ஊர்பிரமுகர் ஒருவரின் மரண ஊர்வலம் மேற்கிலிருந்து கிழக்காக மெள்ள நகர்கிறது. முன்னே பட்டாசு வெடிச்சத்தம் .. பின்னே கூட்டுப்பறைமேள முழக்கம் சந்திக்குச் சந்தி ஊர்வலம் நிறுத்தப்பட்டு பறைச்சமர் முடித்து புறப்படுகிறது ஊர்வலம்.
பாவம் படுகைப் புண் வைத்துப் பல மாதங்கள் கடந்து ... எப்போது போவார். என உள்ளூர் வெளியூர் சாத்திரகாரரிடம் சாத்திரம் பார்த்து “இரண்டு மூன்று நாட்கள் இழுக்கும் என் ஒருவர் சொல்ல, 48 மணி நேர கெடு கொடுக்க அடுத்தவர் இன்னும் ஆறு மணித்தியாலம் மட்டுமே தாக்குப் பிடிக்கும் .. நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கோ என் அருகிலிருந்தவரிடம் இறுத்தியிட்டுக் கூற அப்ப இன்னும் இழுக்கும் போலை...” என்று படுக்கைக்கு அருகிலிருந்தவர்கள் சப்புக் கொட்டி, அடுத்த அறைக்குச் சென்று இடியப்பத்துடன் முட்டைப் பாக்கறியும் சேர்த்து ஒரு பிடி பிடித்து ஏப்பம் விட்டபடி, ஊருத்துளாவாரம் பேசிய அனைவரதும் எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது.
வெளியூரிலிருந்து வந்திருந்த ஆஸ்திக்கு ஒரு பெண்ணும், கொள்ளிக்கு ஒரு ஆணுமாக ஆசையோடு வளர்த்தெடுத்த மகளும் – மகனும் வந்து பன்னிரண்டு நாட்கள் கடந்துவிட்டபோதும் “ இன்னும் எதுவும் நடக்கவில்லையே ..எனச் சோர்ந்து இன்னும் உள்ள லீவு நாட்களையும், பிள்ளைகளின் பாடசாலை விடுமுறை நாட்களையும் விரல் விட்டு எண்ணி அங்கலாய்ப்போடு அளவளாவியிருந்த வேளை அனைவரும் எதிர்பார்த்த “அது” நடந்துவிட்டது.
மரணித்த மனுஷன் இடம் –தெரு, கிழக்கு – மேற்கு ,வடக்குத் – தெற்கு எனப் பேதமெதுவுமின்றி தன்னாலான எல்லா நல்ல பணிகளையும் ஊருக்கு ஆற்றிய பெருமகன் ஆவார். இளவட்டங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரதும் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய பெரிய மனுஷனாகப் பவனி வந்த அவர், படுத்த படுக்கையாகி பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் “இண்டைக்கோ .. நாளைக்கோ “ என இழுத்துக் கொண்டிருந்தவர் ஒருவாறு அடங்கிப் போனார்.
கடவுளப்பா பெயரில் இருக்கும் “இறுதியாத்திரா ரதம்” அப்போதில்லை . “விசயம்” முடிந்தவுடன் முதல் வேலையாகக் கடவுள் அப்பாவுக்கு சொல்லி அனுப்ப தனது நாளாந்த கடமைகளை முடித்துப் பொறுமையாக வந்து, கட்டி முடித்த கட்டிலிலோதான் இந்தப் பெரிய மனுஷன் இப்போது பயணிக்கின்றார்.
பிளாஸ்ரிக் சோடாப் போத்தல்களில் பாதி சோடாவுடன் –பாதி தென்பூட்டும் பானமும் கலந்து பறை மேளக்காரருக்கு அடிக்கடி வழங்கப்பட்டது. உற்சாகம் தலைக்கேற சந்திகளில் பறைச்சமா களைகட்டி நின்றது.
“இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு சாவா...”
“ பாவம்...மனுஷன் நல்லாக் கஷ்டப்பட்டுது...”
“இவருக்கே இப்படியேண்டால் நமக்கெல்லாம் என்ன நடக்க போகுது..”
இவ்வாறாக மேற்கிலிருந்து கிழக்காக சுடலை நோக்கி ஊர்வலம் நகர நகர ஊர்வலத்தில் வந்தவர்கள் தமது விமர்சன வார்த்தைகளை உதித்தபடி மெள்ள நடந்தனர்.
சே...சே.. மனுஷனுக்கு இப்படி ஒரு முடிவு வரக்கூடாதப்பா..”
