மூன்று தசாப்தம் நிலவிய யுத்த காலத்திலும், அத்தனை இடர்பாடுகளின் மத்தியிலும் - இயங்கி வந்த ஒரு இலக்கியக் கழகம் அகில இலங்கை கம்பன் கழகம் ஆகும். இக்கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்டது. கம்பவாரிதி இ. ஜெயராஜ் அமைப்பாளராகவும், தி. திருநந்தகுமார் தலைவராகவும், க. குமாரதாசன் செயலராகவும், ெடாக்டர் கு. ஸ்ரீ. இரத்தினகுமார் பொருளாளராகவும் பணியாற்றினர்.
இக்கழகத்தின் பணி பரந்துபட்டது. இளம் தலைமுறையினருக்கு மரபிலக்கிய பயிற்சியும் ஆற்றலும் உருவாக்குதல், கிராமங்கள் தோறும் சென்று சொற்பொழிவுகள் மூலம் இலக்கியச் சுவை பரப்புதல், இலக்கியம் சார்ந்த நூல்களை பதிப்பித்தல், இளைஞர்கள் மத்தியில் கவிதை, பேச்சு, மனனப் போட்டிகள் நடத்தி ஆற்றல்களை வெளிக்கொணர்தல், ஆண்டு தோறும் கம்பன் விழா நடாத்தல், மரபுரீதியான இசை வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் இசைவிழா நடாத்துதல், நாடக, நாட்டியத் துறையின் வளர்ச்சிக்காக நாட்டிய வேள்வி நிகழ்ச்சிகளை நடாத்துதல், கம்பஇராமாயணத்தை மட்டுமல்லாது திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பிற இலக்கிய கருத்தரங்குகளை நடத்துதல், சொல்விற்பனம், வித்தகம் முதலிய தொடர் நிகழ்ச்சிகளை நடத்துதல் முதலியன அப்பணிகளுள் சிலவாகும்.
அவ்வகையில் கொழும்புக் கம்பன் கழகம் என்பது இக்கழகத்தால் 1994இல் நிறுவப்பட்ட ஒரு கிளைக் கழகமாகும். இக்கழகம் இவ்வாண்டு வெள்ளிவிழா காண்கின்றது. 1994ஆம் ஆண்டில் இக் கழகம் நிறுவப்பட்ட பொழுது இன்றைய ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் பெருந்தலைவராகவும், மொறீசியஸ் நாட்டின் தூதுவர் தெ. ஈஸ்வரன் தலைவராகவும், பொ. பாலசுந்தரம் செயலாளராகவும், ச.ஆ. பாலேந்திரன் பொருளாளராகவும், நிர்வாகப் பொறுப்பேற்று கம்பன் இலக்கியப் பணியில் உழைத்தனர்.
ஆண்டு தோறும் தமிழ் அறிஞர்களை கௌரவித்து விருதும் பணமுடிப்பும் வழங்கிக் கௌரவித்து வரும் கம்பன் கழகம், முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டிய சான்றோர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து ஒரு இலட்சம் ரூபா பணமுடிப்புடன் கூடிய 'மகரயாழ்' விருதினை யாழ் விழாக்களில் வழங்கி வந்தது. கொழும்பு விழாக்களில் உலகளாவிய ரீதியில் கலை, இலக்கியத்துறையில் சாதனை நிகழ்த்திய பெரியோர்க்கென ஆண்டுதோறும் 'கம்பன் புகழ்' விருதினை வழங்கி வருவதோடு, துறைசார்ந்த அறிஞர் அறுவர்க்கு சான்றோர் கௌரவங்களையும் வழங்கி வருகிறது. மேலும் ஆறுமுகநாவலர் விருது, விபுலாந்தர் விருது உள்ளிட்ட அறக்கட்டளை விருதுகள் ஐந்தையும், தக்க ஆற்றலாளர்களுக்கு கம்பன் கழகம் வழங்கி வருகிறது.
ஆதரவற்றோர்க்குத் துணைபுரியவும், ஆதரவற்ற மாணவரின் கல்வி வளர்ச்சிக்குத் துணை புரியவும் இவ்வமைப்பு தொடர்ந்து உதவி புரிந்து வருகிறது. மேலும் போரின் நிறைவுக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு நிதியுதவி வழங்கியும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கியும் சமுதாயப் பணியாற்றி வரும் கம்பன் கழகம் ஆண்டுதோறும் ஆதரவற்ற சிறுவர் மற்றும் முதியோர்களைப் பாராமரிக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தும் வருகிறது.
