என்று எழுதப்போகின்றேன் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
உனது “சொத்து, சுகம், சுகவீனம், மருத்துவம், குடும்பத் தகராறு, கடன்...... போன்றவை பற்றி பிறருக்கு எதுவும் கூறாதே” என்கின்றது தர்மசாஸ்திரம்.
தர்மசாஸ்திரம் கூறுவது உண்மை என்றாலும், தர்மசாஸ்திரத்தின் கூற்றுக்கு மாறாக இங்கு ‘எனது கடன்” பற்றி........
4-5 வருடங்கள் முன்பு, நாட்டில் கொரொனா, அதனைத் தொடந்து பொருளாதார வீழ்ச்சி என்று வந்த போது, கடலில் உழைத்து சேமித்த காசை, வங்கியில் வைத்திருந்தால் மதிப்பு இழந்துவிடும் என நினைத்து, இருப்பில் இருந்த காசையும் மீறி, ஒரு சொத்தை வாக்கினேன் - உழைக்கலாம் தானே என்ற நினைப்பில்.
அவ்வாறு வாங்கிய பின்னர், 2 வாரம் (சம்பளம் இன்றி) கொழும்பில் தாஜ் ஹோட்டலில் கொரோனோ காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்துவிட்டு, காலியில் கப்பல் ஏறச்சென்றேன். என்னை ஏற்ற என்று கப்பல் காலிக்கு வந்து கொண்டிருக்கிறது, நானும் காலி துறைமுகத்துக்குள் காத்துக் கொண்டிருக்கிறேன்.
Covid Test results “இந்தா வருது, இந்தா வருது” என்று கடைசிவரை வரவில்லை. (பிரபல வைத்தியசாலையில் குறித்த உபகரணத்தில் கோளாறு)
கப்பல் ஒனர் “No Results – No Joining” என்று விட்டார். வெறுங்கையுடன் வீடு.
கப்பல் மீண்டும் ஏறுவதில் சிக்கல். ஒரு சில நாடுகளில் மட்டுமே கப்பல் ஏறுவதற்கு அனுமதி, விசாக்கள் எடுப்பதில் சிக்கல், விமான போக்குவரத்துக்களும் சரியாக இல்லை.
மீண்டும் ஒரு கப்பல் சரிவர, நாளை அமெரிக்காவின் சவன்னாவுக்கு ஃப்ளைட். அப்பலோசென்று Covid க்கு இரத்த மாதிரி கொடுத்தேன்.
நாளை புறப்பட வேண்டும் என்பதால், போனை ஆஃப் செய்துவிட்டு இரவு தூங்கிவிட்டேன். காலையில் எழும்பி Phone ஐ ஒன் செய்தபோது, பட பட என்று Whats App inbox நிரம்புகின்றது. தட்டிப்பார்த்தபோது தூக்கிவாரிப் போட்டது. “எனக்கு கோவிட் என்றும், அறையில் தனிமையாக இரு, பிஎச்ஐ விரைவில் வருவார்கள் என்று அறிவிப்புக்கள்.
பிஎச்ஐ வந்தார்கள், தனிமைப்படுத்தலுக்கு செல் என்றார்கள். எனது சொந்த செலவில் பம்பலப்பிட்டியில் ஒரு ஹோட்டலில் 2 வாரம் தனிமைப்படுத்தல்.
தனிமைப்படுத்தல் முடிய, எனது Certificate காலாவதியாக 5 மாதங்கள் மட்டுமே இருந்தது.
இனிமேல் கப்பல் வாய்ப்பு சரியாக அமைந்து, Covid test, Flight எல்லாம் சரிவர 1-2 மாதங்கள் எடுக்கும். ஆகவே Certificate ஐ புதுப்பிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை.
நான் படித்தது இந்தியாவில். இந்தியாவுக்கு அப்போது விசா இல்லை.
ஆனாலும் கொரோனா நிலைமை கருதி இந்தியா Online வசதி கொடுக்க, Certificate ஐ புதுப்பித்தேன்.
இவ்வாறு இழுபட்டதில், கப்பல் மீண்டும் ஏற 8 மாதங்கள் எடுத்தது.