இத்தனையும் செய்த மனுஷனுக்கே இந்தச் சாவெண்டால் ... நமக்கெல்லாம் ... வேண்டாமப்பா .. தப்பே பண்ணக்கூடாது”
வீட்டிற்கும் நாட்டிற்கும் உதவாதவர்கள்கூட தம் வாயால் தத்துவ முத்துக்களை உதிர்த்தது ஆச்சரியமாக இருந்தது.
இறுதி ஊர்வலம் மதவடியில் தரித்து நின்றது. இப்பொழுதுதான் நமது கதாநாயகன் அரங்கத்தில் நுழைகிறார். மதவடியில் –வீதியின் வடக்காக மூன்றாவது வீட்டுக்குரியவர் – எல்லோராலும் “அப்பா” என அன்பாக அழைக்கப்படும் “இராமசாமி சிவசம்பு” ஆவார். மேவி இழந்த நரைத்த கேசம், மேலங்கி இல்லாத கருமையான மேனி, கண்ணிலே கண்ணாடி ... இடுப்பிலே கன்னாடிக்கூடு .. கரைகள் ஏதுமற்ற தூய வெண்மை நிறமான வேட்டியும் சால்வையும் .. சால்வை எப்போதும் சுக்கிக் கட்டி வேட்டிக்கு மேலாக இடுப்பில் தொங்கியபடி இருக்கும். இந்நாளைய நீண்ட - மான் மார்க் கறுப்புக் குடை – எப்போதும் அவரது இடக்கையில் தொங்கியபடி இருக்கும். அவர் செட் அணிந்து வெளியே யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். மாறுபாடாக இந்த சுத்தமான அலங்காரத்தில் சிவசம்பு அப்பா கோவிலுக்கு போகிறாரா ... கல்யாணவீட்டிற்குப் போகிறாரா ... சாவு வீட்டுக்குப் போகிறாரா ... என்பதை யாரும் ஊகித்துச் சொல்லிவிட முடியாது. அப்படி யாராவது சரியாக சொல்லிவிட்டால் சொல்பவருக்கு பரிசே வழங்கலாம்.
ஊரில் தனக்கு அறிமுகமானவர்களின் செத்த வீடுகளுக்குத் தவறாது பிரசன்னமாகிவிடுவார். தந்து மனநிறைவுக்காக – ஆத்மீக பணியாக இறுதி ஊர்வலத்தில் பட்டினத்தார் பாடல்களைப் பாடுவது அவரது தலையாயபணி. அரக்கப் பரக்க ஓடிவந்து கட்டிலை அண்மித்தவர் ஒரு நொடியும் தாமதிக்காமல் பாடலை ஆரம்பிக்கின்றார். அந்தப் பறை மேள இரைச்சலுக்கு மத்தியிலும் “அப்பா”வின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ண
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேச...” என ஆரம்பித்த பட்டினத்தார் பாடலை “செய்கின்ற பூசைஎவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே” எனப் பாடி முடித்ததும் – எவ்வித தாமதமுமின்றி என் செயலாவது யாதொன்றுமில்லை யினித் தெய்வமே ..”என ஆரம்பித்துவிடுவார். முன்னே – பின்னே சற்றுத்தள்ளி ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் கூட, இவரது கணீர்ரென்ற குரலி கட்டுண்டு இவருக்கு முன்னும் பின்னுமாக நடந்து சொல்கின்றனர்.
“பாவம்...படுக்கைப் புண்ணெல்லாம் போட்டு மனுஷன் படாதபாடு பட்டுது...
இந்த அளவில் புறப்பட்டதே பெருங்காரியம்” என ஒருவர் சொல்ல, மற்றவர் “தவறே செய்யாத இந்த மனுஷனை ஆண்டவன் இப்படி தண்டிக்கக்கூடாது ..”என்று ஆண்டவன் மேல் பழியைப் போட, பின்னால் வந்து கொண்டிருந்தவர்.
“போப்பா .. இண்டைக்கு மனுஷன் செய்ததெல்லாம் நல்ல காரியந்தான் ... ஆனா....போன பிறவியிலை என்னென்ன பாவம் செய்தாரோ ... என நியாயம் சொல்ல
அப்படியெண்டா நாம் இண்டைக்குச் செய்கிற காரியம் நாளைக்கு வந்து சூழுமோ ... பயமாயிருக்கப்பா .. தப்பே பண்ணக்கூடதப்பா....”
