இளங்குமரன் அல்ல! தமிழரசுக் கட்சியின் தவறான அணுகுமுறை!!
* 2015 இல் மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் பொய்யான விம்பம்...
* டொனமூர் காலத்திலிருந்து தேவைக்கேற்ப நகரும் கொழும்புத் தரகர் அரசியல்...
* முன்னணியும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் செய்ய வேண்டியது என்ன?
--- --- ---
தமிழர் பகுதிகளில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சில மக்களும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களும் தங்களின் அவசரத் தேவைகளுக்காக குறிப்பாக, பொலிஸ் மற்றும் நீதிமன்றப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, ஆளும் கட்சியின் தமிழ்ப் பிரதிநிதிகளை நாட வேண்டிய சூழல் வலிந்து உருவாக்கப்படுகிறது.
இது இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல, மிகத் தவறானதொரு அணுகுமுறையை டெனமூர் காலத்தில் இருந்து வரலாறு அப்படித்தான் தமிழர்களுக்கு கற்பிக்கிறது.
அதாவது, தமிழ் தேசிய நீரோட்டத்தையும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் நியாயத்தையும் சிதைப்பதற்காகக் கொழும்பு அரசாங்கங்களால் காலத்துக்குக் காலம் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாயக் கருவி தான், இந்தச் சலுகை - நிவாரண அரசியல்.
பேரினவாத சிங்களக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகள் காட்டும் "நீதி வழங்கும் அரசு" என்ற பிம்பம் முற்றிலும் போலியானது.
சிங்கள அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள், தங்கள் சொந்த அரசியல் வாழ்வை நீடிப்பதற்கும், கொழும்பு அரசாங்கங்களின் சர்வதேசப் பிம்பத்தைக் காப்பாற்றுவதற்கும் நடத்தும் ஒரு நாடகம் அது.
மாறாக, தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் உண்மையான விடிவோ அல்லது அரசியல் நீதியோ அல்ல என்பதுதான் வரலாற்று உண்மைகள் மூலம் நிரூபணமாகின்றது.
தமிழ் மக்கள் மத்தியில் "சிங்களவர்களின் முகவர்கள்" என்று அழைக்கப்படும் இப்பிரதிநிதிகளின் இத்தகைய அணுகுமுறைக்கு பின்னால் ஆழமான சுயநல அரசியல், பொருளாதாரக் காரணங்கள் மற்றும் தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகளின் மூலோபாயத் திட்டங்கள் ஒளிந்துள்ளன.
தேசியக் கட்சிகளில் இருக்கும் தமிழ் பிரதிநிதிகள், தங்களை "நடைமுறைவாத அரசியல்வாதிகள்" என்று காட்டிக்கொள்வதன் மூலமே தங்களது அரசியல் இருப்பை மக்கள் மத்தியில் நியாயப்படுத்த முற்படுகின்றனர்.
தமிழ் தேசியக் கட்சிகளால் தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியாது. அவர்களிடம் நிதியும் இல்லை.
இதனால், ஆளும் தரப்புடன் இணைந்து செயற்படுவதன் மூலமே மக்களுக்குத் தேவையான உடனடி உதவிகள், வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்திகளைப் பெற்றுத்தர முடியும் என்பது இவர்களின் முதன்மையான வாதமாக உள்ளது.
நீண்டகால அரசியல் தீர்வையோ அல்லது தமிழ் தேசிய உரிமைகளையோ முன்னிலைப்படுத்துவதை விடுத்து, மக்களின் அன்றாடப் பொருளாதார வறுமையையும், போரினால் ஏற்பட்ட தேவைகளையும் மூலதனமாக்கி "சலுகை அரசியலை" தமிழ்ப் பிரதிநிதிகள் அதாவது சிங்களக் கட்சிகளின் முகவர்கள் முன்னெடுக்கின்றனர்.
சிங்களத் தலைமைகளின் நம்பிக்கையைப் பெற்று தங்களின் பதவிகளையும் சலுகைகளையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்ற பிம்பத்தை இவர்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கட்டியெழுப்ப வேண்டும் என்பது கட்டாய விதி.
இதன் காரணமாகவே, பேரினவாத அரச கட்டமைப்பை ஒரு நேர்மையான, நீதி வழங்கும் அரசாகக் காட்டும் பிரச்சாரங்களை இவர்கள் முன்னெடுக்கின்றனர்.
இந்த உத்தியின் மிக முக்கிய அங்கமாக, தமிழ் மக்களின் பொதுவான போராட்டங்கள் மூலம் பெறப்படும் வெற்றிகளைத் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்த வெற்றிகளாக இவர்கள் சுய விளம்பரம் செய்து கொள்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட பாடகர் ஒருவர், தமிழ் மக்கள், பொது அமைப்புகள் மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளின் தொடர் குரல் கொடுப்புகள் மற்றும் போராட்டங்கள் காரணமாகவே பிணையில் விடுதலையானார்.