கப்பல் காரர்களை பொறுத்தமட்டில் - Captain என்றாலும் சரி கடை நிலை மாலுமி என்றாலும் சரி, கப்பல் ஏற ஆயுத்தம் செய்த பின்னர், காலம் பிந்த பிந்த கழுத்துக்கு கயிறு தான். (ஒரு சிலர் விதி விலக்காகக் இருக்கக்கூடும்)
என் கடனின் பிள்ளையார் சுழி இங்குதான் ஆரம்பம்.
இருந்த கடனை அடைக்க முன்னர், வெளிநாட்டில் உள்ள நெருங்கிய நண்பர் ஒருவர், நாட்டில் உள்ள சொத்து ஒன்றை விற்று, காசை அனுப்பும்படி கேட்டார்.
“விற்பது பிரச்சனை இல்லை. காசை அனுப்புவதில் தான் பிரச்சனை”, சொத்தை நான் பின்னர் விற்றுக்கொள்கிறேன். காசை உனக்கு மாதா மாதம் கப்பல் சம்பளம் வழியாக அனுப்புகிறேன்” எனக்கூறி, அவ்வாறு அனுப்ப ஆரம்பித்தேன் - முடிவு என் கடனின் இறுக்கத்தைக் மேலும் கூட்டியது.
இதற்கிடையில் “பறவை வளர்ப்பு” என்னும் எனது சிறு வயது ஆசை. கடந்த சில வருடங்களில் பெரிதாகிக் கொண்டேயிருந்து, அது நகையை அடகு வைத்து வாங்குமளவுக்கு மனைவிக்கும் தொற்றியது.
இருக்கத்தின் மத்தியில், பறவை வளர்ப்புக்கு நல்ல ஒரு காணி தேடிக்கொண்டிருந்த நிலையில் – அவ்வாறு காணி ஒன்றும் தேடிவர – காணியையும் வாங்கினேன்.
இறுக்கத்தின் உச்சக் கட்டம். பராசக்தியில் சிவாஜிகணேசனின் “ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” போல், நானும் காசைத் தேடி ஓடினேன்.
கடல் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு கப்டன் கூறினார், “வாழ்க்கையில் பணம் சார்ந்து ஒரு Commitment இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று”. அற்புதமான அறிவுரையை பல வருடங்களாக உழைக்கும் போது தவறவிட்டு விட்டேன்.
30 வருடம் தடையின்றி உழைத்தேன் - Commitment என்று எதுவும் வைத்திருக்காமல்.
மாறாக கடந்த 2-3 வருடங்களில் பல Commitment களை ஒரு சேர தலையில் போட்டேன். கடனுக்கு ஆளானேன்.
சொல்லிக்காட்ட விருப்பமில்லை. ஆனால் இப்பவும் சொல்லவில்லை என்றால் எப்பவுமே சொல்ல முடியாது.
கடந்த முறை லீவில் நின்றபோது, கொழும்பிலிருந்து ஊருக்கு காரில் போய்வர பெட்ரோல் 24000/-, பஸ்ஸில் போனால் 5200/- என்று கணக்கு பார்த்து, 2 தடவைகள் பஸ்ஸில் தான் போய் வந்தேன்.............இதுபோல் அதிகம். ஆனாலும் தொடர்வது அழகல்ல.
கப்பல்காரர்கள் பெரிதும் தொங்குவது Business என்று ஏதாவது செய்ய வெளிக்கிட்டுதான். அதுவும் மற்றவர்களால் உந்தப்பட்டு.
“எவ்வளவு காலம் தான் கப்பலில் வேலை செய்து கொண்டிருக்கப் போகிறாய் ஏதாவது Business செய்யலாம் தானே” என்பார்கள் சிலர். சிலர் ஒரு படி மேல் சென்று “என்னுடன் கூட்டுசேர்” என்பார்கள்.
நான் இடைநிலை அதிகாரியாக இருந்த போது, கப்டன் ஒருவர் கூறினார், “Third Mate, We Seaman do not know anything about of Business, Never ever try Business in your life, if you do, at the end, Your money will be at Some ones hand”. இது பல கப்பல்காரர் வாழ்க்கையில் நடந்துள்ளது.
இதில் கவனமாக இருந்த நான், Passion என்று, பறவை வளர்ப்பில், சிறு கோட்டையை விட்டுவிட்டேன்.
பறவை வாங்குவதிலும் “Business” தான் இருக்கின்றது என்பதை அறிய வரவும் - இழப்பு பல லட்சங்கள்.
