காணாமற்போன மற்றும் திருடப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் முறையிடுவதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் விசேட இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
www.ineed.police.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த இணையதளத்தின் வழியாக தங்களது விபரங்களை பதிவு செய்து அதனூடாக தங்களது காணாமல் போன அல்லது களவாடப்பட்டு கையடக்க தொலைபேசிகளின் விபரங்களை வழங்குவதன் மூலம் அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்;.
முறைப்பாட்டை மேற்கொண்ட வேளையிலிருந்து தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவின் ஊடாக குறித்த தொலைபேசி பயன்படுத்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்துடன் (Mobitel, Dialog, Airtel, Etisalat, Hutch) இணைந்து மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகளை அதன் இறுதிவரை கணனி வலையமைப்பின் ஊடாக இற்றைப்படுத்தப்படும் (Update). இதன் காரணமாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டின் நிலை தொடர்பில் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.
அத்துடன் எவரேனும் ஒருவர் கையடக்க தொலைபேசியொன்றை கொள்வனவு செய்யும்போது குறித்த தொலைபேசி போலியானதா என்பது தொடர்பில் குறித்த கணினி வலையமைப்பின் ஊடாக பரீட்சிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 24 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதுடன், நாளாந்தம் 800 முதல் 1000 கையடக்கத் தொலைபேசிகள் காணாமற்போவதாக முறைப்பாடுகள் பதிவாவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் கிடைக்கும் முறைப்பாடுகள், அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.