ஆனால், அநுரவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் யாழ் தமிழ் உறுப்பினர்கள், அக்கைது விடுதலையைத் தங்களது அரசாங்க அதிகாரத்தின் மூலம் சாதித்ததாக உரிமை கொண்டாடுகின்றனர்.
"தமிழ்த்தேசியக் கட்சிகள் கூக்குரல் மட்டுமே போடுவார்கள், ஆனால் ஆளும் கட்சியில் இருக்கும் எங்களால் தான் காரியங்களைச் சாதிக்க முடியும்" என்ற தவறான கருத்தியலை மக்கள் மத்தியில் விதைப்பதே இதன் நோக்கமாகும்.
இத்தகைய "கொழும்பு முகவர்களின்" அரசியல் உத்திக்கு மிகக் கிட்டிய உதாரணமாக...
2020 இல் அங்கஜன் இராமநாதன் முன்னெடுத்த அதே சலுகை அரசியலை, தற்போது இளங்குமரன் மிக இலாவகமாகக் கையாண்டு வருகிறார்.
தமிழ் மக்களின் போராட்டக் காலப் பாடல்களைத் தங்களது தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்திய வரலாற்று முரண்பாடுகளும் அரங்கேறியுள்ளன.
எனவே, இத்தகைய அணுகுமுறைகள் தமிழ் அரசியல் பரப்பிற்குப் புதியவை அல்ல.
விரும்பியோ விரும்பாமலோ, பேரினவாத சிங்கள அரசியல் கட்சிகளின் தமிழ் பிரதிநிதிகளிடம் சலுகைகளையும் உதவிகளையும் பெற வேண்டிய கட்டாயத்திலுள்ள மக்களுக்கு இதன் பின்னாலுள்ள உண்மை தெளிவாகவே தெரியும்.
இருப்பினும், தமிழ் மக்கள் தங்களது அரசியல் அபிலாசைகளாக வெறும் சலுகைகளையும் தற்காலிக நிவாரணங்களையும் மட்டும் எதிர்பார்க்கவில்லை,
ஆனால், தற்போதைய ஒடுக்குமுறைச் சூழலில் அவர்களால் அது குறித்துப் பகிரங்கமாக உரத்துப் பேச முடிவதில்லை.
மக்கள் வெறும் சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்திருந்திருந்தால் பெரும் உயிரிழப்புகளையும் பேரழிவுகளையும் ஏற்படுத்திய 2009 இறுதிப் போருக்குப் பின்னர், 2010 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் அமோகமாக வாக்களித்திருப்பார்களா? இல்லையே?
2015 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியால் "நல்லாட்சி" என்று மார்தட்டப்பட்ட மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் காலப்பகுதியில்தான், ஈழத்தமிழர்கள் வரலாற்றில் ஆகப் பெருமளவில் ஏமாற்றப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சியே இணை அனுசரணை (Co-sponsorship) வழங்கியது.
இதன் மூலம், போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களையும் கொதிநிலையையும் தணித்து, “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பைக் காப்பாற்றும் கேடயமாக இவர்களே செயற்பட்டனர்.
அந்த நல்லாட்சி என்று சொல்லப்பட்ட காலத்தில்தான், திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியிலான தமிழ் இனவழிப்புச் சம்பவங்களுக்குப் பின்வரும் வடிவங்களில் மாற்ற முடியாத சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது.
அவை பின்வருமாறு--
1) வடக்கு-கிழக்கில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்புடன் பௌத்த-சிங்களக் குடியேற்றங்கள் 80 வருடங்களாக இடம்பெற்றிருந்தன.
ஆனால், கொழும்பு ஒற்றையாட்சி அரசின் கருவிகளான தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளப் பாதுகாப்புத் திணைக்களம், காணி அபிவிருத்தித் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் மூலமாக, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவை சட்டப்பூர்வமான சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்படும் வேலைத்திட்டங்கள் 2015 இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன்.
2) மிகக் குறைந்தபட்ச அதிகாரப்பரவலாக்கமாக கருதப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், 2017 இல் கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டத் திருத்தங்களின் மூலம் காலவரையறையின்றி நிரந்தரமாக முடக்கப்பட்டன.
3) 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விப் பாடத்திட்டத்தின் கீழ், தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமய வரலாறுகள் மேலும் திரிபுபடுத்தப்பட்டுப் புகுத்தப்பட்டன.
ஈழத்தமிழர்களின் சுயமரியாதையையும் பூர்வீகத்தையும் பறைசாற்றும் 'யாழ் இராச்சியம்' போன்ற மிக முக்கிய வரலாற்றுப் பகுதிகள் பாட நூலில் இருந்து நீக்கப்பட்டு நான்கு வரிகளாக மாத்திரம் சுருக்கப்பட்டன.
