லண்டனில் நடைபெற்ற வல்வை உதயசூரியன் கழகத்தின் ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2018 (வெள்ளிக்கிழமை)
ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வல்வை உதயசூரியன் கழகத்தின் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது. மூத்த அங்கத்தவர்கள் மாக்கி அடிப்பதற்கும் கூழ் காய்ச்சுவதற்காகவும் காலை 10 மணிக்கே மைதானத்திற்கு வந்து வேலையை ஆரம்பித்து விட்டார்கள் .
12.30 மணிக்கு குடும்பங்கள் வரத்தொடங்க கூழ் ரெடியாகி விட்டது. குழந்தைகளுக்கு சிக்கின் நக்கட்சும் பிரைசும், தயாராக இருந்தது. காலநிலை வெப்பம் சற்று அதிகமாக இருந்ததால் பெரிய பரலில் சர்பத் கரைத்து ஒருபக்கம் தயாராக இருக்க ஐஸ்பெட்டியினுள் நெல்லி, நெக்ரோ , கோலா என்று சோடா வகைகளும் பிள்ளைகளுடைய யூஸ் பெட்டிகளும் நிரம்பி இருந்தன. சாப்பாட்டு மேசைகளில் ரோல், பற்றிஸ், வடை சம்பல், கேக், கேசரி, லட்டு, சிப்ஸ் என்று எல்லா வகையான சாப்பாடுகளும் அடுக்கப்பட்டிருந்தன. கழக அங்கத்தவர்கள் குடும்பங்களாக வந்து கூழ் மற்றும் உணவுகளை எடுத்துக்கொண்டு மரநிழல்களில் இருந்து வயிறு நிறைய ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
சுமார் 2.30 மணியளவில் குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் ஆரம்பித்தன. ஓட்டம், பழம் பொறுக்குதல், பந்தெறிதல் போன்ற விளையாட்டுக்களுடன் இந்த வருடம் பையன்களுக்கு பனால்டி சுட் விளையாட்டுக்களும் நடைபெற்றது. விளையாட்டில் பங்குபற்றிய அனைத்துக் குழந்தைகளுக்கும் உதயசூரியன் கழக சின்னம் பதித்த பதக்கங்கள் வழங்கப்பட்டன.
குழந்தைகள் விளையாட்டைத் தொடர்ந்து பெரியவர்களுக்கான விளையாட்டுக்கள் நடைபெற்றன. வித்தியாசமாக ஆண்களுக்கு நடைபெற்ற சங்கீதக்கதிரையில் 30 ஆண்கள் பங்குபற்றினர். ஆண்களுக்குப் போட்டியாக 40 பெண்கள் சங்கீதக்கதிரை விளையாட்டில் கலந்து கொண்டனர். பாடும் பந்து விளையாட்டில் சிறிது மாற்றம் செய்து தாயும் பிள்ளைகளும் சோடியாக விளையாடினார்கள். இந்த பாடும் பந்து மெகா விளையாட்டாக 80 பேர் கலந்து கொண்டது சிறப்பு. விளையாட்டுக்கள் முடியும் தறுவாயில் கோழிப்புக்கையும் புறூட்சலாட் வித் ஐஸ்கிறீமும் தயாராகி விட்டன. இரவுச் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு அங்கத்தவர்கள் வீடு திரும்ப ஆரம்பித்தனர்.
போகும் போது பல அங்கத்தவர்கள் முக்கியமாக ஒரு விடயத்தை சொல்லி சென்றார்கள் . நன்றி சொல்லியிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பீர்கள் அதையும் சொன்னார்கள். அதைவிட முக்கியமாக உதயசூரியன் கழகத்தின் Xmas party எப்போது என்ற திகதியை முன்பே அறிவிக்கும்படி சொல்லி சென்றார்கள் .
நாம் ஊரில் ஒரு வீட்டிற்கோ, சபைக்கோ செல்லும் போது கட்டாயம் ஏதாவது கொண்டு செல்வோம் எமது விருந்தோம்பல் கலாச்சாரம் இங்கும் தொடர்கின்றது. அந்த வகையில் ஒன்றுகூடலுக்கு உணவுப் பொருட்கள் எடுத்து வந்திருந்த கழக அங்கத்தவர்கள் அனைவருக்கும், மைதானத்தில் உதவி புரிந்த அங்கத்தவர்களுக்கும் திரு.நவஜீவன், திரு சங்கர், திரு, கணேஸ் ஆகியோர் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
லண்டனில் வல்வை உதயசூரியன் கழகத்தின் ஒன்றுகூடல் மிகவும் குதூகலத்துடனேயே நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.