மரக்கறி சந்தையில் பொலித்தீனுக்கு முற்றாக தடை - துணிப்பை பாவனை அறிமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2019 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை நகர சபை
“எமது சூழலை நாம் பாதுகாப்போம்! நாம் பொலித்தீன் பை பயன்படுத்துவதில்லை”
வல்வெட்டித்துறை நகர சபை பிரதேசத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்திட்டத்தின் கீழ் வடமராட்சி நல்லொழுக்க கழகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக நகர சபை மரக்கறிச்சந்தையில் 01.07.2019முதல் சொப்பின் பை பாவனையை முற்றாக நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (01.07.2019) காலை 8:00 மணிக்கு நகர சபையின் தவிசாளர் கோ.கருணானந்தராசா அவர்களின் தலைமையில் மரக்கறிச்சந்தை முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வடமராட்சி நல்லொழுக்க கழக அங்கத்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். மரக்கறிச்சந்தைக்கு வருகை தந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் “எமது சூழலை நாம் பாதுகாப்போம்! நாம் பொலித்தீன் பை பயன்படுத்துவதில்லை” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
சந்தை வியாபாரிகளும் இந்நடைமுறைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததுடன் விசேடமாக சந்தை வியாபாரியான திரு.சுமதீஸ்வரன் அவர்கள் கடதாசிப்பை மற்றும் துணிப்பைகளை ஏற்பாடு செய்து முன்மாதிரியாக திகழ்ந்தமை பாராட்டுக்குரியதாகும். நகர சபையின் இம்முயற்சி வெற்றிபெற வல்வெட்டித்துறை வாழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென தவிசாளர் கேட்டுக்கொண்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.