4) 2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட க.பொ.த (உயர்தரம்) அரசறிவியல் பாடத்திற்கான ஆசிரியர் கைநூலில், 1987 ஆம் ஆண்டு உருவான 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர், இலங்கை அரசியலமைப்பு 'சமஷ்டி' (Federal) ஆட்சியாக மாறிவிட்டது என்ற பொய் வரலாறு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
5) 2017 ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரியக் கிராமமான 'கொக்கச்சான்குளம்' என்பது, 'கலாபோகஸ்வெவ' என்ற சிங்களப் பெயருக்கு உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.
6) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சில தலைவர்களால் "இலங்கையின் நெல்சன் மண்டேலா" என்று வர்ணிக்கப்பட்ட அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2018 ஒக்டோபர் மாதம் அரசியல் சாசனத்திற்கு முரணானக, மகிந்தவை இரவோடு இரவாக அழைத்து பிரதமர் பதிவியை வழங்கினார். 52 நாட்கள் நீடித்த அரசியல் பனிப்போரைத் தோற்றுவித்தார்.
7) 2010 இல் மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது சட்டவிரோதமாகக் குடியேற்றப்பட்ட 3,500 சிங்களக் குடும்பங்களுக்கும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே சட்ட ரீதியான காணி உறுதிப்பத்திரங்கள் (Land Deeds) வழங்கி வைக்கப்பட்டன.
ஆகவே, இதற்கு துணைபோன தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக இழைத்து வரும் இத்தகைய வரலாற்றுத் தவறுகளே, இளங்குமரன் போன்ற கொழும்பு முகவர்களின் செயற்பாட்டுக்குப் பிரதான மூலங்கள்.
அத்துடன் சமகாலத்தில்---
1) தமிழரசுக் கட்சியில் எம். ஏ. சுமந்திரன் - எஸ். சிறிதரன் என்ற தலைமைத்துவ முரண்பாடுகள்..
2) தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தை நடத்த முடியாமல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை...
3) ஏனைய சில தமிழ்த்தேசிய கட்சிகளின் உள்ளக நெருக்கடிகள்.
4) தனிநபர் மோதல்கள்- ஊசியின் மலினப்பட்ட - அர்த்தமற்ற வெற்று உரைகள்...
இவை எல்லாமே சேர்ந்த மிகத் தவறான கலவைதான், தமிழ் தேசிய அரசியலின் தற்போதைய பின்னடைவுக்குக் காரணம்...
இப் பலவீனமே, ஜே.வி.பி யை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி வடக்கு-கிழக்கில் மிக எளிதாக எட்டு நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதற்குக் கம்பளம் விரித்துக் கொடுத்தது எனலாம்.
எனவே, பாரம்பரியக் கட்சி என்றும், பழம்பெரும் கட்சி என்றும் தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்ளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, இனிமேலாவது பின்வரும் இரண்டு தெளிவான பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
A) ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை (Right to Self-Determination) முதன்மைப்படுத்தி, தமிழ் தேசியக் கோட்பாட்டுக்கு விசுவாசமான அரசியலில் ஈடுபட வேண்டும்.
இல்லையெனில், 1994 ஆம் ஆண்டிலிருந்து டக்ளஸ் தேவானந்தா கொழும்புடன் முன்னெடுத்த "இணக்க அரசியலை" (Pragmatic/Collaborative Politics) பகிரங்கமாகச் செய்ய முன்வர வேண்டும்.
அதை விடுத்து, கொழும்பு அதிகார வர்க்கத்திற்குப் பின்னாலோடி வலது கையையும், தமிழ் மக்களிடம் வந்து கொள்கை பேசி இடது கையையும் நீட்டும் இத்தகைய போலித்தனமான இரட்டை வேட அரசியல் முற்றிலும் அபத்தமானது.
தமிழ் மக்கள் மத்தியில் இவர்களின் இந்த ஏமாற்று அரசியல் தற்போது அம்பலப்பட்டுள்ளது.
B) தமிழரசுக் கட்சித் தலைமைகள் உடனடியாகத் தங்களைத் தன்னடக்கம் செய்து, கொள்கை ரீதியாக மாற்றியமைக்க வேண்டும்.
இல்லையேல், தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அவர்கள் முற்றிலும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
முறையான அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தினாலேயே, சில தகுதியற்றவர்கள் ஈழத்தமிழர் அரசியலில் புகுந்து விளையாடுகிறார்கள்..
அதேநேரம், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக 2010 இல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி "சுயநிர்ணய உரிமை" என்ற ஒற்றைக் கோட்பாட்டைத் தாரக மந்திரமாகக் கொண்டு, மக்கள் மத்தியில் இன்னும் அதிக வெளிப்படைத் தன்மையுடனும், தெளிவான மூலோபாயங்களுடனும் தங்களது அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக முன்னாள் விடுதலை இயங்கங்களுக்கும் இது பொருந்தும்...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.