உச்சத்தில்தான் இருக்கிறார்.
இதுதான் அவருடைய வாழ்வின் வெற்றி.. அவர் வெற்றி பெற்ற ஆட்டங்கள் எல்லாவற்றையும் விட பெரிய வெற்றி இதுதான். இதன் மூலம் அவர் தனக்குமட்டுமல்ல தனது ஊருக்கும் ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளார்.
அவரிடம் நான் காணும் இன்னொரு சாதனைப் பண்பு, காலத்தையும் மாற்றத்தையும் புரிந்து அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அதிசயம்தான்.
உதயசூரியனில் அவர் முக்கியமான ஒருவர், அதுபோல வல்வை புளுசில் முக்கியமான ஒருவர், வல்வை சைனிங்கிஸ்சில் பிரபலமான ஒருவர், வல்வை சிதம்ஸ்சில் விளையாடிய ஒருவர், வல்வை தீருவிலில் முக்கியமான ஒருவர் என்று வல்வையின் கழகங்கள் எல்லாம் ஒவ்வொரு காலத்தில் எழுச்சி பெற்றிருந்தபோது, அந்த எழுச்சியில் கட்டியண்ணாவை உரிமையுடன் பயன்படுத்திக் கொண்டன.
நான் நேதாஜி தலைவராக இருந்தபோது கட்டியண்ணா நமது அணிக்கு விளையாடியுள்ளார், கரபந்தாட்டம் ஓவர்கேமில் நாங்கள் பல தடவைகள் சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளோம். அப்போது கட்டியண்ணா எங்களுடன் இருந்தார்.
அதற்காக அவரை கழகம் மாறும் ஒருவர் என்று சிறுமைப்படுத்திவிடக் கூடாது. அவர் ஒட்டு மொத்த வல்வையின் பொது மனிதராக இருந்தார். தன்னளிவில் வெற்றியாளருடன் இணைந்து பயணிப்பதே காலத்தின் வெற்றி, அதைவிட ஊரின் வெற்றிக்கு அது அவசியம் என்ற புரிதல் அவர் வாழ்வில் இருந்தது.
ஆட்டங்களில் சிலர் கடைசி நேரங்களில் வெல்ல முடியாது என்று மனம் தளர்ந்து தாறுமாறாக விளையாடுவார்கள். ஆனால் கட்டியண்ணாவோ கடைசி ஒரு விநாடித்துளியைக் கூட நம்பிக்கை வரட்சியுடன் பயன்படுத்த மாட்டார். வெற்றி தோல்வி இரண்டையும் ஒரே உணர்வுடன் பயன்படுத்தினார்.
டாக்டர், பொறியியலாளர் போன்ற தொழில்களே புகழுக்குரியது என்ற யாழ்ப்பாண சமுதாயத்திற்கு இவைகள் எதுவும் இல்லாமல், விளையாட்டால் இவர்களை விட பெரிய புகழை அடையலாம் என்பதை தனது விளையாட்டு மைதான வாழ்வால் எடுத்துரைத்தவர்.
ஊரில் ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் ஊரவர் என்ற முறையில் அந்த ஊர் தனது கடமையை செய்யாவிட்டாலும், தான் முன்வந்து அந்த ஊரின் கடமையை செய்வதே அவருடைய பண்பு. அது அவருக்கு ஒரு தலைமைத்துவத்தைக் கொடுத்தது.
முதலில் யார் செய்கிறான் என்று பார்க்க வேண்டாம் அவன் ஊரவன் மறுபேச்சு பேசாதே என்று அவர் கூறி பலருடைய வாய்களை அடைத்துள்ளார். இவ்வளவு இருந்தும் அரசியலில் அவர் ஈடுபடாமல் விளையாட்டின் பெருமையை காப்பதும் கவனிக்கத்தக்கது.
வெளியூர் விளையாட்டு வீரர் வல்வை வந்தால் ஒரு தடவை பொட்டுக்கட்டி அண்ணாவை பார்த்துவிட்டு போவது பெருமை என்று கருதினார்கள். வந்தவர்களுக்கு வல்வையின் பொருட்களை மனம்போல வாங்கிக் கொடுத்து அனுப்பிவிடும் விருந்தோம்பும் பண்பும் அவரிடம் இருந்தது. நான் வெளியூர் வீரர்களை சந்திக்கும் போதெல்லாம் இதை சொல்வார்கள்.
தனது பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரியாக வாழ வேண்டும், அதுபோல தனது ஊரின் பெருமைக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும் என்று 75 வருடங்களில் சாதனை வாழ்வை வாழ்ந்து காட்டியிருக்கிறார். மிகவும் கடினமான சறுக்காத பயணம்.
இந்த ஆண்டு இலங்கை வந்தபோது வல்வையின் சிறந்த இளம் வீரர்களை சந்தித்து கட்டியண்ணாவின் பெருமைகளை சொல்லி, நாங்கள் எல்லாம் எங்கள் மூத்த அண்ணனாகவே அவரை போற்றுகிறோம் என்று கூறினேன். ஆச்சரியமாக பார்த்தார்கள், அவர்கள் இப்படியான பெரு வீரர் ஒருவருடன் வாழ்வதை சரிவர உணரவில்லை என்ற வருத்தம் அவரில் தெரிந்தது. அதை கழகங்கள் தமது கடமையாக செய்ய வேண்டும், செய்திருந்தாலும் அது போதியதல்ல.
சரி புலம் பெயர்ந்து வாழும் நமது வல்வை மக்கள் இந்த நேரம் செய்திருக்க வேண்டிய கடமை என்ன..?
இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் அவர் புகழை கொண்டு செல்லும் பிரமாண்டமான வேலையை செய்திருக்க வேண்டும். ஏனென்றால் நமது கையில் இருக்கும் பெரிய சாதனை வரலாற்று மனிதர் அவர். அவர் பெருமையை வானுயர செய்து இந்த ஊருக்கு மகத்தான பெருமையை தேடிக் கொடுத்திருக்க ஆவன செய்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் அவருடைய இந்த வெற்றியை நமக்குள் மட்டும் கூடி கொண்டாடாது வெளியூர் மக்களை அழைத்து பெருமிதத்துடன் கொண்டாடியிருக்க வேண்டும்.
இன்னமும் நாள் போய்விடவில்லை.. நாம் விழிப்படைய வேண்டும். நமது காலத்தில் வாழும் நம்மூர் வீரர்களை உலகப்புகழடைய செய்வதல்லாமல் நமக்கு வேறென்ன வேலை? நாமும் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப்போகிறார்கள்..?
அப்படிச் செய்தால் வல்வை கட்டியண்ணா காலத்தில் மீண்டும் விளையாட்டுத் துறையில் பொற்காலம் காணும்.
எத்தனையோ தமிழ் அரசியல் தலைவர்களை எல்லாம் தோளில் தூக்கி சென்று, இரத்தப் பொட்டிட்டு புகழடைய வைத்த வல்வைக்கு நமது வீரர்களை போற்றும் கடமையும் அவசியமே. உறவுகளே இது பற்றி ஒரு கணம் சிந்தியுங்கள்.
இன்றே வல்வை மாதா பெற்றெடுத்த வைரக்கற்களை உங்கள் தங்க மோதிரங்களில் அணியுங்கள், அவர்களை பெருமைபட பேசுங்கள். அந்த புகழ் மிகு ஒளியில் நடவுங்கள் நமது இலக்கை அடைந்துவிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.