Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மனப்பட மனிதர்கள்: எட்வேட் தங்கவடிவேல் பாகம் ஆறு - கி.செல்லத்துரை

பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2016 (செவ்வாய்க்கிழமை)
இவர் இந்தத் தொடரில் வரும் மாந்தர்கள் போல சாதாரணமான ஒருவரல்ல இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த வரலாற்றிலேயே பதியப்பட வேண்டிய ஒருவர். 
 
பதியப்பட வேண்டியவர்களின் வரலாற்றை சரிவர பதிவு செய்யாமல் விடப்பட்ட பெருமை கொண்டவைகள்தான் நமது வரலாற்று நூல்கள்.. ஆகவேதான் இவருடைய பெருமைகளையும் என்னால் எழுத்து வடிவங்களில் காணமுடியவில்லை. 
 
இவரைப்பற்றி எழுதுவதானால் அதற்கு இந்தக் கட்டுரை போதியதல்ல தனியான புகழ் நூலே எழுத வேண்டும், அத்தனை பெருமைக்குரிய சாதனைகளை எல்லாம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். 
 
இதனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்னதாக இவருடைய மனைவியர் திருமதி யோகநாயகி டென்மார்க் வந்தபோது அவரிடம் பல தகவல்களை வாய்மொழியாகக் கேட்டு ஓர் ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டேன். 
 
அதைவிட காலஞ்சென்ற எனது அம்மாச்சி ஆச்சிமுத்துவிடம் செவிவழி கதையாக கேட்டு மனதில் பதிய வைத்திருந்த பல தகவல்களுடன் யோகநாயகியுடைய கருத்துக்களையும் கூடவே பொருத்திப் பார்த்துக் கொண்டேன்... 
 
எழுத வேண்டும்... ஆனால் என்னால் முடியவில்லை.. ஏனென்றால் வல்வை மண்ணிலேயே வாழ்ந்து மேலும் தகவல்களை திரட்டிக் கொண்டால் மட்டுமே அந்த உண்மைக் காவியக் கதையை சாண்டில்யனின் கடற்புறா, ஜவனராணியை போல அழகான கடல் வரலாற்று காவியமாக எழுத முடியும். 
 
காலம் கைகூடவில்லை.. அவருடைய மகன் சிவா அதை வெளிக்கொணர பெரும் ஆவல் கொண்டிருந்தார்.. ஆனால் அவரும் இறந்துவிட்டார், அவருடைய இறப்பினன்று கூடியிருந்தவர்களிடையே எனக்குத் தந்த சில நிமிடங்களில் எட்வேட் தங்கவடிவேல் பற்றிப்பேசினேன்.. 
 
வாழ்ந்தவனின் வரலாறு தெரியாமல் செத்தவீடுகளில் தேவாரங்களை பாடி என்ன பயன் மனம் அழுதது... வெளிக்காட்டவில்லை.. 
 
அதோ காலக்குதிரை கிறீச்சிட்டு அரை நூற்றாண்டுகள் பின்னதாக ஓடி எட்வேட் தங்கவடிவேல் வீட்டில் கால்களை நிலத்தில் தட்டியபடி நிற்கிறது.. 
 
ஒரு பண்ணையார் வீட்டில் வருவது போல எண்ணற்ற மக்கள் கூடி நிற்கிறார்கள்... தெருவில் அரைக்காற்சட்டையுடன் நிற்கிறேன்.. என்ன நடக்கிறது.. 
 
உள்ளே தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம் என்று ஈழத்தின் அத்தனை தலைவர்களும் நிற்கிறார்கள். 
 
வரலாற்றுப்புகழ் மிக்க தமிழர் விடுதலைக்கூட்டணி அன்றுதான் உருவாகிக் கொண்டிருந்தது, வல்வையின் மகத்தான மனிதர் திரு.ச.ஞானமூர்த்தி அப்பா தலைமையில் தமிழரசு, தமிழ்காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தமிழக்கட்சிகளையும் இணைத்து தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாகியது. 
 
இந்தத் தகவலை ஒரு நாள் நான் இங்கிலாந்தில் பேசியபோது இன்றைய வல்வை இளையோர் ஆடிவிட்டார்கள்.. அதுவும் நாமா என்று கேட்டார்கள்.. அது மட்டுமா அதுக்கும் மேலே என்றேன்.. 
 
