வல்வெட்டித்துறை நகரசபை 3 மாதங்கள் இடைநிறுத்தம் - ஒய்வு பெற்ற நீதிபதி அரியநாயகம் தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகரசபையில் கடந்த சில மாதங்களாக சபையின் தவிசாளருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
இதனை அடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் வல்வை நகர சபை செயற்பாடுகள் 3 மாதங்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நகரசபை கட்டளைச் சட்டத்தின் படி 184பிரிவின் பிரகாரம் நகரசபையை முடங்கச் செய்யும் வகையில் வாக்களித்தால் அல்லது வாக்களிக்காமல் விட்டால் அந்த நகரசபைக்குரிய முதலமைச்சர், நகரசபை மீது நடவடிக்கை எடுக்கமுடியும். அதற்கமைய வல்வெட்டித்துறை நகரசபையை இடைநிறுத்தி வைக்கும் முடிவை எடுத்துள்ளார். அதன் பிரகாரம் சபையின் தவிசாளர் மற்றும் சபைக்குரிய சகல கடமைகளையும் யாழ் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மேற்கொள்ளுவார் என்று வர்த்தமானி மூலம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சபையில் நடந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஒய்வு பெற்ற நீதிபதி க.அரியநாயகம் தலமையில் தனி நபர் விசாரணைக் குழுவையும் முதலமைச்சர் அமைத்துள்ளார். குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை 3 மாதங்களுக்குள் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட வேண்டும். சபையில் தவிசாளரை நீக்குவது அல்லது சபையின் உறுப்பினர்களை நீக்குவது அல்லது சபையைக் கலைப்பது என்ற ஏதாவது ஒரு முடிவு மேற்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்படுகின்றன.
3 மாத நகர சபை இடைநிறுத்தி வைக்கப்பட்டதை வல்வை நகர சபை தலைவர் திரு.ந. அனந்தராஜ் அவர்களும் எம்மிடம் உறுதிப்படுத்தினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.