“பறவை வாங்கியதில் நாங்கள் ஏமாற்றப்பட்ட விடயங்களை ஒரு புத்தகமாக எழுதலாம்” என்றாள் எனது மகள்.
பறவை வாங்கியதில்,
இழப்பு - பணம் என்றாலும்,
வருவாய் – மிகப் பெரிய அனுபவம்.
முக்கியமாக மனைவி, பிள்ளைகளுக்கு.
என் கடனை ஈடுகட்ட, காசு தேவையை பூர்த்தி செய்ய, முதலில் வங்கிகளைத்தான் நாடினேன். “சாத்தியமில்லை” என்று சத்தியம் செய்து விட்டார்கள். ஏன் என்றால் “எனது கணக்கில் இருப்பு இல்லையாம்”.
“இவ்வளவு காலமும் கோடிக் கணக்கில் உங்கள் வங்கிகளுக்கு தானே பணம் அனுப்பினேன்” என்றேன். அதற்கு அவர்கள் “அது சரி, தற்போது இருப்பு ஒன்றும் இல்லையே” என்றார்கள்.
(வங்கிகள் மற்றும் இத்துறை சார்ந்தவர்கள் பற்றி இன்னொரு பக்கத்தில் எழுதுகின்றேன் – இவர்களுடனான அனுபவங்களும் அதிகம்)
ஊரில் நண்பன் ஒருவனிடம், “காசு பிரச்சனை, கொஞ்சம் மாறித் தருகிறாயா, வட்டியுடன் தருகிறேன்” என்று 2, 3 முறை கேட்டேன்.
இன்று வரை அவன், நான் கூறியதை நம்பவேயில்லை. பகிடி என்று நினைக்கிறேன் இதுதான் என் போன்றவர்களை, குறிப்பாக கப்பல்காரர்களை சுற்றியிருக்கும் மிகப்பெரிய ஆபத்து.
சரி வங்கிகள் சரிவரவில்லை என்று வட்டிக்கு விடுபவகளிடம் கேட்க முனைந்தேன். அப்போதுதான் தெரிந்தது, “ஊரில் இவர்களுமா வட்டிக்கு விடுகிறார்கள்” என்று. அதுவும் மாத வட்டி 3 – 4 வீதம்.
சிலரிடம் நேராகவும், நண்பர்கள் மூலமும் கேட்டேன். “நான்” என்றவுடன் “நோ” சொல்லிவிட்டார்கள் – இங்கும் சறுக்கல் தான்.
கொழும்பில் ஒருவர், (எங்கள் lane இலேயே பெயரளவில் வேறு வேலை செய்பவர்) “வீட்டை எழுதித்தந்தால் மாதம் 4 வீத வட்டிக்கு 40 லட்சம் தரலாம்” என்றும், குறித்த திகதியில் வட்டியுடன் முதலை கட்ட முடியவில்லை என்றால் – வீட்டை விற்று தனது காசை எடுப்பார் என்று எழுத வேண்டும்” என்றார்.
அதாவது ஒருவேளை 40 லட்சம் என்னால் திருப்பிக்கொடுக்க முடியாது போனால் – எனது 4 கோடி வீடு அவருக்கு.
ஊரில், யாழில் இவ்வாறு காணிகளை வீடுகளை இழந்தவர்கள் அதிகம். எனது சிறிய தாயாரும் ஒருவர். வெறும் 95,000 ரூபாவுக்கு அம்மன் கோவிலடியில் உள்ள தனது வீட்டை இழந்தார்.
“ஏன் உறவினர்களிடம் கேட்டிருக்கலாம் தானே” என்று நீங்கள் நினைக்கக்கூடும். கைமாத்தாக கேட்க எனக்கு விருப்பமில்லை. வட்டியுடன் காசை எனக்குத் தர உறவினர்கள் சங்கடப்படுவார்கள். ஆகவே தவிர்த்து விட்டேன். மற்றயது “உறவுக்குப் பகை வட்டியில்லாத கடன்”.
நிலைமை இறுக, சக கப்டன் ஒருவரிடம் கேட்டேன். “அண்ணா நானும் இறங்கி கன காலம், இன்ன இன்ன பிரச்சனை காரணமாக எனக்கும் பண பிரச்சனை, நகை தான் அடகு வைத்துள்ளேன், தேவை என்றால் சில நகை தருகிறேன் அடகு வையுங்கள்” என்றார் – கப்பல்காரர் வாழ்க்கை.
