தீருவில் தூபி விவகாரம் - வழக்கு விசாரணை 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2018 (சனிக்கிழமை)
கடந்த 05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி அமைந்திருந்த வல்வெட்டித்துறை தீருவில் வெளியில், பன்னிருவர் ஞாபகார்த்த தூபிக்கான அடிக்கல் நாட்ட நேற்று வல்வை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் முயற்சி எடுக்கப்பட்டது.
குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் தவிர்ந்த எவருக்கும் தூபி அமைக்கக்கூடாது என நகரசபையின் (ஈ.பி.டி.பி நீங்கலான) உறுப்பினர்களாலும் பொது மக்கள் சிலராலும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.
அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு வந்திருந்த மதத் தலைவர்கள் இருவரையும் அங்கிருந்து செல்லுமாறு இவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து மதத் தலைவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இவ்வாறு குழப்பம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வல்வெட்டித்துறை போலீசார் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்று விடுத்த அழைப்பாணையைக் காண்பித்தனர்.
ஆனால் பொலிஸாரிடம் இருந்து அழைப்பாணையை வாங்க வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் மறுத்துவிட்டார். பொலிஸார் அதனை வாசித்தபோது நகரசபைத் தலைவர் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் காதை மூடிக்கொண்டனர். இதனையடுத்து நகரசபைத் தவிசாளர் உள்ளிட்டவர்களை மதியம் 12 மணிக்கு நீதிமன்றம் வருமாறு கூறிவிட்டு பொலிஸார் அங்கிருந்து சென்றனர். இதனையடுத்து அடிக்கல் நாட்டும் நிகழ்வு நிறுத்தப்பட்டு ஏற்பட்டாளர்கள் நீதிமன்றம் சென்றனர்.
திறந்த மன்றில் இந்த விடயம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நகரசபை சார்பாக சட்டத்தரணி என்.சிறீகாந்தா ஆஜாரானார். நினைவுத் தூபி அரச பணத்தில் கட்டப்படவுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களை நினைவுகூர எந்த சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.
பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று நினைவுத் தூபி அமைப்பதற்கு தடை விதிக்கக் கூடாது என அவர் மன்றில் விண்ணப்பம் செய்தார். இந்நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதவான் அன்றைய தினம் நகரசபைத் தவிசாளர் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.