அன்று அத்தனை தலைவர்களும் கூடி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாகிய ஊற்றுக்கண்தான் இங்கு வரும் தங்கவடிவேலின் வீடு.. 
 
தலைவர்கள் வெளியே வருகிறார்கள்.. அதற்குள் யாரோ ஒருவர் காரை மக்களிடையே வேகமாக ஓட்டுகிறார்.. அடங்கத்தமிழன் சுந்தரலிங்கம் அதை வீரமாக விரட்டுகிறார்.. கார் ஓடிவிடுகிறது... காட்சி முடிவடைகிறது. 
 
அந்தப் புள்ளியில் இருந்து அப்படியே மறுபடியும் பாய்ந்து இன்றைய புள்ளிக்கு வருகிறேன்.. அந்த ஐம்பதாண்டு நீளமுள்ள வரலாற்று நூலை சுண்டிப்பார்க்கிறேன்.. 
 
தமிழர் விடுதலைக் கூட்டணி, வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழராய்ச்சி மாநாடு, அல்பிரட் துரையப்பா கொலை, திண்ணைவேலி குண்டுத்தாக்குதல், யூலைக்கலவரம் என்று எல்லா சம்பவங்களையும் கோர்த்துக்கட்டிய மாலையாக ஆடியது... 
 
கடந்த ஐம்பதாண்டுகால ஈழத்தின் வரலாற்றின் ஊற்றுக்கண் அந்த வீடுதான் என்பதை மனம் எண்ணிப்பார்க்கிறது. 
 
தங்கவடிவேல் வீட்டிலிருந்து வடக்கு மகாணசபை வரை என்று வரலாறு எழுத மனது துடிக்கிறது. 
 
எப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் நடக்கப்போகிறதென தெரியாமல் தலைவர்களும், பொது மக்களும் கூடியிருந்த முதல் நாளே தமிழர் கூட்டணி உருவாகிய அந்தப் பொன் நாள்.. 
 
அவ்வளவு வரலாற்றுப் புகழ் மிக்க வசதியான வீட்டைக்கட்டி பெருமையுடன் வாழ்ந்த தங்கவடிவேல் யார்.. வல்வையின் வேம்படி - நெடியகாட்டுப்பகுதியில் பஞ்சபாண்டவர்கள் என்று அழைக்கப்பட்ட ஐந்து சகோதரர்களில் மூத்தவர்தான் தங்கவடிவேல். 
 
இவருடைய தந்தையார் பிரபல வர்த்தகர் செல்லத்துரைத் தண்டையல், மனைவியார் பெயர் தங்கரெத்தினம், அவர்களுக்கு ஐந்து ஆண்களும், மூன்று பெண்களுமாக எட்டுப்பிள்ளைகள். 
 
செல்லத்துரைத் தண்டையல் வர்த்தகத்தில் சேர்த்த பணம் சாதாரணமானதல்ல, கொழும்பு கடைகளில் இருந்து யாழ்ப்பாணம் கடைகள் வரை இவர் சேகரித்த சொத்தை இன்றைக்கு யாராலும் சேகரிக்க முடியாது. 
 
இவர் வீட்டின் பின்னால் ஒரு வளவு வண்டிச்சுப்பர் வளவு என்று பெயர், கேப்பை மாடுகள் வளர்ப்பார்கள், அதில் எடுத்த பாலையும் அபினையும் சேர்த்து பாவிக்கும் பழக்கம் இவருக்கு இருந்தது. 
 
அப்போது இவர் வீட்டில் மாலை வேளைகளில் கூட்டமாக இருந்து வேடிக்கையாக பேசி பனை ஓலையை கிழித்து மாடுகளுக்கு போடுவது ஒரு பொழுது போக்கு, ஓலை கிழிக்க அடிக்கடி போவேன்  காரணம் வந்தவர்களுக்கு பால்காய்ச்சி சீனி கலந்து கொடுப்பது இவர் மனைவி தங்கரத்தினத்திற்கு பெரிய மகிழ்ச்சி தரும் செயல். 
 
செல்லத்துரைத் தண்டையலும் எனது அம்மாச்சி ஆச்சிமுத்துவும் கூடப்பிறந்த சகோதரர்கள் இதனால் எனக்கும் அவர்கள் தொடர்பு ஏற்பட்டது. 
 