தமிழ் அன்பர்களினதும், ஆதரவாளர்களினதும் அன்பளிப்புகளைக் கொண்டு மட்டுமே இயங்கி வரும் இக்கழகம், எந்தவொரு நிகழ்ச்சியையும் ரிக்கற் விற்பனைக்காக நடத்தவில்லை.
மரபுத்தமிழுக்கு உரிய இடம் வழங்கிய கம்பன் கழகம், தமிழின் நவீன போக்குகளையும் புதிய படைப்பிலக்கியப் புலங்களையும் வளப்படுத்தியே வந்துள்ளது. அவ்வகையில் ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் கம்பன் கழகத்தின் பங்கு கணிசமானது. ஆண்டுதோறும் விழாக்களில் அமைக்கப்படும் கவியரங்கங்களில் பங்குபற்றிய நவீன கவிஞர் பலரும், சமகால அரசியல் சமூக விடயங்களைத் துணிந்து பாடலாயினர். கவிஞர்கள் இ. முருகையன், புதுவை இரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி, வ.ஐ.ச. ஜெயபாலன், சோலைக்கிளி எனத் தொடரும் ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர்கள் பலரும் தங்கள் அரங்க ஆளுமையால் கம்பன் விழாக்களை மெருகேற்றியமை குறிப்பிடத்தக்கது. மேலும் டொமினிக்ஜீவா, செங்கை ஆழியான், தெணியான் போன்ற படைப்பிலக்கியக் கருத்தாக்கள் கம்பன் கழகத்தால் கௌரவித்துப் போற்றப்பட்டமையும் நினைவிற் கொள்ளத்தக்கது.
அந்த வகையில் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டு கொழும்புக் கம்பன்விழா ஜனவரி 31ஆம் திகதியான இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் பெப்ரவரி 4ஆம் திகதிவரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன் கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 40 வருடங்கள் பூர்த்தியாவதுடன் கொழும்பில் அதன் பணிகள் தொடங்கி இவ்வாண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனால் இவ்வாண்டுக் கம்பன் விழா கொழும்புக் கம்பன் கழகத்தின் வெள்ளி விழாவாக மிகப் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
முதல் நாளான இன்று வெள்ளி மாலை 5.00 மணிக்கு, வெள்ளவத்தை, இராமகிருஷ்ண தோட்டம், இல. 12 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்யலஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப் படமும் சீதா, இராம விக்கிரகங்களும் ஊர்வலமாக விழா மண்டபம் நோக்கி எடுத்து வரப்படுகின்றன. இந்த ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தரும் பிரமுகர்களும் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலிய, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள அறிஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கள இசையும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையும், மங்கையர்களின் நிறைகுட பவனியும், நடன மங்கையர்களின் அபிநய பவனியுமாக ஊர்வலம் சிறப்புற நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணிக்கு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இவ்விழாவின் திருநாள் மங்கல நிகழ்வை திருக்கேதீஸ்வரர் ஆலயத் திருப்பணி சபையின் இணைச்செயலர் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, யாழ். மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான ஜெ. விஸ்வநாதன் தலைமையேற்று நிகழ்வுகளை நடத்தவுள்ளார்.
மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையின் முன்னாள் பிரதியமைச்சரான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணனும், புதுச்சேரி சட்டசபையின் சபாநாயகர். வி.பி.சிவக்கொழுந்துவும், இந்தியப் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தற்போதைய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினருமான இல. கணேசனும் இம்முறை விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், வடமாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன், கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க, சைவமங்கையர் கழகத் தலைவி திருமதி சிவானந்தி துரைசாமி, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், சு. அருமைநாயகம் முதலிய பிரமுகர்கள் பலரும் இவ்வாண்டு விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கொழும்பு கம்பன் கழக வெள்ளி விழா மலரும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் பதினைந்தாண்டின் நிழற்படத் தொகுப்பும், கம்பன் விழா 2018, இசைவிழா 2018, 2019 ஆகியவற்றின் இறுவட்டுகளும் வெளியிடப்படவுள்ளன.
கழகத்தின் இவ்வாண்டு விழாவில் சமூக நிறுவனங்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்டிருந்தும் கல்வியில் சாதனை செய்த மாணவர்கள், வளர்ச்சிக்கான துணை தேவைப்படும் குடும்பங்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் நிதியுதவிகளும் வழங்கப்படவுள்ளன.