மெள்ள மெள்ள நகர்ந்து வந்த ஊர்வலம் சி.கு ஒழுங்கைத் தலைப்புக்கு (நெடியகாடு சங்கக் கடை இருக்கும் இடம்) அண்மையிலுள்ள அரசமரத்தடியில் தரித்து நிற்கிறது. இது ஒரு பிரதான தரிப்பிடம். பிள்ளையார் வீதியில் பறை அடிப்பது வழமை யில்லாததால் உச்சபறைச் சமா அரசமரத்தடியில் நடைபெறுகிறது. பறை நிறுத்தப்பட்டதும் நமது கதாநாயகன் சிவசம்பு அப்பா உசாராகிவிடுவார்.
பட்டினத்தார் தனது தாயாரின் உடலுக்குத் தீமூட்டியபோது பாடிய பாடல்கள் இந்த அமைதிச்சூழலில் ஆரம்பிக்கிறார் அப்பா.
“ஜயிரண்டு திங்களா லஞ்கமெலா நொந்து பெற்று ... என ஆரம்பித்த பாடல்
“கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி” என அப்பா பாடி முடிக்கவும் கணபதி பதிப்பகத்திற்கு அருகேயுள்ள மதவு வந்துவிடுகிறது.
“முந்தித் தவமிருந்து முன்னூறு நாட்சுமந்து ... என ஆரம்பிக்கும் சிவசம்பு அப்பாவின் அடுத்த பாடலை ச் சரியாகக் கேட்கமுடியாதபடி – மதவு தாண்டியதும் – மீண்டும் பறைச் சத்தம் ஆரம்பமாகி உச்சம் தொட்டு நிற்கிறது. அப்பா எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல்,
வட்டிலிலும் தொட்டியிலும் மார்மேலும் தோள்மேலும் என்றும்,
“அரிசியோ நானிடுவே னாத்தா உனக்கு ...
என்று பாடி முடியவும் , ஊர்வலம் ஊறணி வைத்தியசாலையை அண்மித்ததும் மீண்டும் பறைமேளம் நிறுத்தப்படுகிறது. பட்டாசு கொளுத்தும் இளவட்டங்கள் கூட தீர்த்தமடத்தருகே சென்றுவிட்டதால் சிவசம்பு அப்பாவின் குரல் தனிக்குரலாக ஒலிக்கிறது.
சுடலை நெருங்கி வர வர – ஊர்வலத்தில் வந்தவர்கள் தத்தமது எண்ணத்திற்கு ஏற்ப “சடலை ஞானம்” பேசியபடி முன்னேற சுடலை மதவு வந்துவிடுகிறது.
பறை மேளம் தொடர்ந்து முழங்குகிறது. சிவசம்பு அப்பாவின் பட்டினத்தார் பாடலும் தொடர்கிறது.
உயிரற்ற அந்த உத்தமனின் உடல் சிதையில் வைக்கப்பட்டு குடம் உடைக்கும் நேரம். சிதையின் கால்மாட்டருகே நின்றபடி சிவசம்பு அப்பா,
“முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே ...
என ஆரம்பித்து, சரியாக கொல்லி வைக்கும் நேரத்தில்,
“வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பலாகுதே
பாவியே னையகோ – மாகக்
குருவி பறவாமற் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை”
எனப் பாடி முடிக்கவும், சிதையில் மூட்டப்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.
“சுடலை ஞானம்” பேசிய அனைவரும் மீண்டும் மேற்கு நோக்கி நடக்க – நடக்க எறிய ஞானம் மெள்ள மெள்ள இறங்கு நிலைக்கு வருகிறது. நெடியகாடு தெணிக்கிணற்றில் சில பேரும், சந்தியில் இருந்த சூத்திரக் கிணற்றில் (இன்று மூன்று படி வரிசைகளுடன் வெளிச்சவீடு கீறப்பட்டுள்ள இடம்) சில பேரும், அம்மன் கோவிலடி மணலுக் கிணற்றில் பல பேரும், தலையிலே தண்ணீரை ஊற்றிக்கொள்ள சுடலையும் ஞானமும் வெவ்வேறாகி பழையபடி பூச்சிய நிலைக்கு வருகிறது.
சிவசம்பு அப்பாவும் – இதுவரையும் மடித்தபடி இடது கையில் தொங்கிய குடையை விரித்துப் பிடித்தபடி யாருடனும் எதுவும் பேசாமல் மேற்கு நோக்கி விரைந்து நடக்கிறார்.
( இந்த ஆக்கத்தில் வரும் சிவசம்பு அப்பாவின் பாத்திரம் கற்பனை அல்ல)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.