நான் பிறந்தவுடன் எனக்கு வைத்த பெயர் மோகனதாஸ் ஆனால் செல்லத்துரை தண்டயல் போல வரவேண்டுமென்று எனது தந்தையார் பின்னர் செல்லத்துரை என்று பெயரை மாற்றிப்பதிந்தார். 
 
ஒருவருடைய பெயரையே மாற்றுமளவுக்கு பெயர் பெற்ற சாதனையாளராக அவர் இருந்தார்... காட்டுவளவில் இருந்து வேம்படிவரை வியாபகம் பெற்ற அவருடைய வீட்டு நிலப்பரப்பிற்கு இணையாக வல்வையில் ஒரு பெரிய காணி கிடையாது.. 
 
அதிகம் பேசமாட்டார்.. இரண்டொரு வார்த்தைகள் மட்டும் பேசுவார், பெரும் பொழுது அமைதியாகவே இருப்பார்.. ஆனால் கோடிகள் புரண்டு கொண்டிருக்கும்.. 
 
அவருடைய பணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று பெருப்பித்து இந்திய வியாபாரத்தை சிங்கப்பூர்வரை வியாபகம் செய்யும்படியாக கப்பலில் பயணிக்கும் வியாபாரமாக விருத்தி செய்தவரே தங்கவடிவேல். 
 
அகலமான நெற்றி, உயரமான தோற்றம், பின்நோக்கி வாரிய முடி, என்றும் சிரித்த முகம், தந்தையைப் போலவே அதிகம் பேசமாட்டார், ஆனால் அந்தக்கால கைத்தொலைபேசியில் அவர் இந்தியாவுக்கு பேசும்போது சத்தமாக பேசுவது நாலு வீடுகள் தள்ளிக் கேட்கும். 
 
முன்னும் பின்னுமாக இரண்டு பெரிய வீடுகள், மொட்டை மாடியில் ஊஞ்சால்.. அக்காலத்தே எங்கும் காணமுடியாத மேலே தள்ளினால் திறக்கும் கார் கராஜ், அதற்குள் செவலற் கார். 
 
செவலற் காரா.. உண்மையாகவா..? 
 
வல்வைக்குள் முதல் முதலாக பிரமாண்டமான செவலற்காரை இறக்கியவர் அவரே நீல நிறமான அந்தக்கார் பிரமாண்டமானது, புஸ்பக விமானம் போன்றது, பேச்சாளர் அத்தண்ணா அதன் றைவராக இருந்திருக்கிறார். 
 
அந்த வீட்டை நினைத்தாலே போதும் அப்புஅண்ணா, பாலசுப்பிரமணியம் (பாலர்), இரத்தினவடிவேல் விதானையார், (புளியடி) சண்முகம் என்று ஒரு பெரும் கூட்டமே கண்களில் வந்துவிடும். 
 
யார் இல்லை.. வல்வையே விடிந்தால் அங்குதான் நிற்கும் அந்தளவுக்கு பணம் கரைபுரண்டு ஓடியது.. கூடவே ஒரு சிங்களவர் ஆதர் என்று பெயர் வள்ளங்களின் இயந்திரங்களை திருத்த வந்தவர், அவரோடு பாலசிங்கம் என்ற இன்னொரு யாழ் குடாநாட்டின் புகழ் பெற்ற இயந்திர நிபுணர் என்று எல்லோரும் கூடியிருப்பார்கள். 
 
ஆரம்பகாலத்தில் அவரிடம் இருந்து இந்திய வியாபாரத்திற்கு துணை புரிந்தது சாந்தா வள்ளம்தான், சாம்பல் நிறமானது பின்னணியம் அரைவட்ட வளைவாக இருக்கும் தங்கவடிவேலை கோடீஸ்வரர் என்ற நிலைக்கு நகர்த்தியது அதுதான். 
 
பிற்காலத்தில் திருகோணமலையில் தணிகாசலம் என்பவருக்கு அது விற்கப்பட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.. 
 
வியாபாரத்தில் எழுந்த எழுச்சியால் இவர் குடாநாடு முழுவதும் ஏராளம் சொத்துக்களை வாங்கிக் குவித்தார், பளையில் தோட்டம், பரந்தன் மில், வல்வையில் ஐஸ் தொழிற்சாலை என்று ஐந்து சகோதரர்களும் அடித்துக் கொழுத்தினார்கள். 
 