இவ்வாண்டு கம்பன் புகழ் விருது பெறும் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார்.
கொழும்புக்கம்பன் கழகம் உலகளாவித் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு கம்பன் புகழ் விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. வி.ரி.வி. பவுண்டேஷன் நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் கம்பன்புகழ் விருது பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அவர்தம் இசைத்தமிழ் பங்களிப்பினை மனங்கொண்டு வழங்கப்படவுள்ளது. விருதுக் கேடயம், பொன்னாடை, இந்தியப் பணம் ரூபா ஒரு இலட்சம், பொற்கிழி ஆகியவற்றுடன் கூடிய இவ்விருதினை, கம்பன்விழாவின் நிறைவு நாளன்று மாலை கழகப் பெருந் தலைவர் ஜெ.விஸ்வநாதன் வழங்கிக் கெளரவிக்கவுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, புகழ்பெற்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா), பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, முன்னாள் பிரதமரின் செயலாளர் வே. சிவஞானசோதி, எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர் ஏ. எம். நஹியா ஆகியோர் விருது பெறும் உள்நாட்டு பிரமுகர்களாவர்.
கம்பன் விழாவில் வருடாந்தம் ஐந்து அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாண்டு நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் அமரர் என். கருணைஆனந்தன் நிறுவியுள்ள நாவலர் விருதினை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த உரையாசிரியரான பள்ளத்தூர் பழ.பழனியப்பனும், தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர் நிறுவியுள்ள விபுலாநந்தர் விருதினை நாட்டிய கலாமந்திர் இயக்குநர், நடன ஆசிரியை கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனும், கவிக்கோ அமரர் அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) நிறுவிய மகரந்தச்சிறகு விருதினை இலங்கையின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனுக்கும், புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் (தமிழ்நாடு) நினைவாக குடும்பத்தினர் நிறுவியுள்ள நுழைபுலம் ஆய்வு விருதினை பேராசிரியர் ப. புஷ்பரட்ணத்துக்கும், புகழ்பெற்ற தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவியுள்ள ஏற்றமிகுஇளைஞர் விருதினை எழுத்தாளர் தீபச்செல்வனும் பெற்றுக் கொள்கின்றனர்.
அமரர் துரை. விஸ்வநாதன், அமரர் பொன். பாலசுந்தரம், அமரர் இலக்கிய வித்தகர் இ. நமசிவாய தேசிகர் ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட பேச்சு, கவிதை, திருக்குறள் மனனப் போட்டிகளிலும், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் ஆதரவுடன் இவ்வாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப் போட்டியிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் பரிசில்களும் இரண்டாம் நாள் விழாவில் வழங்கப்படவுள்ளன.
இவ்வாண்டுக் கம்பன்விழாவில் எழிலுரை, நாட்டிய அரங்கம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம், கவிநய அரங்கம், பட்டிமண்டபம், சிந்தனை அரங்கம், கவியரங்கம், இலக்கிய ஆணைக்குழு, கருத்தரங்கம், நாடக அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இவ்வாண்டு தமிழ்நாட்டு பிரபல தொழிலதிபர் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி விருந்தினராய்க் கலந்து கொள்வதோடு, விழா நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் சிறந்த அறிஞர்களான திருமதி பாரதி பாஸ்கர், திருமதி கே. சுமதி, டாக்டர் பிரியா இராமச்சந்திரன், புலவர் இரெ.சண்முகவடிவேல், புலவர் மா. இராமலிங்கம், பிரபல திரைப்பட பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் பிறைசூடன், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், மதுரை எம். சண்முகம், முனைவர் இரா. மாது, பேராசிரியர் ரெங்கராஜா ஆகியோரும், அவுஸ்திரேலியாவிலிருந்து பேச்சாளர்களான தி. திருநந்தகுமார், க. குமாரதாசன், ஜெ. ஜெயராம் ஆகியோரும், நம்நாட்டைச் சார்ந்த பிரபல பேராசிரியர்கள், அறிஞர்கள், நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் இவ்வாண்டு விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
விழா நடைபெறும் ஐந்து நாட்களிலும் மண்டபவாயிலில் அகில இலங்கைக் கம்பன்கழகம் மற்றும் பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியன புத்தகக் கண்காட்சி நடாத்தவுள்ளன.(thinakaran)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.