யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழக "இரு காலைகளும் ஒரு பின்னிரவும்"
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் கவிஞர் சேரன் அவர்களின் கவிதையினை தழுவி “இரு காலைகளும் ஒரு பின்னிரவும்‘’’ எனும் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் நடிகர்களாக ம.சுலக்ஷன், இ.மகிந்தன், போன்றோர் பங்குபற்றினர். இன் நாடகத்திற்கான காட்சி வடிவமைப்பினை ம. சுலக்ஷன், இ.மகிந்தன் ஆகியோரும், ஒளி விதானிப்பு மற்றும் நெறியாள்கையினை தி தர்மலிங்கம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கவிதை வளி நாடகமானது பலரது உள்ளக்கிடக்கைகளைக் கிளர்ந்தெழச்செய்ததோடு மட்டுமன்றி பார்ப்போரை ஆழ்மன ஞாபகங்களுக்குள் இட்டுச்சென்று அவர்களை குணமாக்கியதாகவும் அமையப்பெற்றதாக ஆற்றுகையின் பின்னான கலந்துரையாடலின் போது பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறான ஆற்றுகைகள் ஈழத் தமிழர்களின் இன்றைய தேவையாகவும் உள்ளதாக உளவளத்துறைசார் நிபுணரும் யாழ் பல்கலைக் கழக கல்வியியல் துறை விரிவுரையாளருமான ம.சத்தியகுமார் தெரிவித்தார். தொடர்ந்து, பல்கலை கழக மற்றும் நாடகம் சார் ஆர்வலர்கள் தமக்கான அரங்கியல் ஆர்வத்தையும் இத்தகைய நாடகங்களில் நடிக்கும் விருப்பத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து நாடக செயல்முறைகளினூடாக நல்ல சமூக உருவாக்கத்தையும் அழகியல் அனுபவத்தையும் ஏற்படுத்துவதற்கான அரங்கக் கலைக்கழகத்தினரின் செயற்பாடுகள் தொடரும் என்றும் கலந்துரையாடலின் இறுதியில் அரங்கக் கலைக் கழக இயக்குனர் குறிப்பிட்டார்.
மேலும் ஈழத்தமிழ் அரங்கில் தொழில் முறை சார் அரங்கப் பாரம்பரியத்தினை கட்டியெழுப்பும் அரங்கக் கலைக் கழகத்தின் முன்னெடுப்புக்கள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும், அரங்கை தொழிலாக கொண்ட அரங்கக் கலை கலைஞர்களின் செயற்பாடுகள் பல அரங்கவியலாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.