அவர்கள் எழுச்சியில் இருந்தபோது வந்ததுதான் வல்வை முத்துமாரி அம்மனுக்கு நடைபெற்ற கண்டறியாத் திருவிழா.. இதுவரை யாழ் குடாநாடு சந்தித்திராத பெருவிழா, இனிமேலும் அது வல்வை மக்களால் முடியும் காரியமல்ல.. 
 
அவுட் வாணத்தை மின்விளக்குகளில் செய்து பனை மரத்தில் ஏற்ற பனைமரமே முறிந்துவிழுந்தது அதன் எழுச்சிக்கு ஓர் உதாரணம்.. அந்த எழுச்சியை பொறுக்க முடியாமல் மழை வந்து எல்லாவற்றையும் அழிக்க இரவோடு இரவாக 24 மணி நேரத்தில் மீண்டும் வல்வை எழுந்த அந்தக்காட்சிக்கு இணையான ஒன்றுபட்ட வல்வை அதற்குப் பிறகு இன்றுவரை உருவாகவே இல்லை. 
 
வல்வையில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி வரை அனைவருக்குமே ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு என்று உணர்தியது அவரிடம் குவிந்த பணம். 
 
கொழும்பில் பிரபல வர்த்தகர் சண்முகம், செல்லையா, யாழ்ப்பாணத்தில் ராஜ் கோபால் என்று எத்தனையோ கோடீஸ்வரர்கள் இலங்கை முழுவதும் தளைத்தெழ காரணமாக இருந்தது தங்கவடிவேலும், அவர் தம் சகோதரரும் செய்த வியாபாரமே. 
 
சிறிது காலத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மாடப்புறா.. அதுபோல எம்.ஜி.ஆர் நடித்த பாசம் ஆகிய திரைப்படங்களை இறக்குமதி செய்தவர் தங்கவடிவேலே.. 
 
யாழ்ப்பாணத்தில் மாடப்புறா ஓடியபோது வல்வை மக்களுக்கு இலவசமாகக் காண்பிக்கப்பட்டது, நானும் அம்மாச்சியுடன் போயிருந்தேன். 
 
இன்றுவரை ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது என்ற அந்தப் படத்தின் பாடலை என் மனம் உச்சரித்துக் கொண்டே இருக்கிறது.. 
 
அவ்வளவுடன் நின்றாரா.. இல்லவே இல்லை.. இந்திய வியாபாரத்தை வல்வையில் உள்ள வள்ளங்களால் தொட முடிந்தது ஆனால் சிங்கப்பூர்வரை செல்ல முடியவில்லை.. 
 
இரண்டு அல்லது மூன்று தடவைகள் வள்ளத்தில் சிங்கப்பூர்வரை சென்ற பின் கப்பல் அவசியமாகிறது.. சிவனடியாரின் மூத்த மகன் வடிவேல் சிங்கப்பூருக்கு வள்ளத்தில் சென்று வந்த ஓட்டிகளில் ஒருவர். 
 
அடுத்து குணசுந்தரம் மாஸ்டருடன் இணைந்து இங்கிலாந்து சென்று கப்பலை வாங்கி வந்தார் அன்று அதன் விலை 16 லட்சம் என்று கூறினார்கள் அந்தப்பணம் இன்று ஒரு தனிமனிதனால் சேர்க்க முடியாதது.. 
 
அந்தக் கப்பலுடன் வந்தபோது அவர் இங்கிலாந்தின் புகழ் பெற்ற எட்வேட் மன்னர் என்று போற்றப்பட்டார். 
 
இங்கிலாந்தில் சாதனை படைத்த எட்வேட் மன்னர்கள் 11 பேர் உண்டு, இவர் எந்த எட்வேட் மன்னரால் அழைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை.. பின்னாளில் 11 மன்னர்களையும் படித்தேன்.. கடல்கடந்து வர்த்தக சாம்ராட்சியத்தை உருவாக்கும் பேராற்றல் அவர்களைப் போலவே இவரிடமும் இருந்ததை உணர முடிந்தது. 
 
பதினொரு எட்வேட் மன்னர்களதும் சாதனை வலுவும் வீறாப்பும், முன்பின் யோசியாத துணிச்சலும் இவரிடம் இருந்ததை என்னால் உணர முடிந்தது, இன்றய பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்கள் எட்வேட் மன்னர் வம்சத்தினரே என்றும் உணர முடிகிறது. 
 