இப்போது ஓரளவு இறுக்கம் தணிந்துள்ளது. ஆனாலும் இன்னும் முற்றாக தளரவில்லை.
என்னை இப்பக்கத்தை எழுத, உழைச்சலை தந்த விடயத்துக்கு வருகின்றேன்.
என்னை சந்திப்பவர்களில் பலர், இரண்டு விதமான உதவிகள் கேட்பார்கள். ஒன்று “காசு”, மற்றயது “கப்பல் சான்ஸ்”.
வசதி இருந்தால், மனம் இருந்தால், தேவையானவர்களுக்கு உதவ வேண்டும். எங்களைப் போன்ற சமுதாயம் முன்னேற இதுவும் ஒரு படி முறைதான்.
Chess Grand Master விஸ்வநாதன் ஆனந்த், வெற்றியின் உச்சத்தில் இருந்த போது, பாடகர் S P பாலசுப்ரமணியத்தை ஒரு முறை தற்செயலாக சந்திதாராம்.
அவ்வாறு சந்தித்த பொழுது, “நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில், ஒரு பொது நிகழ்வுக்கு உங்களிடன் உதவி கேட்டு வந்த போது, நீங்கள் உதவினீர்கள்’ என்றார். அதற்கு பாலசுப்ரமணியம் அவர்கள் சிரித்துக்கொண்டு, “அப்படியா எனக்கு ஞாபகம் இல்லை” என்றாராம்.
எங்கள் அயல் வீட்டு உறவினர் - கண்டன் ஆச்சியின் பூட்டான், சுமார் 15 வருடங்கள் முன்பு, மலேசியாவில் படித்துக் கொண்டிருந்த போது என்னை Port Klang துறைமுகத்தில் சந்தித்தான்.
வருடங்கள் கழிந்து, சில வருடங்கள் முன்பு சென்னையில் அவனை மீண்டும் சந்திதேன். படித்ததற்கு ஏற்ப வேலை செய்து கொண்டிருந்தான். வாழ்த்தினேன்.
“படிப்பை முடிப்பதற்கு நீங்கள் செய்த உதவியையும் மறக்க முடியாது” என்றான்.
எனக்கு அவ்வாறு ஏதும் உதவிகள் செய்தது ஞாபகம் இருக்கவில்லை.
“என்ன மறந்து விட்டீர்களா, மலேசியாவில் Port Klang துறைமுகத்தில் கப்பலுக்கு உங்களைப் பார்க்க வந்த போது, XXX டொலர்கள் தந்தீர்கள்” என்றான். அப்பொழுதுதான் “ஏதோ கொடுத்தேன்” என்று ஞாபகம் வந்தது - இது ஒரு உதாரணம் தான்.
நான் கடந்த 14 வருட காலமாக இயக்கும் இணையதளத்துக்கு செலவழித்தவை அதிகம். இதனால் இன்றும் இலவமசமாக பலர் பயன் அடைகிறார்கள்.
“மரண அறிவித்தல், விளம்பரங்களுக்கு பணம் அறவிடு” என்று பலர் வற்புறுத்தியபோதும், “சேவை என்று தொடங்கி விட்டு தேவை என்று மாறக் கூடாது” என்பதே என் பதிலாக உள்ளது.
நான் உழைப்பதில் ஒரு சிறு பங்கு Charity க்கு, கடந்த 30 வருடத்துக்கும் மேலாக. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜீவன்கள் சில உள்ளடங்கலாக.
எனது மனைவி கூறுவார், “நீங்கள் வெளியில் கொடுத்த காசுக்கு, ஒரு பிளாட் அல்லது கார் வாங்கியிருக்கலாம்” என்று. “அட அப்படி வாங்கியிருக்கலாம் தானே” என்று வருந்தியது இல்லை.
Charity என்று கொடுத்துக் கொண்டு, அதனை போட்டோ, காணொளி என்று காட்சிப்படுத்துவதை நான் விரும்புவதில்லை, ஒரு சில இடங்கள் தவிர்த்து.
ஆனாலும் கடந்த நாட்களில், அவ்வாறு உதவி கேட்பவர்களால் எனது இன்றைய நிலமையை புரிந்து கொள்ள முடியவில்லை. விளங்கப்படுத்தவும் முடியவில்லை.