கப்பல் சிங்கப்பூரில் இருந்து சரிகை எடுத்துவந்து இந்தியாவில் வழங்கும், அங்கிருந்து ஜவுளி வரும், பின் இலங்கையில் இருந்து கறுவா போன்றன போகும், வர்த்தகம் இந்தியாவை விடுத்து சர்வதேச அளவில் சுழன்றது, இரண்டு தடவைகள் சிங்கப்பூர் பயணம் போனதாக அறிந்தேன். 
 
பின்னர் கொழும்பு கார்பரில் கட்டப்பட்டிருந்தபோது அதை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது, கறுப்பு நிறமான கப்பல் அது பிரமாண்டமான கப்பல் அல்ல.. அன்னபூரணியில் சென்றுவந்த காட்டுவளவு சுப்புமாமா அதன் கறள்களை தட்டி மை பூசிக்கொண்டிருந்தார். 
 
செல்லத்துரை தண்டயல் கொண்டு சென்ற வர்த்தகத்தை அதற்கு அடுத்த தலைமுறைகளில் பத்துத் தலைமுறைகள் வந்தாலும் கொண்டு செல்ல முடியாத உச்சத்திற்கு கொண்டு சென்றிருப்பது தெரிந்தது. 
 
இவருக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் வர காரணம்தான் என்ன.. எனது அம்மாச்சி அடிக்கடி சொல்வது அவர் மனைவி யோகநாயகி பற்றித்தான். 
 
அந்த அம்மா பெயருக்கு ஏற்ப யோகம் கொண்டவர் அவருடைய காதில் ஒரு காய் இருந்ததாகவும் அது ராஜயோகம் தரக்கூடியது என்று சோதிடர் கூறியதாகவும் அது போலவே அவருடைய வாழ்வு உயர்வடை இந்த யோகநாயகியே காரணம் என்றும் கூறினார். 
 
தம்பதியர் இருவருக்கும் வயதில் பெரிய வித்தியாசமில்லை என்றும் கூறியிருந்தார், அது ஒரு முக்கிய விடயமாக அக்காலத்தே பேசப்பட்டிருக்கிறது. 
 
வல்வையில் மட்டுமல்ல இலங்கைத் தீவில் கூட ஒரு மனிதன் அடைய முடியாத உச்சங்களை எல்லாம் அவர் அடைந்தார்.. அதை அளந்து பெருமைப்படுத்த அன்று எவராலும் முடியவில்லை. 
 
அவர் வாழ்ந்து எழுச்சியுற்ற காலத்திலேயே அதை ஒரு நூலாக கொண்டுவர யாருக்குமே சிந்தனை வரவில்லை.. அதுதான் வல்வையின் பெருந்தவறாகும். 
 
வல்வையில் எழுச்சி பெற்றிருந்த ஒவ்வொருவர் வரலாற்றையும் உடனுக்குடன் பதிவு செய்ய அங்கு எழுத்தாளர்கள் இருக்கவில்லை.. இது பெரிய குறைபாடு. 
 
செல்லத்துரைத் தண்டயலுக்கு தங்கவடிவேல், குமரகுரு, யோககுரு, ஞானகுரு, மௌனகுரு என்று ஐந்து ஆண்களும், தங்கமணி, தவமணி, குட்டிமணி என்ற மூன்று மகள்களும் இருந்தாக கூறியிருந்தேன் அல்லவா.. அதில் ஒரு சிறிய மாற்றமும் உண்டு.. 
 
எனது அம்மாச்சி ஆச்சிமுத்துவிடம் ஒரு திறமை இருந்தது, வல்வைக்கு முதலில் வந்த கடற் பெருக்கு முதல் அவர் வாழ்ந்த காலம் வரை செவிவழியாக அவர் கேட்டு ���ைத்திருந்த சுமார் நூறாண்டு கால தகவல்களை சிறு வயதிலேயே செவிவழி கதைiயாக எனக்குக் கூறிவிட்டு மறைந்துவிட்டார். 
 
அத்தருணம் ஒரு கதை கூறினார் தங்கவடிவேலுக்கு முன்னதாக செல்லத்துரை தண்டயலுக்கு ஒரு மகன் பிறந்ததாகவும் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையாருக்கு பிள்ளையார் சிலையை செல்லத்துரை தண்டயல் செய்து கொடுத்தாகவும், பிள்ளையாரின் கண்கள் திறந்தபோது அந்தப் பிள்ளையின் இரண்டு கண்களாலும் இரத்தம் வடிந்து, வண்டியில் வைத்தியசாலை கொண்டு சென்ற போது பிள்ளை மரணமடைந்தாகவும் கூறியிருந்தார். 
 
இதை நான் நம்பவில்லை.. பிற்காலத்தில் கடுமையான முற்போக்கு சிந்தனைகளால் அடிபட்டு போன நான் அதை தீர மறக்க முயன்றேன் முடியவில்லை.. உண்மையா பொய்யா எனக்கு தெரியவில்லை.. ஆனால் அந்தத் தகவலும் என்னுள் கிடக்கிறது. 
 
தவறானால் மன்னித்து விடுங்கள் ஐதீகக் கதைகள் இப்படி உருவாவதும் உண்டல்லவா.. அப்படி எடுத்துக் கொண்டேன்.. 
 
எவ்வளவுதான் ஒரு மனிதர் உச்சம் சென்றாலும் அவருக்கு வீழ்ச்சியும் வரும்.. அதை அவர் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.. 
 
தங்கவடிவேல் என்ற தாய் தங்கரத்தினத்தால் வந்த பெயருக்கு ஏற்ப அவருடைய வீழ்ச்சியும் தங்கத்தில் இருந்துஆரம்பிக்கிறது.. 
 
வல்வை கொத்தியாலில் உள்ள வியாபாரியார் வீட்டு சுவரில் வைத்து கட்டியிருந்த அவருடைய பெரும் சொத்தான தங்கக்கட்டிகள் போலீசாரால் ஒரு நாள் கண்டுபிடிக்கப்படுகிறது.. இழப்போ இழப்பு பேரிழப்பு.. மீள முடியாத இழப்பு... 
 
சுவருக்குள் வைத்துக் கட்டிய தங்கக் கட்டிகள் உங்களால் நம்பத்தான் முடிகிறதா.. ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மை.. 
 
அவர் வாங்கிய கப்பலில் குறைபாடு இருந்த காரணத்தால் தொடர்ந்து ஓட முடியாத நிலை இரண்டாவது அடி.. 
 
அதைத் தொடர்ந்து சகோதரர்கள் ஒன்றாக வர்த்தகம் செய்ய முடியாத வேதனையான நிலை வருகிறது.. தவிர்க்க முடியவில்லை..
 
கடைசியாக அவர் கையில் எடுத்த ஆயுதம் சினிமா.. ஆம் வல்வையில் தனது அதிர்ஷ்டக்கார மனைவியின் பெயரில் யோகநாயகி என்ற சினிமா தியேட்டரை திறக்கிறார்... 
 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் உதயமான வீட்டுக்கு சொந்தக்காரர்.. 
 
செவலற் காரை யாழ் மண்ணில் ஓடவிட்டவர்.. 
 
இங்கிலாந்தில் இருந்து கப்பலை இறக்கியவர்.. 
 
நாம் அன்னபூரணியை அமெரிக்கா கொண்டு சென்ற பெருமையை பேசிக்கொண்டிருந்தபோது இங்கிலாந்தில் இருந்து கப்பலை விலைக்கு வாங்கி வந்து நம்மை அசத்தியவர். 
 
இந்தியாவில் உள்ள பெருந் திரை நட்சத்திரங்கள் எல்லாம் இவரின் நண்பர்கள் நடிகர் ஜெமினி கணேசன், சாவித்திரி இருவரும் இவர் சகோதரர் ஞானகுரு வீடு வந்து போயிருக்கிறார்கள். 
 
வல்வை வரலாற்றில் அரை நூற்றாண்டு பொற்காலத்தை ஏற்படுத்தியவர் இங்கிலாந்தின் எட்வேட் மன்னர் போல புகழ் பெற்றவர்.. 
 
இப்படி இவர் பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.. 
 
எப்படி மனிதனால் தனது ஏறு முகத்தை தடுக்க முடியாதோ அதுபோல இறங்கு முகத்தையும் தடுக்க முடியாது என்பார்கள் அதுபோல இவரும் எதிரான சூழ்நிலைகளை சந்திக்கிறார்.. வீழ்ச்சிகள் தொடர்கின்றன... திடீரென ஒரு நாள் அவருடைய மரணச் செய்தி படலையில் ஓங்கி அறைகிறது.. 
 