“கப்பல்காரர்கள் கப்பலில் நிற்கும் போது பண மீட்டர் உயரும் என்றும், கப்பலால் இறங்கி வரும் போது பாக்கெட் நிரம்பியிருக்கும்” என்றும் பலரும் தவறாகக் கணிக்கிறார்கள்.
4 மாதம் கப்பலில் நின்றால் “4 மாதம் X மாதச் சம்பளம்” என்று தான் கணிக்கிறார்களே தவிர – கப்பல்காரருக்கும் பிரச்சனைகள் இருக்கும் என்பதை பலரும் உணர மறுக்கிறார்கள்.
இதற்கு நாங்களும் ஒரு காரணம். வலிகளை மறைத்து, மறந்து, சமூக வலைத்தளங்களில் கப்பலில் நின்று கொண்டு ஈபிள் டவர், சீனப் பெருஞ்ச்சுவர், கப்பலில் பார்ட்டி என்று போஸ்ட் கள் போடுவது.
இவற்றை விட கஷ்டத்தில் உதவியதிலும் வலிகள்.
அண்மையில் தந்தையார் அற்ற, நெருங்கிய நண்பர் ஒருவரின் மகளுக்கு திருமணம் என்று – எனது மனைவியின் மீதம் இருந்த நகைகளை அடகு வைத்து, 5000 அமெரிக்க டொலர்களுக்கு தங்க வளையல்கள் செட் அனுப்பி வைத்தேன்.
ஆனால் திருமணத்தின் போது குறித்த வளையல்கள் அணிவிக்கப்படவில்லை. காரணம் “மற்ற நகைகளுடன் மச் ஆகவில்லையாம்” – வலி
கடந்த இந்திரவிழாவின் போது, நான் சார்ந்த ஒரு அமைப்பு நிதியுதவி கேட்டார்கள், எனது நிலமையை, அப்போது என்னால் கொடுக்கக் கூடியதை குடுத்தேன். “என்ன இவ்வளவுதானோ” என்றார்கள் – வலி
இவ்வாறான வலிகளும் கடனை கடந்து செல்கின்றன.
Trust, Foundation, சமூக உதவித் திட்டம் என்று திடீர் என்று, சிலர் உதவி செய்ய வெளிக்கிடுவார்கள். என் போன்றவர்களை கேட்பார்கள்.
ஏற்கனவே உதவிகள் செய்து கொண்டிருக்கும் என் போன்றவர்கள் இவ்வாறானவர்களுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அவ்வாறு மறுக்கும் போது, “இல்லாதாவன் கொடுக்கிறான், இருக்கிறவன் இல்லை என்கிறான்” என்று கண்ணதாசான் ஆகின்றார்கள்.
வாட்ஸ் ஆப் குழுமங்களை உருவாக்குவது, காசு கேட்பது , கொடுக்கவில்லை என்றால் குத்திக்காட்டுவது – நண்பராகளே இதை தவிருங்கள். நீங்கள் உதவமுனைந்தால் - முடிந்தால் நீங்கள் உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கொடுங்கள். இதுவே போதும்.
முடிவாக, காசு உள்ளவர்களுக்கும் கடன் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், குறிப்பாக என் போன்ற மாலுமிகளுக்கும். கப்பலில் பண உழைப்பது என்பது மிகவும் சவால்கள் நிறைந்தது. நவீன உலகின் அழுத்தங்கள், வர்த்தக்கத்தின் வேகம், பாரிய கப்பல்கள், குறைந்த மாலுமிகள்.... என சொல்ல முடியாத சவால்கள்.
மறுபக்கம் நாம் கப்பலில் நிற்கும் போது மனைவி, பிள்ளைகள் தனியாக வாழ்க்கையை நகர்த்த கடினமான பாதை.. கடந்த முறை கப்பலில் - என் கடனுடன் நின்ற போது, மனைவிக்கு திடீர் சத்திர சிகிச்சை, மகள் கல்வியின் பாதையை மாற்ற வேண்டிய மிக மிக இக்காடான தருணம். அனுப்பிய காசை ஒரு பகுதி கடனை அடைத்து, மாதக் கடைசியில் சம்பளத்துக்கு காத்திருக்கையில் திடீர் சத்திர சிகிச்சைக்கு கை மாற வேண்டிய சூழ்நிலை - எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிக மோசமான ஒரு துன்பவியல் நிகழ்வு. மேலும் சத்திர சிகிச்சை நான் இன்றி......... எங்கு உழைப்பது என்றாலும் சாவால்கள் நிறைந்தது கடினமானவை. ஆனாலும் கப்பலில் உழைப்பது என்பது ஒரு படி கடினம்.