தலையில் மன்னர் போல முடி தரித்து அவருடைய உடலம் பூந்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஊறணி சுடலை போனதை பார்த்துக் கொண்டு சிலை போல நிற்கிறேன்.. 
 
கண்களில் நீர்... 
 
இப்படியொரு அதிர்ஷ்டகரமான மனிதன் இந்தப் புவியில் பிறக்கத்தான் முடியுமா.. மனதைக் கேட்டபடியே அவருடைய இறுதி யாத்திரையை பார்க்கிறேன்.. 
 
அற்ற நீர் குளத்தின் அறு நீர் பறவைகளாக பறந்த பறவைகள் எல்லாம் கூடி நடந்ததைப் பார்க்கிறேன்.. 
 
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது.. 
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது... 
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது.. 
 
அவருடைய மாடப்புறா திரைப்படத்தின் பாடல் மனத்திரையில் போகிறது.. 
 
ஆம்..! அவருடைய பெருமை ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது..! 
 
புரிந்திருந்தால் அவருடைய பெயரில் தனியான நூல் ஒன்று நமது கைக்குக் கிடைத்திருக்குமே..? 
 
இந்த வரலாற்றுக்கு சாட்சி யார்..? 
 
இதோ இத்தனை ஆண்டுகளாக அவரை என் உள்ளத்தில் சுமக்கும் என் எழுத்துக்களும் அவர் வாழ்வுக்கு சாட்சியங்கள்தான். 
 
இல்லாவிட்டால் அந்த இயற்கை அறியாப் பருவத்தில் இருந்து அன்றாடம் அவர் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றிருக்காது.. 
 
அடுத்த வாரம்.. தூக்குக் கூலி தந்த லெட்சுமிகாந்தன்... 
 
கி.செல்லத்துரை 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
k.S.Thurai (Denmark) Posted Date: May 08, 2016 at 00:19 
என் அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய திரு. யோகசபாபதிப்பிள்ளை அண்ணாவுக்கு நன்றிகள்... தங்கள் மீது நான் பொறாமையில் இருந்த காலம் இன்றும் உண்டு.. பாதுகை நாடகத்தை நாம் வெல்ல முடியாமல் தடுமாற காரணம் வல்வை ஹெலியன்ஸ் நண்பர்களின் அதி சிறந்த நடிப்பு, செல்வராஜா மாஸ்டர், அனந்தண்ணாவின் இயக்கம், பிரமாண்டமான அரங்கங்கள் மட்டுமல்ல தங்களின் பாடல்களே அதன் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய புள்ளியாக இருந்தது..

சோதரனை தேடியவன் போகிறான்.. பரதன் குகன் முத்துச்சாமியுடன் படகில் போகும் பாடல்..

மந்தரையின் போதனையால்.. கைகேகி கிருஷ்ணமூர்த்தி கீழே விழுந்தபோது..

பாதுகையே துணையாகும் என்னாளும் உன் பாதுகையே துணையாகும்.. தலையில் பாதுகையுடன் அண்ணன் ரகுபதி.. ராம லட்சுமணர்களாக அண்ணன் மனோகரன், அவர் தம்பி பாஸ்கரன்.. மந்திரியாக குலசிங்கராஜா.. பின்னால் சுவீந்திரன்.. சீதையாக ரகுபதி

பாடல்களைப்பாடி தயாளனே சீதா ராமா சாந்த மூர்த்தியே ராமா.. என்று நீங்கள் இனிய குரலால் பஞ்ச் கொடுக்கும்போது எம்மால் அதை நினைத்தும் பார்க்க முடியாதிருந்தது.

அது சாதனை சரித்திரம்.. வல்வையின் மகத்தான பெருமை..

உங்கள் பாடல்களை அப்படியே மனப்பாடமாக பாடமாக்கி.. 20 வருடங்களுக்கு முன்னரே அதை பாடி ஒரு கசட்டில் பதிவு செய்து, எனது பிள்ளைகளுக்கும் குடும்பத்தினர்க்கும் போட்டுக்காட்டி, இப்படியொரு சிறந்த பாடகர் நமது வல்வை மண்ணில் இருந்தார் என்று உற்சாகப்படுத்தினேன்.