சக மாலுமிகள் சார்பாக.
கப்டன் அ. ஆதவன்
TP – 00 94 777 64 99 55 (Viber,Whatsapp)
Email - marinerathava@yahoo.com
Face book – athiroobasingam.athavan
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
T. Senthan (Sri Lanka)
Posted Date: January 12, 2026 at 07:12
நண்பா ஆதவா,
பாம்பின் காலை பாம்பு அறியும்.
இளவயது கனவு, தொழில் முயற்சி, தொழிலில் ஏமாற்றமடைதல், கடன், நகை அடவு, நன்கொடை கேட்பவர்கள், மனைவியின் சத்திர சிகிச்சை, அதற்கு செல்லமுடியாத நிலை, பிள்ளைகளின் படிப்புச் செலவு......
கப்பலில் வேலை செய்பவர்களிற்கு மட்டுமல்ல,
யாழ்ப்பாணத்தில் தொழிற்சாலை வைத்திருப்பவர்களிற்கு மட்டுமல்ல,
அபிவிருத்தியடைந்த நாடுகளில் பெரிய தொழிலதிபர்களாக இருப்பவர்களிற்கும் பொதுவான விடயங்கள் தான்.
யாழ்ப்பாணத்தில் சொந்தமாக ஆரம்பித்த தொழிற்சாலையினால் எற்பட்ட ஒரு சில மில்லியன் இலங்கை ரூபா கடனை அடைப்பதற்காக அபிவிருத்தியடைந்த நாடொன்றின் நவீன தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு வந்தால் இங்கு வெள்ளைக்கார தொழிலதிபர் பல மில்லியன் டொலர் கடனுடன் வாழுகிறார்.
கடன் ஆரம்பத்தில் கலக்கமாகத்தான் இருக்கும்.
போகப்போக பழகிவிடும்...
தி. சேந்தன் BScEng
Kulam (Greece)
Posted Date: December 21, 2025 at 17:27
இந்த அனுபவம் எனக்கும் உண்டு நானும் மாலுமிகள்
33 வருடமாக
I. Thurailingam (UK)
Posted Date: December 19, 2025 at 20:37
இங்கும் அதே நிலமை. ஏன் பொதுவாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இதே நிலமைதான் என்று சொன்னால் மிகையாகாது. அண்மையில் Rich dad Poor dad என்ற புத்தகம் வாசிக்க நேரிட்டது. எங்களின் mindset யாழ்ப்பாணத்தவர்கள் செய்வதையே திரும்பத் திரும்ப செய்யும் hard wiring அமைப்பை உடையது. அதாவது அனேகமான யாழ்ப்பாணத்து mindset பணக்காரனாக வருவதற்கான mindset அமைப்பு அற்றது. அங்கே பிறந்து அங்கே வளர்ந்தால் அந்த hard wiring வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருப்போம். என்ன செய்வது பழகிவிட்டோம் என்று திரும்பவும் அதையே செய்து கொண்டிருப்போம். குழந்தைகளும் எங்களைப் பார்த்து அதையே செய்வார்கள். இந்த mindset இல் இருந்து விடுபட வழி உண்டு. அதற்கு இந்த இடம் போதாது ....
S.Aravinthan (sri lanka)
Posted Date: December 19, 2025 at 16:05
இது பலரின் நிஜவாழ்க்கையின்"வெளிப்பாடு, துணிந்து இதனை எழுதியமைக்கு பாராட்டுக்கள். எல்லோரும் மற்றவர்களின் நிலமை அறிந்து செயல்பட நல்ல ஒரு சுயதரிசனம்.
S.kajenthiran (Srilanka)
Posted Date: December 19, 2025 at 14:01
நான் ஒரு 10 வருசமா கப்பலில் வேலை செய்கிறேன். என் மன பாரங்களை இறக்கி வச்சமாறி இருக்கு. நன்றி அண்ணா
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.