பின்னாளில் வல்வை மாதா தந்த மாபெரும் கலைஞன் அண்ணன் குமார செல்வனிடம் பாதுகை நாடகப்பிரதியை வாங்கி கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் கற்பகவல்லி பாடல் புகழ் வீரமணி ஐயா, முல்லைமணி, கவிஞர் முருகையன் முன்னாள் மேடையேற்றி பல்கலைக்கழக விரிவுரையாளரும் எனது நண்பனுமான இசைப்புலவர் நவரத்தினத்தை வைத்து உங்களைப் போல பாடச் செய்து சிறந்த நடிகன் விருது பெற்றேன்..

எனது நாடக வரலாறு என்ற கட்டுரைத்தொடரில் இது உள்ளது..

மேலும் வல்வையில் எல்லாம் உண்டு பாடகர்களும் இசையமைப்பாளரும் மருந்துக்கும் இல்லை என்று எனது மகனை இசையமைப்பாளராகவும், நடிகராகவும், மகளை பாடகியாகவும் தயார் செய்துள்ளேன்..

நீங்கள் தந்த தாக்கம் அது..வல்வைக்கு இசைக்கலைஞர்கள் வேண்டும் என்ற எண்ணம்..

உங்களைப்பற்றியும்.. பாடகர் காட்டுவளவு ஆறுமுகசாமி பற்றியும் விரிவாக எழுத இருக்கிறேன்.. வல்வையின் பாடல் சரித்திரத்திற்கு அது அவசியமாகிறது..

உங்களுடைய ஒவ்வொரு அசைவும் மனப்பதிவாக இருக்கிறது.. வரும்.. வாழ்த்துக்கள்..

சரித்திரத்தை படித்து பாடமாக்கியதால் கடந்த 50 வருடங்களில் நான் பார்த்த ஒவ்வொரு நொடியும் மறக்காமல் இருக்கிறது..

Yogasabapathy (Sri Lanka) Posted Date: May 07, 2016 at 05:52 
மிக மிக அருமையான மனப் பதிவுகள். இவை என்னையும் எனது 10 வயதுப் பராயத்துக்குக் கொண்டு போயுள்ளன. தினமும் மாலை வேளையில் அந்தப்படகுக் கார் எமது வீடு (சிதம்பரா சமீபம்) தாண்டி ஊரிக்காடு சோடாக்கடை முன்பு கடற்கரைக்குப் போகும். அங்கு நண்பர்களுடன் அளவளாவி, சீட்டுக்கச்சேரி செய்து வருவார்.

ஆனாலும் செல்லத்துரை மாஸ்டர் மாதிரி இவ்வளவு விடயங்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லையே என ஏக்கமும் அவர் மீது பொறாமையும் கூட வருகிறது.

வாழ்த்துக்கள்! இன்னும் நிரம்ப எதிர்பார்க்கிறேன்.
தி. யோகசபாபதிப்பிள்ளை, கொழும்பு


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
கரப்பந்தாட்டப் போட்டி - ரேவடி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2024 (புதன்கிழமை)
வல்வை சிவன் கோவில் தீர்த்தத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
VEDA மார்கழி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை சிவன் கோவில் பஞ்சரத பவனி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2024 (சனிக்கிழமை)
முன்பள்ளியில் பொதுசுகாதார பரிசோதகரால் விளக்கமளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை சிவன் கல்யாணத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
பூச்சிய கழிவு தின செயற்றிட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கனகலிங்கம் இந்திரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2024 (திங்கட்கிழமை)
VEDA கார்த்திகை மாத அறிக்ககை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வெதுப்பகத்துக்கு சீல் வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2024 (சனிக்கிழமை)
புகையிரத ஆசன முன்பதிவு Online இல் மட்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
ரேவடி கடற்கரையோரம், மீன் சந்தைப் பகுதி சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பு - அமரர் அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2024 (புதன்கிழமை)
வல்வை பெண்கள் கரப்பந்து தொடர் - Valvai Black Tigers வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முன்பள்ளிகளிற்கு வர்ணக்கழிவுக் கூடைகள் விநியோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
விளையாட்டுப் போட்டியில் பீரங்கி வண்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
கடற்கரை கபடி போட்டியில் சைனிங்ஸ் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
மனநல மட்டத்தில் (MHQ) 2வது மிக உயர்ந்த தரவரிசையில் இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
சிதம்பரக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
ஆங்கில கற்கை நெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627
28
2930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai